.

Pages

Friday, August 28, 2020

தஞ்சையில் தமிழக முதல்வர் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக.28
இன்று (28.8.2020),  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி  தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இன்றைய தினம், தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதோடு, இந்த மாவட்ட தொழிற் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் இந்தியாவிலும், தமிழகத்திலும் பரவி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து அரசு இயந்திரங்களும் முடுக்கிவிடப்பட்டு போர்க்கால அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ICMR மற்றும் மருத்துவ நிபுணர்கள் அளிக்கின்ற ஆலோசனையின்படி நம்முடைய மருத்துவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இறப்பு சதவிகிதம் குறைந்திருக்கிறது.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுப் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 6,108 நபர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 5,209 நபர்கள், சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 107 நபர்கள். 27.8.2020 அன்று மட்டும் பாதிக்கப்பட்வர்கள் 122 நபர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 124 நபர்கள், சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 1 நபர், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் 792 நபர்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் 27.8.2020 வரை நடைபெற்ற மொத்த பரிசோதனைகள் 1,25,494. 27.8.2020 அன்று மட்டும் நடைபெற்ற பரிசோதனைகள் 2,187. இந்த மாவட்டத்தில் உள்ள பரிசோதனை நிலையம் ஒன்று. ஒரு நாளைக்கு சராசரியாக 1,200 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அரசு மருத்துவமனையில் 15 இடங்களில் 1,534 படுக்கை வசதிகளும், தனியார் மருத்துவமனையில் 6 இடங்களில் 260 படுக்கை வசதிகளும் உள்ளன. அதேபோல, கோவிட்கேர் சென்டருக்காக 3 அரசு கட்டடங்களில் 1,235 படுக்கை வசதிகளும் உள்ளன. கோவிட்கேர் சென்டருக்கான 2 அரசுக் கட்டடங்களில் 560 படுக்கைகளும், தனியார் கட்டடத்தில்  90 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. நோய்த் தடுப்பு பொருட்கள் தேவையான அளவிற்கு கையிருப்பில் உள்ளன. N95 முகக்கவசம், மும்மடிக் கவசம், PPE Kits, RTPCR Kits என அனைத்தும் போதிய அளவு கையிருப்பில் உள்ளன.

இம்மாவட்டத்தில் நடத்தப்பட்ட 2,227 காய்ச்சல் முகாம்களில் 1,04,658 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எந்தப் பகுதியில் நோய்த் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டாலும், மாவட்ட நிர்வாகத்திற்கோ, சுகாதாரத் துறைக்கோ, வருவாய் துறைக்கோ, உள்ளாட்சித் துறைக்கோ தகவல் தெரிவிக்கப்பட்டால், நடமாடும் மருத்துவக் குழு அங்கே நேரடியாகச் சென்று, அங்கிருப்பவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, நோய் அறிகுறி தென்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளித்து குணமடையச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

கும்பகோணம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையக் கட்டடம் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையக் கட்டடம் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 33,880 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, 21,362 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2019-20ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஏழை, எளிய மக்கள் வீட்டுமனைப்பட்டா வேண்டுமென்று விண்ணப்பித்த 6,179 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதில், 9,053 கிலோ மீட்டர் எடுத்துக்கொள்ளப்பட்டு ரூபாய் 52 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,445 வீடுகள் ஒதுக்கப்பட்டு அதில், 2,737 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளில் 25,728 பணிகள் தொடங்கப்பட்டு இதுவரை 15,437 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 692 குக்கிராமங்களைச் சேர்ந்த  1 லட்சத்து 33 ஆயிரத்து 854 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூபாய் 106 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. வல்லம் பேரூராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு ரூபாய் 34.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது, இந்த ஆண்டு டிசம்பரில் இப்பணிகள் நிறைவுபெற்று பயன்பாட்டிற்கு வரும்.

கும்பகோணம் ஒன்றியத்திற்குட்பட்ட 134 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ரூபாய் 110 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பரிசீலனையில் உள்ளது. கும்பகோணத்தில், அம்ருத் திட்டம் மூலம் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கும்பகோணம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் ஒன்றியத்திற்குட்பட்ட 67 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.  பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஒன்றியங்களுக்குட்பட்ட 252 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு முழு மதிப்பீடு தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 944 கோடி மதிப்பீட்டில் 48 எண்ணிக்கையிலான சீர்மிகு நகரத் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மாநகராட்சி புதிய அலுவலகக் கட்டடம் ரூபாய் 6.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு என்னால் திறக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி ஜனவரி மாதம் 2021-ல் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். தஞ்சாவூர் மாநகராட்சியில் கொள்ளிடம் ஆற்றில் புதிய குடிநீர் ஆதாரத்தை உருவாக்குதல், பழுதடைந்த குடிநீர் பிரதான மற்றும் பகிர்மான குழாய்கள் மாற்றும் பணிகள் ரூபாய் 192 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் எதிர்கால மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வழங்க இயலும். இத்திட்டம் 19.2.2021-க்குள் நிறைவுபெறும், மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அரசால் திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14,468 மகளிர் சுய உதவிக் குழுக்களில்
1,95,318 மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இவர்களுக்கு ரூபாய் 1034.57 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. நடப்பு 2020-21ஆம் ஆண்டில் இச்சங்கங்களுக்கு ரூபாய் 695 கோடி கடனுதவி வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூபாய் 124.20 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில், நான் முதலமைச்சரானவுடன் உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் கூடிய அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என்று சொன்னதைப்போல், ஒவ்வொரு இருசக்கர வாகனத்திற்கும் ரூபாய் 25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இதுவரை, மூன்று ஆண்டுகளில் 8,531 மகளிருக்கு மானியமாக ரூபாய் 21.26 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறையைப் பொறுத்தவரை கடந்த 3 ஆண்டுகளில்
295 குடிமராமத்துப் பணிகள் சுமார் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு ஒரு சிலப் பணிகள் தவிர்த்து மற்ற பணிகள் எல்லாம் முடிவடைந்துள்ளன. 2020-21ஆம் ஆண்டு ரூபாய் 35.38 கோடி மதிப்பீட்டில் 109 குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 69 பணிகள் முடிவுற்று, 40 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. 2020-21ஆம் ஆண்டில் ரூபாய் 22.92 கோடி மதிப்பீட்டில் 165 பணிகள் 945 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 933 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிவு பெற்றுள்ளன.

கல்லணையில் காவேரி, வெண்ணாறு மற்றும் கொள்ளிடம் தலைப்பு மற்றும் மணற்போக்கி ஆகியவற்றில் பழைய துருப்பிடித்த அடைப்புப் பலகைகளை மாற்றி ரூபாய் 8.53 கோடி செலவில் புனரமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூபாய் 233.58 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, அதில் இம்மாவட்டத்தில் ரூபாய் 117 கோடி  மதிப்பீட்டில் 27 பணிகள் துவங்கப்பட்டு, ரூபாய் 100.14 கோடி மதிப்பீட்டில் 22 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. காவேரி, வெண்ணாறு மற்றும் அக்னியாறு ஆகிய ஆறுகளில் 99 நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டுமானங்கள் அமைக்கும் திட்டம்
ரூபாய் 49 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. பாபநாசம் வட்டம், ராஜகிரி கிராமம், குடமுருட்டி ஆற்றின் குறுக்கே ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் திருமலைராஜன் குடமுருட்டி நீரொழுங்கி புனரமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.

நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் பயன் பெறும் வகையில் காவேரி உப வடிநிலப்பகுதிகளில் உள்ள பாசன அமைப்புகளை விரிவுபடுத்துதல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூபாய் 3,384 கோடிக்கான மதிப்பீடு அரசின் பரிசீலனையில் உள்ளது. திருவிடைமருதூர் வட்டம், விநாயகம் தெரு கிராமம் மற்றும் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், வேம்பக்குடி கிராமங்களுக்கு இடையே அணைக்கரை அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கீழணைக்கு அருகில் ரூபாய் 650 கோடி மதிப்பீட்டில் புதிய நீரொழுங்கி அமைக்கும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது.

காவேரி படுகையில் நீர் பாசன உள்கட்டமைப்பின் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் கல்லணை கால்வாயை மேம்படுத்தும் திட்டம் ரூபாய் 2,298.75 கோடிக்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன்  செயல்படுத்தப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு ரூபாய் 300 கோடிக்கு 2020-2021 வரவு செலவு திட்டத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை வட்டம், ராஜாமடம் அருகே  அக்னியாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணையும்,  பொன்னவராயன் கோட்டை கிராமத்தில் நசுவினி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணையும், ஏனாதி கிராமத்தில் மகாராஜசமுத்திரம் ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய ஒரு நவீன நீரேற்று பாசனத் திட்டம் ஆகிய 3 திட்டங்களுக்கு ரூபாய் 32 கோடிக்கான மதிப்பீடு  அரசின் பரிசீலனையில் உள்ளது. பட்டுக்கோட்டை வட்டம், தம்பிகோட்டை கிராமம், அமெரிக்குளம் ஏரிக்கு பாமணியாற்றில் ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் நீரேற்று பாசனத்திட்டம் அமைத்து நீர் வழங்கும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது.

பட்டுக்கோட்டை அக்னியாற்றின் குறுக்கே பண்ணவயல் ஏரிக்கு நீர் வழங்கும் பொருட்டு ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் ஒரு அணைக்கட்டு கட்டும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது. பேராவூரணி, வில்லுனிவயல், அம்புலியாற்றின் குறுக்கே ரூபாய் 10.17 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

பாபநாசம் மற்றும் வெண்ணாற்றின் குறுக்கே முனியூர் மற்றும் விக்ரமனார்  கால்வாய்களுக்கு  நீர் வழங்கும் பொருட்டு ரூபாய் 9 கோடி மதிப்பீட்டில் ஒரு தளமட்டச் சுவர் அமைக்கும் திட்டம்,  தஞ்சாவூர் சமுத்திரம் ஏரியை ரூபாய் 9 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும்  திட்டம், பாபநாசம், வெட்டாற்றின் குறுக்கே சுரைக்காயூர் மற்றும் காவலூர் வாய்க்கால்களுக்கு தண்ணீர் வழங்க ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் தளமட்டச் சுவர் கட்டும் பணி, பாபநாசம் வெண்ணாற்றின் குறுக்கே படுகை மட்டத்தை  நிலைப்படுத்துதல், நஞ்சுமனார் வாய்க்காலுக்கு நீர் வழங்கும் திட்டத்திற்கு  ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் தளமட்டச்சுவர் அமைக்கும் திட்டம் ஆகியவை அரசின் பரிசீலனையில் உள்ளன.

நெடுஞ்சாலைத் துறையில் பல பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் கபிஸ்தலத்தையும், அரியலூர் மாவட்டம், மேலராமநல்லூர் பகுதியை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் உயர்மட்டப் பாலம் அமைக்க விரிவான திட்ட  அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.  கும்பகோணம் புறவழிச்சாலை கட்டம்-3,  9.42 கிலோ மீட்டர் நீளத்தில் அமையவுள்ளது, இதற்காக 28 கோடி மதிப்பில் நிலம் எடுக்கின்ற பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. திருக்காட்டுப்பள்ளி நகருக்கு ரூபாய் 3.20 கோடி நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்க நில எடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. பட்டுக்கோட்டை நகருக்கு 14.40 கிலோ மீட்டர் நீளத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. திருவையாறு நகருக்கு சுமார் 6.75 கிலோ மீட்டர் நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் நிலம் எடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை-கன்னியாகுமரி தொழில் வடத் திட்டம் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம்-சீர்காழி சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் நீளத்தில் ரூபாய் 140 கோடி மதிப்பீட்டிலும்,  தஞ்சாவூர்-மன்னார்குடி சாலையில் சுமார் 16 கிலோ மீட்டர் நீள சாலை ரூபாய் 95 கோடி மதிப்பீட்டிலும், கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் 5.6 கிலோ மீட்டர் நீள சாலை ரூபாய் 48 கோடி மதிப்பீட்டிலும் சாலைகளை இருவழித் தடமாக அகலப்படுத்த நில எடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

நிரந்தர வெள்ள நிவாரணப் பணித் திட்டத்தில் 8 பாலப் பணிகள் ரூபாய் 76.27 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி பரிசீலனையில் இருக்கிறது.  கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கல்லணையில் ரூபாய் 90.96 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது, இவ்வாண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

மீன்வளத் துறையில், பட்டுக்கோட்டை வட்டம், கீழத்தோட்டம் மீனவ கிராமத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேளாண்மைத் துறையில்,  கடந்த ஆண்டு தமிழ்நாட்டிலேயே அதிக பரப்பில் 1,92,191 ஹெக்டேர் நெல் சாகுபடி மற்றும் 10,74,462 மெட்ரிக் டன் அளவு நெல் உற்பத்தி செய்யப்பட்டு முதலிடம் வகித்த மாவட்டம் என்ற பெருமையை தஞ்சாவூர் மாவட்டம் பெற்றுள்ளது. நடப்பாண்டு குறுவை நெல் சாகுபடி செய்திட 1,08,000 ஏக்கர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 1,45,602 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.  இது கடந்த 35 ஆண்டுகளில் அதிகபட்ச சாதனை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

டெல்டா மாவட்ட வேளாண் பெருமக்கள் கோரிக்கைகளை உணர்ந்து  காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் இயற்றியதன் மூலம் டெல்டா பகுதியில் வேளாண் தொழில்களுக்கு பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது. 

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 3,54,645 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 705 கோடியே 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான தொகுப்பு திட்டத்தின் கீழ் 462 கோடியே 41 இலட்சம் ரூபாய் மறுசீரமைப்பு பணிகளுக்காகவும்,  இடுபொருள் மானியமாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில்  வழங்கப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக, பாதிக்கப்பட்ட  92 ஆயிரத்து 466 விவசாயிகளுக்கு  இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக 108 கோடியே 32 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

நுண்ணீர் பாசனத் திட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் ரூபாய் 24 கோடியே 96 இலட்சம் மானியத்தில் நுண்ணீர் பாசன அமைப்புகள் 21 ஆயிரத்து 234 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ளன. 2020-21ல் இத்திட்டத்திற்கு ரூபாய் 38 கோடியே 19 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 1657 விவசாயிகளுக்கு 1657 வேளாண் இயந்திரங்கள் 19 கோடியே  62 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. தரமான இடுபொருட்களை இருப்பு வைக்க 8 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூபாய் 12 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன. மேலும், பாபநாசம் மற்றும் திருவிடைமருதூரில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களும்,  சீதாம்பாள்புரத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையமும் கட்டப்பட்டு வருகின்றன.

6 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் பரிவர்த்தனைக் கூடங்கள்  7  கோடியே  60 இலட்சம்  ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. 

87 விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்புகள்  ரூபாய் 4 கோடியே 69 இலட்சத்து 44 ஆயிரம் மானியம் கொடுக்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் 5 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும்,

7 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தஞ்சை மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2011ல் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை பல கல்லூரிகளை அம்மாவின் அரசு தஞ்சை மாவட்டத்திற்கு கொடுத்திருக்கிறது. பேராவூரணியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செங்கிப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி, பாபநாசத்தில் பாலிடெக்னிக் கல்லூரி, ஈச்சங்கோட்டையில் வேளாண் கல்லூரி, ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருபுவனத்தில் ஐ.டி.ஐ என பல கல்லூரிகளை இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், இங்குள்ள ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி, தொழிற் கல்வி படிக்கும் சூழ்நிலையை  அம்மாவின் அரசு  உருவாக்கித் தந்திருக்கிறது. தஞ்சை நகரத்தை மாநகராட்சி ஆக்கியதும் மாண்புமிகு அம்மாவின் அரசு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கஜா புயல் மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை நகராட்சி – கரம்பியம் திட்டப்பகுதியில் 720 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ரூபாய் 76.38 கோடிக்கும், பெருமகளூர் பேரூராட்சி – வளயன்லயன் திட்டப்பகுதியில் 168 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ரூபாய் 15.96 கோடிக்கும், அதிராம்பட்டினம் பேரூராட்சி – ஏரிப்புறக்கரை திட்டப்பகுதியில் 336 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ரூபாய் 35.28 கோடிக்கும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம்  பகுதிகளில் சொந்த இடத்தில் கான்க்ரீட் வீடு கட்டும் திட்டத்திற்காக 7977 வீடுகள் கட்ட ரூபாய்  239.31 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

தொழில் துறையைப் பொறுத்தவரை, இந்த மாவட்டத்தில் 4,586 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் 24,726 நபர்கள் வேலைவாய்ப்பை பெற்றிருக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் MSME திட்டத்தின் கீழ் 9,278 நிறுவனங்களுக்கு ரூபாய் 122 கோடி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

CORUS திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 1,152 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 132.31 கோடி கடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
பொதுப்பணித் துறையின் சார்பாக தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு பாசனம் நவீனப்படுத்தும் திட்டத்தில், சுமார் 22 பணிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. இன்னும் 5 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகவே தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை அம்மாவின் அரசு தொடர்ந்து நிறைவேற்றிக்  கொண்டிக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

கேள்வி – தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை அளித்திட அதிக கட்டணத்துடன் தனி பேக்கேஜ் வசூலிப்பது தொடர்பாக...
பதில் – தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு இவ்வளவு கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக கட்டணம் எங்காவது வசூலிக்கப்பட்டு, அது குறித்து அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி – காவேரி – கோதாவரி இணைப்பு திட்டம் குறித்து...
பதில் – காவேரி – கோதாவரி திட்டம் ஒரு மிகப் பெரிய திட்டம். அது ஒரு நீண்ட காலத் திட்டம். அம்மாவின் அரசு இதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்காக நமது இரண்டு அமைச்சர்களை ஆந்திராவிற்கு அனுப்பி, ஆந்திர முதலமைச்சர் அவர்களை சந்தித்து அவர்களுடைய எண்ணத்தை தெரிந்து கொண்டோம். இது தொடர்பாக நானும் கடிதம் எழுதியிருந்தேன். தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டேன். காவேரி – கோதாவரி இணைப்பு திட்டம் ஆந்திரா மாநிலம் வழியாக வரவேண்டும். ஆகவே நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று சொன்னோம். அவர்களும் உதவுவதாக நல்ல செய்தியை சொல்லியிருக்கிறார்கள். அதற்கு பிறகு தெலுங்கானா முதலமைச்சர் அவர்களை சந்திக்க மீன்வளத் துறை அமைச்சர் அவர்களையும், உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்களையும் அனுப்பி வைத்தேன். அவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தென் மாநிலத்தில் இருக்கின்ற முதலமைச்சர்கள் ஒன்றாக இணைந்து இந்த காவேரி – கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள். முதல் கட்டமாக இது குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறோம்.

கேள்வி – விவசாயத்திற்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்படுமா...
பதில் – அதுக்கு தான் வேளாண்மைத் துறை இருக்கிறதே. ஒவ்வொரு துறைக்கும் தனி பட்ஜெட் அறிவிக்க முடியாது.  மானியக் கோரிக்கையில் அந்தந்த அமைச்சர்கள் எந்தெந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளையும் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். அது எல்லா மாநிலங்களிலும் அப்படி தான் இருக்கிறது.

கேள்வி – சம்பா சாகுபடி நடந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் நமக்கு மேட்டூரில் 2 மாதங்களுக்கு தான் இருக்கிறது. அக்டோபர் - நவம்பர் - டிசம்பர் மாதங்களில் பருவமழை பொய்கின்ற காலத்தில் மேட்டூரில் போதிய தண்ணீர் இருப்பு வைப்பதற்கு...
பதில் – கற்பனையான கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. எல்லோரும் மழை பொழியும் என்று எதிர்பார்க்கிறோம். நமக்கு கிடைக்க வேண்டிய பங்குநீர் கிடைப்பதற்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு கொடுத்திருக்கிறது. நாம் கடுமையாக முயற்சி எடுத்து கொண்டுதான் இருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் காவேரி மேலாண்மை ஆணையம் கூட்டப்படுகிறது. அங்கே நம்முடைய கருத்துகளை எடுத்து சொல்கின்றோம். நமக்கு எவ்வளவு நீர் தேவைப்படும் என்ற விவரங்களை தெரிவிக்கிறோம். ஒவ்வொரு மாதத்திற்கு எவ்வளவு நீர் கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. அதன்படி நாம் கேட்டு பெற்றுக் கொண்டு இருக்கிறோம்.

கேள்வி – வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து...
பதில் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா காலத்திலும் சரி, சட்டமன்ற தேர்தல் வந்தாலும் சரி, நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் சரி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தான் தேர்தலை சந்தித்திருக்கிறோம். அந்த நிலைப்பாடு தான் தொடரும். நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தான் தேர்தல் நடந்திருக்கிறது. ஆகவே எந்த தேர்தல் வந்தாலும் எங்கள் கூட்டணியை பொறுத்தவரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தலைமை வகிக்கும்.

கேள்வி – தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் கொள்கை குறித்து...
பதில் – இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம். இயற்கை வேளாண் கொள்கை தொடர்பாக அரசினுடைய பரிசீலனையில் இருக்கிறது.

கேள்வி – மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்கள் இந்த கொரோனா காலத்திலும்  கடன் பெற்றவர்களிடம் கட்டாய பண வசூல் செய்கிறார்களே....
பதில் – இப்படிப்பட்ட புகார் அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் அரசு அதற்குண்டான நடவடிக்கையை எடுக்கும்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.