தஞ்சாவூர் மாவட்டத்தில் 180 - க்கும் மேற்பட்ட காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு 11,958 நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சைப்பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகள் மற்றும் பிராணவாயு கருவி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 1542 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 1000 நபர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள நபர்கள் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வல்லம் கொரோனா சிகிச்சை மையம் மற்றும் பட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையத்தில் மருத்துவர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதலாக 30 படுக்கை வசதிகள் மற்றும் பிராண வாயு கருவி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சை பெற வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டால், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படாத நபர்கள் வல்லம் கொரோனா சிகிச்சை மையம் மற்றும் பட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். கும்பகோணம் பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, அடுத்த வாரம் முதல் செயல்படவுள்ளது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மற்றும் கும்பகோணம் பகுதியில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் வசிப்பிடம் அமைந்துள்ள பகுதிகளில் சுமார் 180 பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு 11,958 நபர்களுக்கு இதுவரை காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல், கைகழுவுதல் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படை குழுக்கள் மூலம் கொரோனா தடுப்பு தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுவது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத காரணத்திற்காக இதுவரை சுமார் 26,000 நபர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் பின்பற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர்(பொ) டாக்டர்.மருததுரை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.