.

Pages

Tuesday, May 19, 2020

தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து வெளி மாநிலத் தொழிலாளர்கள் 1464 பேர் சொந்த ஊர்களுக்கு வழியனுப்பி வைப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: மே.19
தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு ரயில் மூலமாக சென்ற வெளிமாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (19.05.2020) நேரில் வழியனுப்பி வைத்தார்.

கொரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலை செய்துவந்த வெளிமாநில தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டு வந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, வெளிமாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பணியாற்றி வந்த பீகார் மாநில தொழிலாளர்கள் 1464 பேர் தங்களின் சொந்த ஊருக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்த பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 4000 பேர் வேலை செய்து வந்தனர். அவர்களில் சொந்த மாநிலத்திற்கு செல்ல விருப்பமுள்ளவர்களின் விவரங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கணக்கெடுக்கப்பட்டது. அதனடிப்படையில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 600 தொழிலாளர்கள் தஞ்சாவூரிலிருந்து ரயில் மூலம் நேற்று (18.05.2020) அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, இன்று (19.05.2020) பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 1464 தொழிலாளர்கள் ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரடங்கின்போது வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, பிஸ்கட், வாழைப்பழம், மோர் ஆகியவை வழங்கப்பட்டது. சொந்த ஊருக்கு செல்லும் வெளிமாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றிவந்த ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ஆந்திரபிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து சொந்த மாநிலத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்த 2000 தொழிலாளர்களில் இதுவரை சுமார் 1800 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில் வெளிமாநில தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் ஜெ.லோகநாதன், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) திரு.சக்திவேல், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ்,  தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய்க் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி, உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (முத்திரைக்கட்டணம்) கமலக்கண்ணன், தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.