.

Pages

Saturday, January 16, 2016

ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை !

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் பாவலர் திருக்குறள் மு.தங்கவேலனார். (வயது 69). பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகில் தேநீர் கடை நடத்தி வருகிறார். திருக்குறள் மீது கொண்ட பற்றினாலும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தியும் பல ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கி வருகிறார். இவ்வாண்டும் சனிக்கிழமை திருவள்ளுவர் தினத்தன்று ஐயாயிரத்திற்கும் அதிகமானோருக்கு ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கினார்.

பள்ளி சென்று படித்திராத இந்த மேதை அனுபவ அறிவின்மூலம் ஏராளமான நூல்களை படித்து தன் திறமையை மெருகேற்றிக் கொண்டவர். இவரது தேநீர் கடையிலேயே ஏராளமான நூல்கள் கொண்ட நூலகம் உள்ளது. தினமும் காலை ஒருமணி நேரம் மாணவர்களுக்கு திருக்குறள் பற்றிய வகுப்புக்களை எடுத்து அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார். பள்ளி சிறுவர்கள் முதல் ஆராய்ச்சி மாணவர்கள் வரை இவரது கடையில் எந்நேரமும் கூடி திருக்குறள் பற்றி விவாதிப்பது வழக்கம். திருக்குறள் பற்றிய தேடலில் உள்ளவர்களுக்கு இவரது தேநீர் கடை ஒரு வேடந்தாங்கல் என்றே சொல்லலாம்.

இவரது கடை வாசலில் அமைக்கப்பட்டுள்ள கரும்பலகையில் தினமும் ஒரு திருக்குறளை எழுதி அதன் பொருள் விளக்கம் எழுதிப் போடுவது வழக்கம். அதில் எந்த அதிகாரம் எத்தனையாவது குறள் என தெளிவாக குறிப்பிடுகிறார்.

குறும்பட இயக்குநர் கண்ணன் இவரைப்பற்றி ,"ஒரு ரூபாய் டீ' என்று ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். தேமுதிக தலைவர் விஜய்காந்த்
அண்மையில் கும்பகோணத்தில் நடைபெற்ற விழாவில் இவரது திருக்குறள் சேவையை பாராட்டி தங்கமெடல், நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளார். ரோட்டரி, லயன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் திருக்குறள் தங்கவேலனாரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கியுள்ளது குறிப்பிடக்தக்கது.
   
நவீன காலத்திற்கேற்ப சமூக வலைத்தளமான பேஸ்புக்கிலும் கலக்கி வருகிறார். இவரது thangavel vel, திருக்குறள் தி.கு.மு.தங்கவேலனார் என்ற முகநூல் பக்கம் இப்பகுதியில் மிகவும் பிரபலம். பலரும் இவரது முகநூல் பக்கத்தில் திருக்குறள் குறித்து விளக்கம் பெறுவதுண்டு. இப்பகுதி மக்கள் இவரை திருக்குறள் தாத்தா என்றும் இவரது கடையை திருக்குறள் தேநீர் கடை என்றே அழைக்கிறார்கள். பள்ளி சென்று முறையாக படித்திடாத பாவலர் தங்கவேலனார் பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும், நடுவராகவும் கலக்கி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

திருவள்ளுவர் தினத்தன்று நகரில்  பெரும்பாலான தேநீர் கடைகள், உணவகங்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கூட சளைக்காமல் காலை முதல் இரவு வரை வாடிக்கையாளர்களுக்கு பாவலர் தங்கவேலனார் தேநீர் வழங்கினார்.

திருக்குறளை பரப்புவதிலும், திருக்குறள் நெறிப்படி வாழ்வதிலும் ஈடுபாடு காட்டிவரும் பாவலர் தங்கவேலனாரிடம் கேட்டபோது, " பல ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கி வருகிறேன். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். இந்துக்களுக்கு பகவத் கீதை, இஸ்லாமியர்களுக்கு திருக்குர்ஆன், கிறிஸ்தவர்களுக்கு பைபிள் புனிதநூலாக உள்ளது. ஆனால் அனைத்து மக்களுக்கும் பொதுவான புனிதநூலாக போற்றத்தக்கது திருக்குறள். திருக்குறள் நம்மையும், சமூகத்தையும் வாழ்விக்கும் அருமருந்து. அதை நாம் நன்கு கற்றுணர்ந்து சமூகத்தை உய்விக்க வேண்டும்.
       
இன்று ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்குவதால் சில ஆயிரம் நட்டம் ஏற்படலாம். ஆனால் திருக்குறளை உலகிற்கு தந்த ஒப்பற்ற வள்ளுவன் பிறந்த தினத்தன்று என்னால் முடிந்த சேவையாகவே நினைக்கிறேன். உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களும், ஐக்கிய நாடுகள் சபையில் பணி செய்யும் தமிழர்கள் சிலரும் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன உதவியும் செய்ய தயாராக உள்ளதாக சொல்கின்றனர். எனக்கு பொருளாதார உதவிகள் தேவையில்லை. ஆனால் உலகப் பொதுமறை திருக்குறளை உலகெங்கும் கொண்டு செல்ல உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்பதே எனது வேண்டுகோள்" என்றார்.

திருக்குறள் சம்பந்தமான எந்த ஒரு விஷயம் குறித்தும் தெரிந்து கொள்ள இரவு பனிரெண்டு மணி என்றாலும் நான்தயார் என சொல்லும் தங்கவேலனாருக்கு சுவாசமே திருக்குறள் என்றால் மிகையில்லை. இந்த வயதிலும் இளைஞரைப் போல செயல்படும் தங்கவேலனார் பேராவூரணி திருக்குறள் பேரவையிலும் தன்னை இணைத்துக் கொண்டு செயலாற்றி வருகிறார்.
       
திருக்குறள் தங்கவேலனாரின் மனைவி மேனகா. குடும்ப தலைவியான இவர் கணவரின் ஆர்வத்திற்கு அணை போடாமல் அவருக்கு ஆதரவான பின்புலமாக இருக்கிறார். மகன் அகிலன் ஒலி பெருக்கி, ,அலங்கார மேடை அமைத்தல் தொழில் செய்து வருகிறார். மகள் ஜெயசித்ரா திருச்சியில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்குமே திருமணமாகி விட்டது.

செய்தி கட்டுரை: 
'நிருபர்' எஸ்.ஜகுபர்அலி, பேராவூரணி.
 

1 comment:

  1. வாழ்த்துககள் ஆனால் இதில் குர்ஆன் இஸ்லாமியர்களுக்கான புனிதநூல் என தெரிவிக்கப்பட்டுள்ளது அப்படியல்ல புனித குர்ஆன் பயபக்தியுடைய (உலக மாந்தர்) அனைவருக்கும் உரியதாகும். இதை திருக்குர்ஆனின் 2வது அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை வாசித்தாலே புரியும். http://www.tamililquran.com/qurandisp.php?start=2

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.