இந்த உலகம் பல்வேறு குணாதிசயம் உடைய விந்தை மனிதர்களால் நிறைந்தது அவர்களின் செயல்பாடுகள் 'அடடே' என்று சொல்லவும் தூண்டும் 'அடேய்...' என்றும் பல்லை கடிக்கவும் தூண்டும்! சப்பை மேட்டர் ஒன்றுக்காக ஜப்பானியர் ஒருவர் 20 வருடங்களாக குடும்பம் நடத்துகிறேன் என்ற பெயரில் மனைவியுடன் குப்பை கொட்டி வந்ததை பார்ப்போம்.
தெற்கு ஜப்பானின் நரா (Nara) என்ற நகரில் வசிப்பவர் ஓட்டோ (Otou) இவரது மனைவி கட்டயாமா யுமி (Katayama Yumi), இவர்களுக்கு 3 குழந்தைகள். சுமார் 20 ஆண்டுகளாக ஒரே வீட்டினுள் வாழ்ந்தபோதும் தன் மனைவியுடன் நேரடியாக ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்துள்ளார், தனது பிள்ளைகளுடனும் சகோதரிகளுடனும் பிறரிடமும் பேசுபவர் தன் மனைவியிடம் ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் பிள்ளைகளிடம் சொல்லியே சொல்லுவார் என்றாலும் அவர் மனைவி பேசுவதை காதில் வாங்கிக் கொள்வதில் வஞ்சகம் செய்யவில்லை.
இவர்களின் யோசிக்கி (Yoshiki) என்ற 18 வயதுடைய மூத்த மகன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (அந்த ஊரு 'சொல்வதெல்லாம் உண்மை'ங்க) கலந்து கொண்டு தன் தந்தை இதுவரை தன் தாயுடன் நேரடியாக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என்றும் தனது தாயையும் தந்தையையும் சேர்த்து வைக்குமாறு வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்தே விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது என்றாலும் 'ஒரு தடவ முடிவெடுத்துட்ட எம்பேச்ச நானே கேக்க மாட்டேன்ல' என வசனம் பேசினார்.
ஒருவழியாக பிரச்சனையை புரிந்து கொண்ட தொலைக்காட்சி நிர்வாகம், முதன்முதலில் அவர்கள் சந்தித்துக் கொண்டு காதலை பகிர்ந்து கொண்ட அதே பூங்காவில் மீண்டும் இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்தது. ஒரு மௌன போராட்டத்திற்குப்பின் பூங்காவில் முதலில் குற்றவுணர்வுடன் தன் மனைவியின் முகத்தையே பார்க்க மருகிய ஓட்டோ பின் ஒருவழியாக தன் மனைவி தனக்காகவும் தன் குழந்தைகளுகாகவும் பொருத்துக் கொண்ட வேதனைகளுக்காக நா தழுதழுக்க நன்றி தெரிவித்து கொண்டதுடன் இனி மனைவியுடன் பேசுவேன் என்றும் ஒற்றுமையுடன் இருப்பேன் எனவும் ஆனந்த கண்ணீருடன் தன் பெற்றோர்கள் நேருக்குநேர் முதன்முதலாக பேசிக்கொள்வதை பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகள் முன் உறுதியளித்தார்.
சும்மா தொணதொணன்னு பேசும் கணவன் அல்லது மனைவியை பெற்று 'அனுபவிப்பவர்கள்' அந்தப் பக்கம் ஓராமாக போய் விளையாடுங்க!
முடிவுரை:
20 ஆண்டுகளாக ஏன் பேசவில்லை என்பதற்கு ஓட்டோ சொன்ன காரணம், என் மனைவி என்னை கவனித்துக் கொள்வதை குறைத்துக் கொண்டு பிள்ளைகளை வளர்ப்பதிலும், என் குழந்தைகள் மீது பாசத்தை பொழிவதிலும் அதிக ஆர்வம் காட்டினர். எனவே பொறமை கொண்ட நான் அவளை பழிவாங்குவதற்காகவே பேசாமல் புறக்கணித்தேன் என்றார். இப்ப சொல்லுங்க 'அடேய்ய்ய்ய்ய்....'
Source: Mirror / Msn
தமிழில்: நம்ம ஊரான்
நயன மொழிகளில் கூட பேசவில்லையா?அவர் மலேசியா சபுரைவிட்டு ஊர்வந்து தங்கி விட்டரா?
ReplyDelete