அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் உறுப்பினர்கள் மன்ற கூட்டம் இன்று மாலை நடந்தது. இதில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், துணை தலைவர் பிச்சை, செயல் அலுவலர் ( பொறுப்பு ) முனியசாமி உள்ளிட்ட அதிரை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மன்றக் கூட்டத்தில் அதிரை பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்த உள்ள திட்டப்பணிகள், அதிரை பேரூராட்சி 24 வர்த்தக கடைகள் ஏலம் விடுவதற்கு டேவணித்தொகை நிர்ணயம் செய்தல், 2016 - 2017 ஆம் ஆண்டிற்கான அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பேரூந்து கட்டணம், தினசரி மார்க்கெட், ஆடு அடிக்கும் தொட்டி, கட்டண கழிப்பறை, தென்னை மரங்கள், புளிய மரங்கள், குளங்கள் ஆகியன ஏலம் விடுவது உட்பட மொத்தம் 14 பொருள்கள் குறித்து பேச முடிவு செய்யப்பட்டது. அப்போது மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த பேரூராட்சியின் 17 வது வார்டு உறுப்பினர் ரபீக்கா முஹம்மது சலீம், 19 வது வார்டு உறுப்பினர் செளதா அஹமது ஹாஜா ஆகியோர் தங்களது வார்டுகளின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிப்படுவதாகவும், கடந்த 4 -1/2 ஆண்டுகளில் வார்டுகளின் அடிப்படை வசதிகள் எதுவும் செய்துகொடுக்காமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், வார்டுகளின் அடிப்படை வசதிகளை மன்றத்தீர்மானத்தில் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தினர்.
அப்போது மனிதநேய மக்கள் கட்சியினர் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் நுழைந்து தங்களது கட்சி வார்டு உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்த தீர்மானத்தை மன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தினார்கள். இதனால் மன்றக் கூட்டம் தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
17 வது வார்டு திட்டப்பணிகள் புறக்கணிப்பு தொடர்பாக கவுன்சிலர் ரபீக்கா முஹம்மது சலீம் கடந்த [26-10-2015 ] அன்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாருக்கு பேரூராட்சி செயல் அலுவலர் அளித்த பதிலில் 30-10-2015 அன்று தேதிய மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு பொதுநிதி திட்டத்தில் செயல்படுத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்ட தகவல் தவறானது என குற்றம் சாற்றினர்.
இதையொட்டி சலசலப்பு ஏற்பட்டது. மனிதநேய மக்கள் கட்சியினர் அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் இட்டனர். தகவலறிந்த அதிரை காவல்துறை ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் காவல்துறையினர் அதிரை பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் அதிரை பேரூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் ரபீக்கா முஹம்மது சலீம், ( 17 வது வார்டு ) செளதா அஹமது ஹாஜா ( 19 வது வார்டு ), உம்மல் மர்ஜான் அன்சர்கான் ( 11 வது வார்டு ) ஜபுரன் ஜெமீலா ( 10 வது வார்டு ) ஆகியோர் மன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு கூடியது.
இதையடுத்து அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் இருந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் தங்கள் கட்சி வார்டு உறுப்பினர்களின் கோரிக்கை நிறைவேறும் வரையில் பேரூராட்சி அலுவலக வரண்டாவின் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கவுன்சிலர் மதுக்கூர் எம். கபாஃர் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் வந்து பேச்சுவாரத்தை நடத்தும் வரை உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் தஞ்சை ஐ.எம் பாதுஷா கலந்துகொண்டு கோரிக்கை நிறைவேற இணைந்து போராடினார்.
மாலை 5 மணிக்கு துவங்கிய உள்ளிருப்பு போராட்டம் இரவு 9 மணி வரை நீடித்தது. சம்பந்தபட்ட அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தைக்கு வராததால் அதிருப்தி அடைந்த போராட்டக்காரர்கள் அதிரை பேரூராட்சி முகப்பு பகுதியில் அமைந்துள்ள ஈசிஆர் சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் மேலும் பரபரப்பு கூடியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு பட்டுக்கோட்டை தாசில்தார் சேதுராமன், பட்டுக்கோட்டை ஏஎஸ்பி அரவிந்த்மேனன் ஆகியோர் வந்தனர்.
இதையடுத்து அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவரும் பெண் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் பட்டுக்கோட்டை தாசில்தார் சேதுராமன், வருவாய் ஆய்வாளர் பழனிவேல், மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், அதிரை நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தை முடிவில் தாசில்தார் சேதுராமன், பெண் கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்வதாகவும், மேலும் இந்த கோரிக்கைகள் 15 நாட்களுக்குள் நிறைவேற முயற்சிப்பதாக கூறியதை அடுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்கள் உட்பட மனிதநேய மக்கள் கட்சியினர் அனைவரும் கலைந்துசென்றனர். இந்த சம்பவம் அதிரை பேரூந்து நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
களத்திலிருந்து அஃப்ரீத்
( மாணவ செய்தியாளர் )
பேரூராட்சி அதிகாரி செயலில் அதிருப்தி என நகரமன்ற தலைவர் சொல்லுகிறார் ஆளும் கட்சியோ அவரை மாற்றக்கோரி எந்த நடவடிக்கை எடுத்தார்?. நம்ம ஊரில் குறுப்பிட்ட அரசு அதிகாரிகள் அதிகம் லஞ்சம் பெறபடுவதால் அவ்வளவு சுலமாக யாரும் மாற்றலாகி போக மாட்டார்கள். நேர்மையான அதிகாரிகள் இருந்தால் இந்தப் போராட்டம் தேவைபடாது.
ReplyDelete