.

Pages

Monday, November 10, 2014

டெல்டாவில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தினால் நிலநடுக்கம் ! அதிர்ச்சி ரிப்போர்ட் !!

File Photo
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்தினால், நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக  தமிழ்நாடு பொதுப் பணித் துறை மூத்த பொறியாளர் சங்க மாநிலச் செயலர்  வீரப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர்  சங்கத்தின் சார்பில், காவிரி பாசனப் பகுதிகளைப்  பாலைவனமாக்கும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கருத்தரங்கு, தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில்  நடைபெற்றது. இதில், மீத்தேன் திட்ட பாதிப்புகள் குறித்த  ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வீரப்பன் கூறுகையில், "இந்த திட்டத்தின் மூலம் விளைநிலங்களில்  50 இடங்களில் 2 ஆயிரம் ஆழ்குழாய் கிணறுகளை 5 ஆயிரம் அடி வரை அமைத்து, இடையில் உள்ள நிலக்கரிப் படுகையை உடைத்து தண்ணீரை வெளியேற்றி மீத்தேன் வாயு எடுக்கப்படும். அந்த இடத்தில் மீத்தேன் வாயு எடுத்து முடித்த பிறகு, எதிர்காலத்தில் நிலக்கரி எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மீத்தேன் திட்டம் செயல்படுத்த உள்ள பகுதி முழுவதும் காவிரி பாசனப் பகுதியில் உள்ளது. மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் குறையும். நிலத்தடி நீர் முழுமையாக மாசுபடும். இந்தத் தண்ணீரைக் குடிக்கவும் விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாது.

இதனால் காவிரி டெல்டாவில் உள்ள பாரம்பரியமாக உள்ள 13 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாழாகும். மீத்தேன் வாயு எடுக்கும்போது வெளியேற்றப்படும் நீரால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடல்நீர் உள்புகும் வாய்ப்பு உள்ளது. மேலும் மீத்தேன் திட்டத்தால் டெல்டா பகுதியில் நிலப்பரப்பே 20 அடி கீழே இறங்கும் அபாயமும் உள்ளது.

வரலாற்றுச்  சின்னங்கள், புராதனச் சின்னங்கள், ஏரிகள் பாதிப்புக்கு உள்ளாகும். இதையெல்லாம்விட, மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்தினால் நிலநடுக்கம் போன்ற பேரழிவுகள் ஏற்படும். டெல்டா பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்படும். எனவே, காவிரி டெல்டா பகுதியைப்  பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்றார்

2 comments:

  1. மீத்தேன் எடுக்க 6000 அடி துளைகள் போட்டு அங்கிருந்து பல்லாயிரம் மீட்டர் பக்கவாட்டு துளைகள்கள் போட்டு அதில் உள்ள கடினமான
    பாறைகளை சக்திவாய்ந்த வெடி பொருட்களால் வெடிக்க செய்து பின் நீரில் ரசாயனம் கலந்து உள்ளே செலுத்தப்படும்.

    ஒரு கிணற்றுக்கு இந்த மீத்தேனை இந்த முறையில் வெளியில் கொண்டுவர சுமார் 5 நாள் செயல்பாடுகளுக்கு செலவாகும் நீர் 5 கோடியே 66 லட்சம் லிட்டர்கள்.

    சோதனை முறையில் 50 கிணறுகளுக்கு 263 கோடி லிட்டர் நீர் தேவைப்படும். ஆனால் தஞ்சை டெல்ட்டா பகுதியில் 2000 கிணறுகள் வர இருக்கின்றது.

    2000 கிணறுகளுக்கு 4 TMC நீர் தேவைப்படும் .அப்படி என்றால் மேட்டூர் அணையின் 80 TMC நீரை இந்த கிணறுகள் 4 மாத்தில் தின்று தீர்த்திவிடும் கர்நாடகாவில் இருந்து 10 TMC நீரை பெற தமிழக மக்கள் 20 TMC கண்ணீரை வெளியிடுகின்றோம்.

    மேலும் அடுத்த அதர்ச்சி தகவல் ஒரு கிணற்றிற்கு 400 லாரிகள் மணல் தேவை என்றால் 2000 கிணறுகளுக்கு 8 லட்சம் லாரிகள் மணல் தேவை . இப்படி எடுக்கப்படும் மீத்தேன்கள் மூலம் வெளியாகும் சுமார் 64 வேதிபொருட்கள் சேர்ந்த நச்சு கழிவுகள் அதுவும் இந்த தஞ்சை டெல்ட்டா பகுதியிலேயே கொட்டப்படும்.

    இந்த பட்டியல் முறையை ஒரு 40 ஆண்டுகளுக்கு சிந்துயுங்கள் .தஞ்சை டெல்ட்டாவின் நிலை எப்படி இருக்கும் என்பதை .மீத்தேன் எடுக்கும் நிலப்பகுதியில் இருந்து வெளியாகும் தண்ணீர்கள் அதில் கார்பன் டை ஆக்சைடு குறைவு எனவே அந்த பகுதியில் நாம் சொந்த தேவைக்கு பயன்படுத்தும் ஆள் குழாய் நீர் கூட எளிதில் தீ பற்றி எறியும் தன்மைக்கு மாறும்.தனியாருக்கு தாரைவாக்கும் இதுபோன்ற திட்டங்களை தஞ்சை டெல்ட்டா பகுதியில் ஒருபோதும் அனுமதிக்க கூடாது .

    ReplyDelete
  2. இந்தக் கருத்தரங்கில் நானும் பேராசிரியர் அப்துல் காதர் அவர்களும் கலந்து கொண்டோம். பல அதிர்ச்சியான தகவல்கள். இன்ஷா அல்லாஹ் இயன்றால் பகிரலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.