.

Pages

Saturday, January 30, 2016

தற்கொலைதான் தீர்வா ?

லக நல்வாழ்வு நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கின்றார்.

பெரும்பாலான தற்கொலைகள் அற்பக் காரணங்களுக்காகவே நடைபெறுகின்றன. தற்கொலை சாவு போர் சாவுகளை விட அதிகமானதாக கணக்கிடப் பட்டுள்ளது.

இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போகின்றது. கடந்த இருபது வருடங்களில் தற்கொலை நிகழ்வுகள் 3 விழுக்காடு மிகுந்துள்ளன. அதிலும் குறிப்பாக 15 முதல் 29 அகவைவரை உள்ளவர்கள் மிகுதியான அளவில் தற்கொலை செய்கின்றனர். தமிழகத்திலும் தற்கொலைகள் அதிக அளவில் நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் யாருக்குத் தோன்றுகிறது? என்று சிந்திக்கும் பொழுது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், மது, போதை மருந்துகளுக்கு அடிமையானவர்கள், குடும்பம்-தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் சிக்கல்களின் காரணமாக மன அழுதத்திற்கு ஆளானவர்கள், பொருள்நிலைச் சிக்கல்கள், வேலை வாய்ப்பின்மையால் சலிப்பு அடைந்தவர்கள், கடுமையான நோய் பீடித்தவர்கள், குறிப்பாகத் தனிமையில் வாடுபவர்கள் இவர்களிடமே தற்கொலை செய்யும் எண்ணம் மேலோங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவமானம், தேர்வில் தோல்வி, காதல், கடன் என்று சிறிய சிறிய சிக்கல்களைக் கூட எதிர்கொள்ள முடியாமல் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர். தற்கொலைக்கு பிறகு ஏற்படும் பாதிப்பு குறித்து இவர்கள் அறிவதில்லை. ஒருவர் செய்து கொள்ளும் தற்கொலையால் குடும்பத்தினர் மற்றுமின்றி நண்பர்கள், சுற்றியுள்ளவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.

தீர்வு:
பெருகி வரும் தற்கொலைகளை தடுப்பதற்குரிய வழிவகைகளை ஆராய வேண்டும்.பிள்ளை வளர்ப்பு என்பது மிக முக்கியமான ஒரு கடமையாகும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல அடிப்படை உறவு வேண்டும்.

தோழமையான உறவை சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் உறுவாக்கி அது வளர வளர மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் பெற்றோரை ஒரு பிள்ளைகள் நண்பர்களாக கருத முடியும். இதனால் பிள்ளைகளுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் பெற்றோரிடம் பகிர்ந்து, அதன் மூலம் தீர்வுப் ஏற்பட முயற்சி மேற்கொள்ள வாய்ப்பாக அமையும்.

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்க வேண்டியது பெற்றோர்கள்தான் என்று அழுத்தமாக சொல்கிறார் சென்னை தரமணி வாலன்ட்ரி ஹெல்த் சர்வீஸ் மனநல ஆலோசகர் மாலா.

குழந்தைப் பருவத்திலிருந்தே சூழ்நிலைகளுக்கேற்ப வாழுதல், தன்னம்பிக்கை, சிக்கல்களை எதிர்கொள்ளுதல், தேவை ஏற்படின் பிறருடைய உதவியை நாடுதல் போன்ற பண்புகளை குழந்தைகளிடம் பெற்றோர்கள் விதைக்க வேண்டும்.

அதேபோல ஆன்மீக நெறியில் நாட்டம், சமூகத்தில் உள்ளவர்களுடன் நெருங்கிப் பழகுதல், சரியான முறையில் உடல்நலத்தைப் பேணுதல், புகை, மது போன்ற தீய பழக்கங்களில் இருந்து விலகியிருத்தல் போன்றவை மூலமும் தற்கொலை மனப்பான்மையைக் களையெடுக்க முடியும்.

தற்கொலை குறித்த விழிப்புணர்வு பரப்புரை, அதற்கான காரணம், தவிர்க்கும் காரணிகள் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும். குறிப்பாகக் குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவம் வரை உள்ளவர்களுக்குத் தற்கொலை ஒரு சமூகக் குற்றம் என்று உணர்த்த வேண்டும்.

தற்கொலை முயற்சி செய்பவர்களுக்கு நெறியுரைகள், அறிவுரைகள் வழங்குவதற்குரிய மையங்களை அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும். தற்கொலை எண்ணத்தைத் தூண்டக்கூடிய சமூக, (திரைப்படம், டி.வி.சீரியல்கள் போன்ற) கலை, பண்பாட்டுக் காரணிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசுகள் தற்கொலைகளைத் தடுக்க தனிப்பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும்.

-இப்னு ஹசன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.