சென்னை கந்தன்சாவடி எஸ்பிஐ வங்கி யின் மேலாளர் சந்தோஷ்குமார், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “எங்களது வங்கி வாடிக்கையாளர்களிடம், வங்கியிலிருந்து மேலாளர் பேசுவதுபோல யாரோ சிலர் பேசி, வாடிக்கையாளர்களின் டெபிட், கிரெடிட் கார்டுகளின் விவரங்களைப் பெற்று அவர்களின் கணக்கில் இருந்து மொத்தம் ரூ.50 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்துவிட்டனர். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் ஜெயசிங், ஆய்வாளர் நாகராஜன், உதவி ஆய்வாளர் கள் மீனாப்ரியா, சங்கரேஸ்வரி, ஜான்ரோஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அதில், ஹரியாணா மாநிலம் கர்னால் பகுதியில் இருந்து மோசடி கும்பல் போனில் பேசியிருப்பது தெரிந்தது. அதை வைத்து தனிப்படை போலீஸார் ஹரியாணா சென்று நித்தின் சிங்லா(26) என்பவரை பிடித்தனர். இவர் பிரபல நிறுவனங்களின் சிம் கார்டுகளை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். 250-க்கும் மேற்பட்ட டீலர்கள் இவருக்கு கீழே செயல்படுகின்றனர். சிம்கார்டுகளை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் கொடுக்கும் முகவரி சான்றுகளை பல பிரதிகள் எடுத்து, அதன் மூலம் பல சிம் கார்டுகளை வாங்கி, மோசடி வேலைகளுக்கு பயன்படுத்தியுள்ளனர்.
சிம் கார்டு நிறுவனங்கள் தங்களது வியாபார வளர்ச்சிக்காக, வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்களின் தகவல் களை கேட்டுப்பெறுவது வழக்கம். இப்படி பெறப்படும் தகவல்கள் மூலம்தான் நமக்கு அடிக்கடி பல வியாபார நிறுவனங்களிடம் இருந்து எஸ்எம்எஸ் மற்றும் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. இதேபோல எஸ்பிஐ வங்கியில் இருந்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் விவரங்களை ஹரியாணாவை சேர்ந்த விபின் சோப்ரா என்பவர் கேட்டு வாங்கி, அதை நித்தின் சிங்லாவிடம் கொடுத்திருக்கிறார்.
போலி முகவரியில் சிம் கார்டுகள் வைத்திருக்கும் நித்தின் சிங்லா, வங்கி வாடிக்கையாளர்களின் விவரங்களை வைத்து அவர்களுக்கு போன் செய்து கிரெடிட் லிமிட்டை உயர்த்துகிறோம், புகைப்படத்துடன் கூடிய புதிய கார்டு தருகிறோம், இன்றுடன் உங்கள் கார்டு காலாவதியாகிவிடும், அதை புதுப்பித்து தருகிறோம் என்று பலவாறு பேசி அவர்களை நம்ப வைத்து, கார்டு எண், ரகசிய எண் மற்றும் ஓடிபி போன்ற தகவல்களை பெற்று, அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை வேறு கணக்குக்கு மாற்றி மோசடி செய்துள்ளனர்.
பிடிபட்ட நித்தின் சிங்லா கொடுத்த தகவலின்பேரில் விஹாஸ்(27), ரியாசைத் கான்(36), குல்ஷான்குமார்(24), ஜிதின் கார்(30), ஷாமன்ராம்(24), கிருஷ்ணன் ஷவ்லா(55) என மொத்தம் 7 பேரை போலீஸார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். மோசடிக்கு பயன் படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், செல்போன்கள், சிம் கார்டுகள் உட்பட பல பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் மோசடி செய்து பல கோடிகளை பதுக்கி வைத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய விபின் சோப்ரா உட்பட மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர். இதற்காக டெல்லி, ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கார்டு பயன்படுத்துவோர் கவனத்துக்கு...
‘‘தொலைபேசி மூலம் உங்கள் செல்போனுக்கு வங்கியிலிருந்து மேலாளர் பேசுவதாகவோ அல்லது கஸ்டமர் கேரிலிருந்து பேசுவதாகவோ வரும் எந்த அழைப்பையும் நம்பி கார்டுகளின் விவரங்களை கண்டிப்பாக தெரிவிக்கக் கூடாது.
எந்த வங்கியும் வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை போனில் நேரடியாக தெரிவிக்குமாறு கேட்பதில்லை. மாறாக நமது செல்போனில் அந்த விவரங்களை பதிவு செய்ய மட்டுமே சொல்வார்கள்.
தொலைபேசி அழைப்பு எண் உண்மையாகவே வங்கியுடையதுதானா என்பதை சம்பந்தப்பட்ட வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டு சரிபார்க்க வேண்டும்.
வங்கி பரிவர்த்தனை விவரங்கள் உடனுக்குடன் எஸ்எம்எஸ் மூலம் செல்போனில் வரும்படி தங்களது செல்போன் எண்ணை வங்கியில் கொடுத்து பதிவு செய்து வைக்க வேண்டும்.
வழக்கத்துக்கு மாறான பணப் பரிவர்த்தனை நடந்திருந்தாலோ அல்லது அக்கவுன்ட்டில் வேறு பயனாளி சேர்க்கப்பட்டிருந்தாலோ உடனடியாக வங்கிக்கு போன் செய்தோ அல்லது வங்கியின் இணையதளம் மூலமோ தொடர்பு கொண்டு அதனை தடுக்க வேண்டும்’’ என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நன்றி:தி தமிழ் இந்து
நாளொறு மேனியும், பொழுதொரு மோசடியுமாய், உலகம் மாறி விட்டது என்பதற்கு தினம் ஒரு மோசடி நடக்குது. கார்டு மோசடி பலவிதம் அதில்... கூரியர் மூலம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு செல்லும் கார்டு விவரங்களை, ஸ்கிம்மரை பயன்படுத்தி எடுத்துத் தந்தால், ஒரு கார்டு தகவலுக்கு, 1,000 ரூபாய் வாங்கிக் கொண்டு கூரியர்காரன் தகவலை சமூக விரோதிகளிடம் கொடுத்து விடுகிறான் அதனால பல மோசடி நடக்குது.. இதேப போல் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பொருளை கூரியர்காரனே எடுத்துக் கொண்டு கஸ்டம்ஸ் தலைமேல் போட்டு விடுவான்; யாரைத்தான் நம்புவதோ இந்த பேத நெஞ்சம் என்று புலம்புவதை பார்க்கலாம். மோசடி செய்பவர்களை கண்டு பிடிப்பதும் கடினம் தடுப்பதும் கடினம்.
ReplyDelete