.

Pages

Saturday, August 11, 2018

துபையில் பரிதவித்த தமிழ் இளைஞர்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைப்பு!

துபாய் ஈமான் அமைப்பின் முயற்சியால் தமிழ் நிறுவனத்தில் சரியான வேலை வழங்கப்படாத இரண்டு பேர் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர், செனை விநாயகர் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் வேல்சாமி. இவரது மகன் முருகன்.  கடையநல்லூர் தாலுகா முத்துகிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சுப்ரமணியன். இருவரும் சுமார் 25 வயதுடையவர்கள் ஆவர். இருவரும் அந்த பகுதியில் உள்ள ஏஜெண்ட் ஒருவர் மூலம் துபாயில் உள்ள ஆர்.பி.கே. டெக்னிகல் சர்வீஸ் நிறுவனம் ஒன்றில்  கடந்த ஆண்டு ஜூலை மாதம் வேலைக்கு வந்தார்கள்.

ஆனால் வேலைக்கு வந்ததும் அவர்களுக்கு உரிய பணி வழங்கப்படவில்லை. மேலும் சம்பளமும் தாமதமாக கிடைத்து வந்தது. இதனால் கடன் வாங்கி வேலைக்கு வந்தவர்களுக்கு குடும்பத்துக்கு பணம் அனுப்ப முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனர். இதனால் அந்த நிறுவனத்தின் மேலாளர் பிரசாத்திடம் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் திருப்தி இல்லை. எனவே சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்தனர். அவர் நிறுவன உரிமையாளரான தனது தந்தையிடம் பேசி தேவையான ஏற்பாடுகளை செய்வதாக கூறினார். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அதன் பின்னர் விசாவை கேன்சல் செய்து விட்டு தகவல் கொடுத்தார். மும்பைக்கு மட்டுமே விமான டிக்கெட் வழங்க முடியும் என கூறினார். இதனால் தமிழ் தவிர பிற மொழி தெரியாத அந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் அவர்கள் ஈமான் அமைப்பில் தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டனர். ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் வழிகாட்டுதலின் பேரில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதன் பின்னர் அல் வஹா நிறுவனத்தின் தலைவர் புதுக்கோட்டை அல்ஹாஜ் ஷர்புதீன் அவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசப்பட்டது. அவர்களும் திருவனந்தபுரம் வரை விமான டிக்கெட்டும். சேர வேண்டிய சம்பள பாக்கியையும் தருவதாக கூறினர். அதுவரை ஷர்புதீன் அவர்கள் தனது இருப்பிடத்திலேயே உணவு கொடுத்து அவர்களை தங்க வைத்தார்.

இதனிடையே கடையநல்லூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் அவர்களை தொடர்பு கொண்டு இந்த தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து தெரிவிக்கப்பட்டது. அவர்களும் ஈமான் அமைப்பு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்பின்னர் தொழிலாள்ர்கள் மும்பை சென்றதும் மும்பையில் இருந்து திருவனந்தபுரம் செல்ல வேண்டிய விமான டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டனர். இதனால் அந்த தொழிலாளர்கள் மும்பை விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல மிகவும் சிரமம் அடைந்தனர். அதனையடுத்து அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மூலம் மும்ப்பையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து அந்த தொழிலாள்ர்கள் கூறியதாவது : தமிழகத்தில் இருந்து பிழைப்பு தேடி வருபவர்களை தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் நிறுவனங்களே ஏமாற்றி வரும் நிலை இருந்து வருகிறது. இதுபோன்ற நிறுவனங்களுக்கு எந்த தொழிலாளர்களும் வேலைக்கு செல்லக் கூடாது. இந்த நிறுவனத்தின் மீது இந்திய தொழிலாளர் நல அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தில் புகார் அளித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க  மனித உரிமை அமைப்புகள் உதவிட முன்வரவேண்டும். மேலும் கடையநல்லூர் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் சட்டமனற உறுப்பினர் மூலம் புகார் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தனர்.

எனினும் தாங்கள் விரைவாக சொந்த ஊருக்கு வர உதவிய ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்,  அல் வஹா நிறுவன உரிமையாளர் அல்ஹாஜ் ஷர்புதீன் ஆகியோருக்கு  நன்றி தெரிவித்தனர்.  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.