.

Pages

Friday, January 29, 2016

அதிரை இளைஞரின் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் பண மோசடி !

அதிராம்பட்டினம், ஜன 29,
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞரின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ. 5 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மிலாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் முருகையன். தனியார் பள்ளியில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இப்பகுதியில் இயங்கும் அரசுடமையாக்கப்பட்ட மத்திய வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவரது வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ. 5 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முருகையன் நம்மிடம் கூறுகையில்...
கடந்த 26 ந்தேதி சனிக்கிழமை மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு, நான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் தலைமையகத்தின் மேலாளர் பேசுவதாக கூறினார். அப்போது எனது ஏடிஎம் அட்டை முடக்கப்பட்டுள்ளது என்றும், இவற்றை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. உங்களுக்கு புதிய கார்டு வழங்குகிறோம். புதிய ஏடிஎம் அட்டையின் பின் நம்பர் 2035. இந்த நம்பரை மிகவும் பத்திரமாக பாதுகாத்துகொள்ளவும், யாரிடமும் இந்த நம்பரைக் கூற வேண்டாம் எனக் கூறினார். பின்னர் எனது ஏடிஎம் அட்டையின் பின் நம்பரை கேட்டார். இதனை உண்மை என நம்பிய நான் ஏடிஎம் அட்டையின் எண்ணைத் தெரிவித்தேன். சற்று நேரத்தில் எனது செல்போனுக்கு அடுத்தடுத்து குறுஞ்செய்தி வந்தது. இதில் முதலில் ரூ 50 எடுக்கப்பட்டது. அடுத்து ரூ 50, பின்னர் ரூ 400, இறுதியாக ரூ 4500  என எனது வங்கிக் கணக்கிலிருந்து மொத்தம் ரூ. 5 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ள  தகவல் வந்தது. அதிர்ச்சியடைந்த நான் நேராக சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்குச் சென்று விவரம் கேட்டதற்கு, அதுபோன்று வங்கியில் இருந்து யாரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை என விளக்கம் அளித்தனர். மேலும் இது போன்ற அழைப்புகளைத் தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தினர்' என்றார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஹாஜி முஹம்மது பாருக் அவர்கள் நம்மிடம் கூறுகையில்...
'இதுபோன்ற நூதன முறையில் பண மோசடி செய்யும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. அதிரை சுற்று வட்டார பொதுமக்கள் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் இதுபோன்ற மோசடி அழைப்புகளை தவிர்த்துக்கொள்ளவும். தொடர்ந்து அழைப்பு வரும் பட்சத்தில் அருகில் உள்ள காவல்துறையின் உதவியை நாடலாம். செல்போனில் தொடர்பு கொள்ளும் அறிமுக மில்லாத நபர்களிடம் நம்மை பற்றிய விவரங்கள் அல்லது வங்கி கணக்கு குறித்த தகவல்கள் தெரிவிக்க வேண்டாம். இவை ஆபத்தை விளைவிக்கும்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.