.

Pages

Monday, July 27, 2020

தஞ்சை மாவட்டத்தில் 695 முகாம்களில் 37,640 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை: ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: ஜூலை 27
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கும்பகோணம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ்  தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று (27.07.2020) நடைபெற்றது.

கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இன்று (27.07.2020) முதல் புதன்கிழமை (29.07.2020) வரை வட்டாட்சியர் அலுவலகம் மூடப்படவுள்ளது.

கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 30.07.2020 அன்று கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் மீண்டும் திறக்கப்பட உள்ளது. கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கும்பகோணம் நகராட்சி காரனேஷன் மருத்துவமனையில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் முகாமினையும், கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையத்தினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 2090 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1064 நபர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 1024 நபர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வல்லம் கொரோனா சிகிச்சை மையம், பட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையம் ஆகிய இடங்களில் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு, காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாநகராட்சி, கும்பகோணம் நகராட்சி, பட்டுக்கோட்டை நகராட்சி ஆகிய பகுதிகளில் காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மூலம் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இம்முகாம்கள் மூலம் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் அதிகம் உள்ள நபர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 695 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு, 37640 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 753 நபர்களுக்கு ஸ்வாப் பரிசோதனை செய்யப்பட்டதில், 54 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் பகுதியில் 151 தெருக்களில் கொரோனா நோய்த்தொற்று பதிவாகியுள்ளது. அவற்றில் 25 தெருக்களில் மூன்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோய்த்தொற்று பதிவாகியுள்ளது. அந்த 25 தெருக்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கும்பகோணம் பகுதியில் கொரோனா நோய்த்தொற்று பதிவாகியுள்ள 151 தெருக்களிலும் 151 முகாம்கள் நடத்தப்பட்டு, 11087 நபர்களுக்கு வெப்ப அளவு பரிசோதனைக் கருவி மற்றும் பிராண வாயு கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஸ்வாப் பரிசோதனை செய்யப்பட்ட 60 நபர்களில், 12 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள பொதுமக்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கும்பகோணம் பகுதியில் கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக அன்னை பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தும் மையம் செயல்படவுள்ளது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கைகழுவுதல், கிருமிநாசினி தெளித்தல் ஆகியவற்றை முழுமையாக கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர்.ராமு, கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் விஜயன், கும்பகோணம் நகராட்சி ஆணையர் லெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.