.

Pages

Saturday, January 10, 2015

அபுதாபி மீலாது நபி விழாவில் அதிரை கவியன்பன் கலாம் பங்கேற்று கவிதை வாசிப்பு !

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய மீலாது நபி விழா அபுதாபி ருச்சி ரெஸ்டரண்ட் பென்குயிண்ட் அரங்கில் நடைபெற்றது. அபுதாபி  அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது நிகழ்ச்சிக்கு தலைமையேற்று அனைவரையும் வரவேற்றார். கொள்ளுமேடு மெளலவி இர்பனுல்லாஹ் மன்பஈ கிராஅத் ஓதினார்.

திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜியார் துவக்கவுரையாற்றினார். வத்தலக்குண்டு கன்சுர் ரஷாத் அரபிக் கல்லூரியின் நிறுவனர் மெளலவி ஷம்சுல் ஹுதா ரஷாதி,கருப்பூர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் மௌலவி ஷாஜஹான் உஸ்மானி,ஆகியோர் சிற்றுரை நிகழ்த்தினர். அய்மான் பைத்துல் மால் பற்றிய அறிமுகவுரையை மெளலவி ஹாபிழ்.ஹுஸைன் மக்கி ஆலிம் மஹ்ளரி நிகழ்த்தினார். தீன் இசை பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் இஸ்லாமிய கீதங்கள் இசைத்தார். நிகழ்ச்சியின் நிறைவுப் பேருரையை காயல்பட்டினம் மஹ்லரா அரபிக்  கல்லூரி பேராசிரியர்  மௌலவி கே.எம்.காஜா  முஹையதீன் பாகவி நிகழ்த்தினார்.

பி.எஸ்.ஏ.ரஹ்மான் அவர்களுக்கு இரங்கல்
உலகத் தொழில் அதிபர்களில் ஒருவராகத் திகழ்ந்து, அனைத்து துறைகளிலும் சிறப்பாக சேவையாற்றிய கல்வித் தந்தை,சமுதாய ஒளி விளக்கு டாக்டர்.பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களுக்காக இரங்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக அன்னாரின் மஃக்பிரத்திற்காக யாஸீன் ஓதப்பட்டு, அவரைப்பற்றிய நற்குணங்கள் நினைவுக் கூறப்பட்டது. இரங்கல் உரையை பி.எஸ்.ஏ.அவர்களின் செயலாளராக பணியாற்றிய அய்மான் சங்க முன்னாள் தலைவர் கீழை.சைய்யது ஜாஃபார்,அமீரக காயிதேமில்லத் பேரவை பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான்,அதிரை கவியன்பன் கலாம் ஆகியோர் நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியை அய்மான் சங்க செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் மெளலவி ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்லரி,துபாய் ஈமான் அமைப்பின் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹையத்தீன்,அய்மான் கல்லூரி ஹபீபுல்லாஹ், அபுதாபி ஐ.எம்.எஃப்.ஷர்புத்தீன் ஹாஜியார்,காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகள்,மெளலிது கமிட்டி நிர்வாகிகள்,பல்வேறு ஊர் ஜமாஅத் நிர்வாகிகள் என திரளானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தங்களை அய்மான் பைத்துல் மால் திட்டத்தில் ஆர்வத்துடன் இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை அய்மான் நிர்வாகிகளான கீழை.முஹம்மது ஜமாலுத்தீன்,துணைத் தலைவர் திருவாடுதுறை அன்சாரி பாஷா,செயலாளர் களமருதூர் ஷர்புத்தீன்,செயற்குழு உறுப்பினர்களான காயல் சேக்னா,லால்பேட்டை முஹம்மது அப்பாஸ்,ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர்,உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியாக அய்மான் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் லால்பேட்டை சல்மான் பாரிஸ் நன்றி கூற,மெளலவி ஹுஸைன் மக்கி ஆலிம் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.

அதிரை கவியன்பன் கலாம் அவர்கள் இயற்றிய நபிகளார்(ஸல்) அவர்கள் பற்றிய கவிதையினை தேனிசைக் குரலால் தேரிழந்தூர் தாஜூதீன் அவரகள் பாடினார்கள்.அவர்கள் பாடிய- அதிரை கவியன்பன் கலாம் அவர்கள் இயற்றிய கவிதை

மீலாதுந்நபி வாழ்த்துக் கவி: 
பூமான் நபிகள் பிறக்காம(ல்)
      பூமி என்றும் சிறக்கா(து)
கோமான் நபியின் வரவால்
       கொடுமை உலகில் குறைவாம்

நாமாய்த் தேடாச் செல்வம்
      நமக்குக் கிடைத்த மார்க்கம்
ஈமான் ஊட்டும் வேதம்
     ஏந்தி வந்த தூதாம்! 

பாலை வனத்தின்  ரோஜா
     பாரோர் போற்றும் ராஜா
மேலை நாடும் வியக்கும்
      மேன்மை ஞானம் சுரக்கும்

காலைக் கதிராய் வீசும்
       கல்பின் ஒளியே பேசும்
சோலை வனத்தின் வாசம்
      சுவனம் காட்டும் நேசம்! 

உம்மத் நினைவால் வாடும்
    உயர்ந்த நிலையை நாடும்
உம்மைக் காண தேடும்
    உள்ளம் இதனைப் பாடும்

எம்மில் இல்லா(த) போதும்
    என்றும் ஸலவாத் ஓதும்
எம்மை இணைக்கும் உறவு
    இதனால் மறந்தோம் பிரிவு! 

பகைவர்க்(கு) அருளும் நெஞ்சம்
     பணிவும் உம்மைக் கெஞ்சும்
மிகைக்கும் வீரம் வெல்லும்
     மேன்மை வெற்றிச் சொல்லும்

நகைக்கும் வஞ்சம் கொண்டோர்
     நன்றாய் உணர்ந்து மீண்டார்
திகைக்கும் நாளை மறுமை
    தேடி வருவோம் உம்மை! 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.