.

Pages

Sunday, February 28, 2016

முன்னெடுக்கத் தேவை ஒரு முஸ்லிம் இயக்கம் !

தமிழக சட்டமன்றத்துக்கான அடுத்த ஐந்தாண்டுகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது அரசியல் வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டன. அந்தந்த அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஏற்றவர்களை வளைக்கவும் தொடங்கிவிட்டன.

பத்தொன்பது வாக்குகளை மட்டுமே  வைத்திருக்கிற இனத்தவர் கூட தங்களது கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே வாக்களிப்பதாக ஒற்றுமையாக குரல் கொடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் முஸ்லிம் என்று ஒரு பலமான சமுதாயம் இருக்கிறது. ஆனால் இதனால் என்ன பயன் ? சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகப் பிரிந்து கிடக்கிறார்கள். ஆளாளுக்கு ஒரு கட்சி, இயக்கம் என்று தங்களின் சக்திகளை பல்வேறு திசைகளிலும் செலவிட்டு ஒரு பலமிழந்த  சமுதாயமாக  முஸ்லிம் சமுதாயம் வீழ்ந்து கிடக்கிறது.

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். “ பல்லக்கு ஏறிப்போக பவிசு உண்டு. ஆனால் அதில் ஏறிப் போக ஜீவன் இல்லை “ என்பதே அந்தப் பழமொழி. தமிழ்நாட்டின் இன்றைய முஸ்லிம் சமுதாயத்துக்கு இந்தப் பழமொழி அப்படியே பொருந்தும். ஏனென்றால் ஏறக்குறைய 150 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வலிமை முஸ்லிம் சமுதாயத்துக்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக, தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் என்று மட்டுமல்ல பரவலாக எல்லா மாவட்டங்களிலும் இந்த வலிமை இருக்கிறது.

முஸ்லிம்களைப் போல சிறுபான்மையாக இருக்கக் கூடிய மற்ற சாதிகளுக்கு இத்தகைய பரவலான வலிமை கிடையாது. எடுத்துக் காட்டாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழகத்தின் வடமாவட்டங்களில்தான் அதிக செல்வாக்கு இருக்கிறது. விடுதலை சிறுத்தை கட்சிக்கோ கடலூர், சிதம்பரம் , பெரம்பலூர் ஆகிய பகுதிகளில்தான் செல்வாக்கு இருக்கிறது. புதிய தமிழகத்துக்கோ நெல்லை மாவட்டம், சமத்துவ மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களிலும் கொங்கு பேரவைக் கட்சிகளுக்கு கோவை,  ஈரோடு ஆகிய மாவட்டங்களில்தான் செல்வாக்கு.

ஆனால் தமிழகத்தலைநகர் சென்னை திருவல்லிக்கேணியிலிருந்து திருவிதாங்கோடுவரை செல்வாக்குப் பெற்று இருக்கும் சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் மட்டும்தான். தளி தொகுதியில் இருந்து தருமபுரி தொகுதிவரை பரவலாக வாழ்பவர்கள் முஸ்லிம்கள்தான். ஆகவே  ஒற்றுமையாக செயல்பட்டால் ஒவ்வொரு பெரிய அரசியல் கட்சிகளும் முஸ்லிம் சமுதாயத்திடம் மண்டியிட்டு நிற்கவேண்டி இருந்து இருக்கும்.

1960, 1970- களில் தமிழகத்தின் அரசியல் வரலாறு அவ்வாறுதான் இருந்தது. முஸ்லிம்களின் கண்சாடைக்காக பெரிய அரசியல் கட்சிகள் காத்திருந்த காலம் இருந்தது. குறிப்பாக 1967 தேர்தலில் திமுகவுடன் அன்றைய கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களின் தலைமையிலான முஸ்லிம்லீக் கூட்டணி வைத்து இருந்தது. அறிஞர்  அண்ணா, கூட்டணியின் தலைவராக இருந்தாலும் தொகுதிப் பங்கீடு தொடங்கும் முன்பே தமிழ்நாட்டின்   234  தொகுதிகள் அடங்கிய பட்டியலை புத்ப்பெட்டையில் இருந்த காயிதே மில்லத் அவர்களின் இல்லத்துக்கு அனுப்பி அந்த 234 தொகுதிகளில் எந்தெந்தத் தொகுதிகளில் முஸ்லிம் லீக் போட்டியிட விரும்புகிறது என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளச் சொன்னார். காயிதே மில்லத் அவர்கள் நிச்சயமான வெற்றி என்று நம்பும் சில தொகுதிகளை டிக்  செய்து பட்டியலை அண்ணாவுக்கு அனுப்பினார். அவை மொத்தம்  7 தொகுதிகள் என்பது எனது நினைவு. பட்டியலைப் பார்த்த அண்ணா காயிதே மில்லத் அவர்களை தொலைபேசியில் அழைத்து அந்தத் தொகுதிகள் மட்டும் போதுமா என்று கேட்டார். காயிதே மில்லத் அவர்களும் போதும் என்று சொன்ன பிறகுதான் திமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டது. தேர்தலில் அந்தக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

இன்று நமக்கு அந்த மரியாதை இருக்கிறதா என்பதையும் இதற்கு யாரெல்லாம் காரணம் என்பதையும்  தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நாம் சிந்திக்கக் கடமைப் பட்டு இருக்கிறோம். அன்று முதலிடம் கொடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம் இன்று கடைசி நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு காரணங்கள் யாவை? இயக்க, கட்சி வேறுபாடு இல்லாமல் ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களும் இதைப் பற்றி சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோமா இல்லையா ? சிந்திக்கலாமா ? வேண்டாமா ? சிந்திப்பது அவசியமா ? அவசியம் இல்லையா ? இதற்கு என்னதான் பரிகாரம் என்பதைக் காணவேண்டியது முக்கியமா இல்லையா ?    
குறிப்பிட்ட சில தலைவர்களின் சுயநல, விளம்பர, நீயா நானா போட்டிக்கு இந்த சமுதாயம் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறது என்று நான் சொன்னால் அது தவறாக இருக்குமா? உண்மையாக இருக்குமா ? என்பதை மனசாட்சி உள்ளவர்கள் நெஞ்சில் கை வைத்து சொல்வார்களா ?

பல கடவுள்களை வணங்கும் சகோதரர்களைக் கொண்ட கட்சிகள் அல்லது இயக்கங்கள் எல்லாம் ஒன்று பட்டு தங்களுக்காக குரல் எழுப்பும் நிலையில், ஒரே இறை ஒரே  வேதம் என்ற உயர் நிலையைக்  கொண்ட இஸ்லாத்தில் பல பிரிவுகளைக் கொண்ட ஜமாத்கள்-. இயக்கங்கள்-. பிரிவுகள்-. மற்றும் பிரிவினைகள் இருப்பதும் . ஒரு இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒரு வசைபாடலும்  கல்வி அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் வழக்கு, நீதிமன்றம் என்று, அடித்துக் கொண்டும், போராட்டம் நடத்திக்கொண்டும் தங்களின் வாழ்வாதாரங்களை வீணடித்துக் கொண்டும் இல்லையா ?

புதிய இயக்கங்கள் தோன்றியதன் மூலம் ஒரு புத்துணர்வு தோன்றியதையும் ஒருவித  மறுமலர்ச்சியும் உத்வேகமும் ஏற்பட்டதையும் நாம் ஏற்றுக்கொள்வோம்.  அதேநேரம் இந்தக் கருத்துக்களை முன்னெடுத்து சென்றவர்களின், தான் என்ற ஆணவமும், சுயவிளம்பர  தம்பட்டங்களும், முன்வரிசை தலைவர்களின் பதவி ஆசையும், மிக குறுகிய காலத்தில் வெட்டவெளிச்சமாகி நீ பெரியவனா நான் பெரியவனா என்று இயக்கங்கள் ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி போட்டி இயக்கங்களாகி நமது முக்கிய நோக்கங்களைச் சிதைத்து, இன்று நமது போட்டியாளர்கள் நாம் போடும் சண்டையைப் பார்த்து எள்ளி நகையாடும் நிலைமைக்கு தள்ளிவிட்டது. ஊர் இரண்டுபட்டதால் பல கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் ஆகிவிட்டது. தலைவர்கள் என்று கொண்டாடப்பட்டவர்களின் தன்னலம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டதால் பிரிந்து செல்லும் இயக்க சொந்தங்களை பிணைத்துவைக்கும் தகுதியை இழந்து நின்றனர். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தலையை தொங்கப்போட்டார்கள்; கோபப்பட்டார்கள். சில தேர்ந்தெடுத்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து அவர்கள் எதைச் சொன்னாலும் நம்பவைத்து ஆட்டுவித்தார்கள்..

சுயநல தலைவர்களின் பின் சென்ற இந்த சிறிய சமுதாயத்தின் முத்கெலும்பாக திகழ வேண்டிய இளைஞர்கள் திக்காலுக்கு திக்கால் பிரிந்து நின்று மார்க்கம் போதித்த முறைகளுக்கு மாறாக ஒருவரை ஒருவர் மனம் புண்பட பேசுவதும், ஏசுவதும் ஊடகஙகளில் வசை பாடிக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது.

பிற மதத்தவர் நம்முடைய சகோதரத்துவம் சார்ந்த சமூக வாழ்வையும் நமது அன்பு, அறம், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் பண்பையும் கண்டு வியந்து நம்மை நோக்கி வந்து நம்மை தழுவினார்கள். இன்றோ சந்தி சிரிக்கிறது நமது சகோதரத்துவம்.! எதிரிகள் எள்ளி நகையாடுகின்றனர்!. இதற்கு நாமே இடம் கொடுத்து விட்டோம்!

ஐம்பது குடும்பங்கள் இருக்கும் ஒரு சிறிய ஊரில் கூட ஒரே பள்ளியில் நாம் ஒன்று சேர்ந்து தொழமுடியாமல் போனோம். நூற்றண்டுகளாக ஊர் நடுவே இருந்துவரும் பள்ளிவாசல்களில் ஒன்று சேர்ந்து தொழ முடியாமல் ஊருக்கு வெளியே ஓலைக்குடிசைபோட்டு தொழுது வருகிறோம் .குடும்பங்களில் தந்தை ஒரு இயக்கம், தம்பி மறு இயக்கம், மகன் வேறொரு இயக்கம் என்று பிரிந்து பெருநாள்களைக்கூட ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு ஜமாத் ஒரே நாளில் கொண்டாடி கட்டி தழுவி சலாம் கூறும் பண்பு கூட பாழ்பட்டுப்போனது. பிறை கண்டால் பெருநாள் என்பது எல்லாம் பழங்கதை. இயக்கங்கள் ஒலிபெருக்கியில் அறிவித்தால்தான் அன்று பெருநாள் என்பது புதுக்கதை. திருமணங்களில் ஊர் ஒன்று கூடி வாழ்த்த முடியவில்லை. மைய்யத்களை அடக்கம் செய்வதில் கூட அடிதடி நடக்கிறது. அனைத்தும் மார்க்கத்தின் பெயரால். ஒன்றாக பழகிய நண்பர்கள் இந்த பாகுபாடுகளால்  ஒரே ஊரில் வாழ்ந்தும்,  முகங்களைத்  திருப்பிக் கொண்டு போகும் மூமின்களாக (?) காட்சி தருகின்றனர். ஒரே மரத்தில் ஒன்பது கொடிகள் பறக்கின்றன. அதனால் அந்த மரமும் பட்டுப்போகிறது. நமது மார்க்கமும் எள்ளி நகையாடப்படுகிறது. சிற்றூர், பேரூர் எங்குமே இன்னிலை. யாரும் மறுக்கமுடியாத நிலை - இன்றைய அவல நிலை.

அரசியல் களத்தில் பொது எதிரிகளை வீழ்த்த வேண்டிய நாம் அந்த எதிரிகளின் கூடாரத்துக்கு  முட்டு கொடுத்து தாங்கும் அவலநிலைக்கும் ஆளானோம். பொதுதேர்தல்களில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்காக பேரம் பேசும் தகுதியை நமது ஒற்றுமையின்மையினால் இழந்து அவர்கள் போட்டதைப் பெற்று பெருமை பேசினோம். நமது இரத்த  சொந்தங்களை நாமே தோற்கடித்து அடுத்தவர்களை வாழ்த்தி  சுவரொட்டி ஒட்டும் அளவு நமது வன்மத்தைக்  காட்டிக்கொண்டோம். நமது ஆதிக்கத்தில் இருந்த சென்னை துறைமுகத்தில், சேப்பாக்கத்தில் முஸ்லிம்  தோற்க நாமே  காரணம் ஆனோம். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும்  வாணியம்பாடியில் நாம் தோற்கவும் நாமே  காரணம் ஆனோம். நமக்குள் வாக்குகளை பிரித்துக்கொண்டு முத்துப்பேட்டையிலும், மேட்டுப்பாளையத்திலும் பேரூராட்சி மற்றும் நகர மன்றங்களை இழந்தோம்.

தற்போது சொத்துக்களுக்காக பங்காளிகள் சண்டையை அரங்கேற்றவும் முஷ்டி மடக்கி தயாராகிவிட்டோம். நமது சொந்தங்களை நாம் அழைக்கும் பெயர்களைக் கேட்டால் வெட்கி தலை குனியவேண்டி வரும் . “மாமா கட்சி” , “ பொய்யன் ஜமாத்” “ டவுசர் ஜமாத்” “ அண்ணண் ஜமாத்” “ பொறம்போக்கு”      “ வாத்தியார் கட்சி” “ ஹஜரத் கட்சி” என்றும் “ போடா, வாடா , தறுதலை, பொறுக்கி  என்றும் சொல்லக்கூசும் வார்தைகளால் பொதுத்தளங்களில் அர்ச்சனை செய்துகொள்கிறோம். காவல் நிலையங்களில் ஒருவரை எதிர்த்து ஒருவர் புகார் தருகிறோம். சுருக்கமாக சொல்லப்போனால் சொந்தப் பகமை அல்லது பொறாமையால் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கவும் தயங்குவதில்லை. எனக்கு ஒரு கண்  போனாலும் பரவாஇல்லை எதிரிக்கு இரண்டு கண்களும் போகவேண்டும் என்று எண்ணும் இழிவை நியாயப் படுத்துகிறோம்.

இதுதான் நாம் கற்ற இஸ்லாமா? இதைத்தான்  இஸ்லாம்    சொல்லித்தந்ததா ? இதற்காகத்தான் இறைவன் சிறந்த உம்மத் என்று சான்றிதழ் வழங்கினானா? இதற்காகவா  பெருமானார் ( ஸல்) அவர்களும் சஹாபாக்களும் கண்ணீர் சிந்தி, ரத்தம் சிந்தினார்கள்? இத்தகைய  செயல்களில் பெயருக்குகூட மனித நேயமும் தென்படவில்லை- முஸ்லிம்களை முஸ்லிம்கள் வார்த்தைகளால் காயப்படுத்தாமல் கண்ணியப்படுத்தும் தவ்ஹீதும் இல்லை.

போகட்டும். இன்று நமது நிலையை இனியாவது ஏற்றமுடையதாக ஆக்கிக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
இருக்கிற இத்தனை இயக்கங்களில் ஏதாவது ஒரு இயக்கத்தின் தலைவருக்கு ஒற்றுமை வேண்டும் என்கிற சிந்தனை உரம்பட வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற  மன உறுதி வேண்டும். இருக்கும் அனைத்து இயக்கங்களின் தலைவர்களையும் வீடு தேடிப் போய் சந்திக்க வேண்டும். முஸ்லீம்களுக்கு எதிரான அணி ஒன்று சேர்ந்து கொண்டே போகிறதே முஸ்லிம்  சமுதாயம் மட்டும் பிரிந்து கொண்டே போகிறதே என்ற உள்ளக்கவலை வேண்டும். ஒற்றுமையை உருவாக்கிட  ஒரு உண்மை முஸ்லிம் வேண்டும். பல பக்கங்களிலும் திரும்பிக் கொண்டிருக்கும் இந்தப் பூனைகள் அனைத்தின் கழுத்திலும் ஒற்றுமை மணியைக் கட்ட ஒரு முஸ்லிம் இயக்க முனைப்பாளர்தான் இன்றைய தேவை.

இன்று சமுதாயத்தின் முக்கிய கோரிக்கைகளாக நாம் கருதுவது ஒன்று இட ஒதுக்கீடு இரண்டு அப்பாவி சிறைவாசிகளின் விடுதலை ஆகியவையே. இந்தக் கோரிக்கைகள் நிறைவேற தனித்தனியாக குரல் கொடுத்தாலோ போராடினால் போதுமா? தேர்தல் நேரத்தில் ஆளும் பொறுப்புக்கு வரும் என்று நாம் கணிக்கும் கட்சிகளைத் தேடி அவர்களின் கோட்டைக் கதவுகள் எப்போது திறக்கும் என்று  காத்துக் கிடப்பதைத்தவிர்த்து அவர்கள் நம்மைத் தேடி வர வைக்க வேண்டுமானால் நாம் ஒன்று பட வேண்டும்.

நமது கருத்து இந்த ஒற்றுமை முன்னெடுப்பை முஸ்லிம்களின் தாயச்ச்சபை என்று சுதந்திரப் போராட்ட காலத்திலேயே அழைக்கப்பட்ட முஸ்லிம் லீக்தான்  முன்னெடுக்க வேண்டும். அனைத்து இயக்கத்தலைவர்களையும் தேடிப்போய் அவர்களுடன் பேச வேண்டும். இதனால் சில அவமானங்களும் அலட்சியங்களை தாண்டிப்போக வேண்டிய நிலைமைகளும் அவர்களுக்கு ஏற்படலாம். அந்த சவுக்கடிகளை சமுதாயத்துக்காக சகித்துக் கொள்ள வேண்டும்.  ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பல தொகுதிகளைப் பெற்று இணைந்து இருக்கும் அனைத்து இயக்கங்களுக்கும் நீதியான முறையில் பிரதிநிதித்துவம் தரும் வகையில் பிரித்துக் கொடுக்கும் பெருந்தன்மையும் வேண்டும்.  அரசியலில் ஈடுபடமாட்டோம் என்று தங்களின் நிலைப்பாட்டை வைத்து இருக்கும் சகோதர இயக்கங்கள் கூட இந்த முயற்சிகளுக்கு     ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.

அமையப் போகும் சட்டமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளுடைய குரல்   ஒலிக்கவேண்டுமென்று உண்மையிலேயே  விரும்பினால் இந்தப் பணிகளை முன்னெடுக்க நமக்கு ஒரு முஸ்லிம் இயக்கம் மட்டுமே தேவை. இல்லாவிட்டால் பெரிய கட்சிகள் கைகளில் முஸ்லிம்கள் பகடைக் காய்களாகவே பயன்பட்டு அவர்கள் வெற்றி பெற்று ஆட்சியமைக்க  உதவி செய்துவிட்டு ஓரமாக உட்கார்ந்து வேடிக்கைபார்க்கும் விந்தையே நிகழும்.

யாரையும் காயப்படுத்துவதோ, மனம் நோகச்செய்வதோ, அறிவுரை பகர்வதோ இந்தப்பதிவின் நோக்கமல்ல. நாம் ஒன்றுபட வேண்டும். நமது சமுதாயம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நமது மக்களுக்கு வேண்டியவற்றை உத்தரவிட்டு நாம் வாங்க முடியும்.

நம்முடைய சக்தி ஆற்றல் மிக்கது . அந்த சக்தி சிறுசிறு கிளை வாய்க்கால்களாக பிரிந்து ஓடினால் ஒரு பயனும் இல்லை. ஒரு பெரிய பிரவாகமாக. ஒரு ஜீவநதியாக நாம் உருவெடுத்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏனைய சமுதாயத்தினரும் நம்மை நோக்கி வருவார்கள். அவர்களையும் நம்மோடு இணைத்துக்கொண்டு ஒரு நல்ல தலைமையை நாம் வகிக்க முடியும். நாம் போய் மாற்றாருக்கு பூச்செண்டு கொடுக்கவும், போர்வை போர்த்தவும் வேண்டியதில்லை. நம் சமுதாயத்தை தேடி அவர்கள் வரும் நாள் வரும்.

தமிழக முஸ்லிம்களைப் பொறுத்தவரை நேற்று போல இன்றாகட்டும். இன்று போல நாளையாக வேண்டாம்.

மாறுபட்ட கொள்கையுடைய அரசியல் கட்சிகள் கூட வரும் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் ஒரே குடையின் கீழ் இணைந்து சந்திக்கும் போது, ஒர் இறை கொள்கையுடைய இஸ்லாமிய அமைப்புகள் 'இஸ்லாமிய நலக்கூட்டணி' என்ற பெயரில் இணைந்து நமது கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்லலாம்.

இப்ராஹீம் அன்சாரி 
கல்லூரி முதல்வர் 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

17 comments:

  1. Arumaiyana karuththu
    anbu nanbarkalea
    avaseyam entha pathevai
    padeyugkal
    nanne,,nanre

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்

    இ அ காக்கா எல்லா கட்சிகளின் பெயர்களின் வ்ரிசைகளும புகை வன்டியின் கோச்சுகளை போல் இருந்தன.

    சிந்திக்க சீரிய வரிகள் மனித நேயம் உள்ள்வர்கள் மட்டுமே வாயளவில் அல்ல மனதளவில் உள்ளவர்கள நிச்சயமாக சிந்திப்பார்கள்.இன்ஷா அல்லாஹ நல்ல மாற்றம் ஏற்ப்படும் அவற்றில் நாம் இல்லை என்றாலும் நம் சந்ததிகள் பயணிப்பார்கள்.இரு கரம் ஏந்துவோம் சூழ்ச்சியாளர்களுக்கெள்ளாம் சூழ்ச்சியாள்ன் அல்லாஹ்விடம்.

    ReplyDelete
  3. அரசியல் களத்தில் பொது எதிரிகளை வீழ்த்த வேண்டிய நாம் அந்த எதிரிகளின் கூடாரத்துக்கு முட்டு கொடுத்து தாங்கும் அவலநிலைக்கும் ஆளானோம்.//

    ஆம் முட்டு தாங்காமல் தன் மேலேயே விழுந்து வழி பொருக்காமல் ஆர்ப்பாட்டம்.போராட்டம் மூலம் கதருவதை கண் கூடாக பார்த்துக் கொன்டு இருக்கிறோம்.

    ReplyDelete
  4. நல்லஅறிவுரை ஆனால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவர்கள் நானேஅரசன்நானேமந்திரி என்றமனப்போக்கு கொண்டகோடாலிகாம்புகள்.சுயநலமே இவர்களின் குறிக்கோள்.

    ReplyDelete
  5. இதை நினைத்தால் முத்துப்பேட்டை நினைவு வருகின்றன ஏனெனில் முத்துப்பேட்டை பேரூராட்சியில் திமுக அணியில் ஒரு இஸ்லாமியரும் .அதிமுக அணியில் ஒரு மாற்று மதத்தினரும் பேருராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர் இதில் திமுகவில் இஸ்லாமியர் தோற்ற காரணம் இஸ்லாமிய அமைப்பு வாக்குகளை பிரித்த காரணமே ஆகும்

    ReplyDelete
  6. கையில் சாட்டையை எடுத்து சுலற்றுவதைப் போல் இருந்தது சிறப்புக்கட்டுரை. மாநில -தேசிய கட்சிகளுக்கு நம் சமுதாயம் வாங்கு வங்கியாகத் தான் இருந்து வருகிறது. இதயத்தில் இடம் கொடுத்தவர்கள் நம் சமுதாய அமைப்புகள் வந்தபிறகு ஒற்றை இலக்கத்தில் சீட்டு கொடுத்து அவர்கள் சின்னத்தில் போட்டியிட வைத்திருக்கின்றார்கள். "மக்கள் நலகூட்டணி" போல் "இஸ்லாமிய நலக் கூட்டணி" அமைக்க வேண்டிய தருணமிது. ஆட்சியிலும் நமது சமுதாய பிரதிணிக்கு முக்கிய இலக்காவை ஒதுக்க வேண்டி நிர்பந்திக்க வேண்டும். அப்படி அமையாதப் பட்சத்தில் நம் சமுதாய மக்கள் பெருபான்மையாக உள்ள தொகுதிகளில் சுயேட்சியாக தேர்தலில் போட்டியிட வேண்டும். இதுவரை ஒட்டு வங்கியாக இருந்த நாம் அப்படியென்ன விசேஷ சலுகை அடைந்து விட்டோம்? எதற்ககெல்லாம் மாநாடு நடத்துரீங்க இதற்க்கு முயற்சி பண்ணக் கூடாதா?

    ReplyDelete
  7. பலலட்சம் தமிழக முஸ்லிம் மக்களின் எண்ணங்களாக வெளிப்படும் இந்த பதிவு இத்தளம் மட்டுமல்லாது அனைத்து முஸ்லிம் சமூக வலைதளங்களில் அதிகம் பதியப்படவேண்டும்.

    ReplyDelete
  8. சகோதரர். முகமது சரீப் ! முத்துப் பேட்டையை குறிப்பிட்டு இருக்கிறேனே.

    ReplyDelete
  9. தமிழக முஸ்லிம் மக்களின் எண்ணங்களாக வெளிப்படும் இந்த பதிவு இத்தளம் மட்டுமல்லாது அனைத்து முஸ்லிம் சமூக வலைதளங்களில் அதிகம் பதியப்படவேண்டும். இயக்கங்களின் தலைகளுக்கும் போய்ச் சேர வேண்டும்! தற்போது இதற்காக முன்னோடியாக இருக்கும் தெஹ்லான் பாக்கவியின் எண்ணம் மற்ற கட்சியினருக்கும் ஏற்பட வேண்டும்.

    ReplyDelete
  10. தம்பி ஜஹபர் சாதிக்!
    இந்தக் கட்டுரையை எல்லா இயக்கங்களின் தலைவர்களுக்கும் மின் அஞ்சலில் தொடர்புடையவர்கள் அனுப்ப வேண்டுகிறேன்.

    ReplyDelete

  11. وَاِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّاَنَا رَبُّكُمْ فَاتَّقُوْنِ‏ 
    “இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்” (என்றும் கூறினோம்).
    (அல்குர்ஆன் : 23:52)
    فَتَقَطَّعُوْۤا اَمْرَهُمْ بَيْنَهُمْ زُبُرًا‌ كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ‏ 
    ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்.
    (அல்குர்ஆன் : 23:53)
    فَذَرْهُمْ فِىْ غَمْرَتِهِمْ حَتّٰى حِيْنٍ‏ 
    எனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடும்.
    (அல்குர்ஆன் : 23:54)

    ReplyDelete
  12. போற போக்கை பாத்தால் தெருவுக்கு ஒரு இஸ்லாமியர் கட்சி வர வாய்ப்பு உண்டு.[[

    ReplyDelete
  13. முஸ்லிம் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் ஒன்றிணைந்து, சட்டப் பேரவையில் நம் பிரதிநிதித்துவம் என்பது Utopia ஆகிவிட்ட பிறகு, தமிழகத்தின் ஓர் இயக்கம் மட்டும் 'பதுங்கு புலி' போல் பார்த்துக்கொண்டிருக்கிறது, யாராரைஎல்லாம் கடித்துக் குதறலாம் என்று! கடந்த தேர்தலில், "இவர்களைத் தொர்கட்டிப்போம்" என்று சூளுரைத்து, 50 % 'சாதித்துக் காட்டியது' இந்த இயக்கம். "நாங்கள் அரசியலில் ஈடுபடவே மாட்டோம்" என்று பீற்றிக்கொண்ட இவ்வியக்கம், இன்று முஸ்லிமை முஸ்லிமே தோற்கடிக்கும் சித்து விளையாட்டில் இறங்கியுள்ளது, தமிழக முஸ்லிம்களின் தலைவிதி!

    ReplyDelete
  14. தனிக்குடுத்தனம் வேண்டாம். ஒரு குடையின் கீழ் வாழும் கூட்டுக் குடுத்தனமே வேண்டும். தலைவர்கள் சிந்திப்பார்களா ? இனியும் புதுக்கட்சி தொடங்க நாம் அனுமதிக்கலாமா ?

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும்

    இ அ காக்கா எல்லா கட்சிகளின் பெயர்களின் வ்ரிசைகளும புகை வன்டியின் கோச்சுகளை போல் இருந்தன.

    சிந்திக்க சீரிய வரிகள் மனித நேயம் உள்ள்வர்கள் மட்டுமே வாயளவில் அல்ல மனதளவில் உள்ளவர்கள நிச்சயமாக சிந்திப்பார்கள்.இன்ஷா அல்லாஹ நல்ல மாற்றம் ஏற்ப்படும் அவற்றில் நாம் இல்லை என்றாலும் நம் சந்ததிகள் பயணிப்பார்கள்.இரு கரம் ஏந்துவோம் சூழ்ச்சியாளர்களுக்கெள்ளாம் சூழ்ச்சியாள்ன் அல்லாஹ்விடம்.

    Reply

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.