2019 ம் ஆண்டு ஜனவரி 26 ந் தேதியிலிருந்து 28 ந் தேதி வரை தமிழக முஸ்லிம்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுத வேண்டிய நிகழ்வு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள இனாம் குளத்தூரில் நடந்துள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
பொட்டல் காடுகளாகவும், முட்கள் நிறைந்த தரிசு நிலங்களாகவும் உள்ள இடங்களில் வெள்ளையுடையும், தலையில் தொப்பியும், தாடியும் வைத்த முஸ்லிம் மக்கள் உழவர் நஞ்சை நிலத்தை பண்படுத்த செய்யும் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். அந்த நிலங்கள் யாருடையது என்று நீங்கள் கேட்கலாம். அவைகள் அங்குள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் சொந்தமாம். அவைகளை விலை பேசி வாங்கவோ அல்லது வாடகைக்கு, அல்லது குத்தகைக்கு எடுக்கவோ இல்லையாம். அந்த ஊரில் உள்ள மக்களை அணுகி முஸ்லிம்கள் மார்க்க சம்பந்த சொற்பொழிவுகளை நிகழ்த்த வேண்டும் என்று கேட்டதும் அவர்கள் வேண்டுகோளை ஏற்று இரவலாக கொடுக்கப் பட்டதாம். அதுதான் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம். அது வட இந்திய கலாச்சாரத்தினை விட்டு வேறுபட்டது என்பதினை காட்டியதாம்.
நான்கு மாதத்திற்கு முன்பு எந்த முன் அறிவிப்புமில்லாமல் எறும்புபோல சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்த 'பாய்' மார்களைக் கண்ட மணப்பாறை நுண்ணறிவுப் பிரிவு ஏடு அங்கு என்னதான் நடக்கின்றது என்று பார்த்தபோது நிலங்களை பண்படுத்தியும், முட்புதர்களை களையெடுத்தும், நீர்நிலைகளை ஆழப்படுத்தியும், செயற்கை தண்ணீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தும், பிரமாண்டமான பந்தல் எழுப்பியும், தற்காலிக கழிப்பறைகள் அமைத்தும், உணவிற்காக சிறு, சிறு கூடாரங்கள் எழுப்பியும், வாகனங்கள் நிறுத்துவதிற்காக வசதி வாய்ப்புகள், சாலைகள் அமைத்தும், பூமியினை சமப்படுத்தியதோடு மணலும் பரப்பப்பட்டதாம். அங்கு வேலைகள் செய்து கொண்டிருந்தவர்களை அணுகி அங்கே என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டபோது அல்லாஹ்வின் கட்டளைகளை விளக்கப் போகிறோமென்றும், மக்கள் தீய செயல்களிருந்து விடுபட்டு, நலமுடன் வாழ துவா செய்யப் போகின்றோம் என்றும் கூறியதை தன்னுடைய ஆய்வாளரிடம் தெரிவித்தாராம்.
1997 ம் ஆண்டு மே மாதம் 28 ,29 ந் தேதிகளில் வேலூர் மாவட்டம் மேல்விசாரம் மாநாட்டிற்கு பின்பு நடக்கும் முஸ்லிம்கள் மாநாடு இதுதான். தமிழ் நாட்டில் மட்டுமல்ல தென்னாட்டின் பல பகுதிகளிருந்து வந்த இஸ்லாமிய பெருமக்கள் கூடியதினை அங்கு கண்டார்கள். இந்த மாநாட்டிற்கு வீடுதோறும், நோட்டீஸ் கொடுக்கவில்லை, வீதிதோறும் ஒலி பெருக்கி வைத்து காது கிழிய கத்தவில்லை, தெரு முனைகளில் விளம்பர பேனர்களில்லை, டிராபிக் ராமசாமி போன்ற அனுமதியில்லா பேனர்கள் எடுங்கள் என்று போராட்டம் நடத்த வேலையில்லை, வீட்டுச்சுவர்களிலோ அல்லது அரசு அலுவலக கட்டிடங்களின் சுவர்களிலோ விளம்பரங்கள் இல்லை. மாறாக ஒவ்வொரு மஹல்லாவிலும் ஜும்மா தொழுகைக்குப் பின்பு அறிவிப்பு மட்டும் செய்யப்பட்டது. ஆனால், அங்கு கூடியதோ மனிதக் கடல் போன்று இருந்ததாம். முஸ்லிம்கள் சாரை, சாரையாக ஒன்று கூட ஆரம்பித்தார்களாம். அங்கே ரயிலில் வருபவர்கள் இறங்குவதற்காக ரயில்வே அமைச்சகமும் ஒவ்வொரு ரயிலும் நின்று செல்ல வசதி செய்யப் பட்டதாம், வாகனங்களில் வருபவர்கள் நெடுஞ்சாலை டோல் கேட்களில் கட்டணம் செலுத்தாமல் விரைவாக செல்ல வழிகள் மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் மூலம் செய்யப்பட்டதாம், மாநில அரசும் தேவையான தண்ணீர் வசதிகள், மருத்துவ வசதிகள் செய்து கொடுத்ததாம். சமுதாய அமைப்புகளான த.மு.மு.க. எஸ்.டி.பி.ஐ., எம்.ஜே.கே போன்ற அமைப்புகளும் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி உதவிகள் செய்தார்களாம். அங்கு கூடிய அனைவரும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்து, 'லாயிலாஹ இல்லல்லாஹ் ஹாஸ்பி ரப்பி ஸல்லல்லாஹ், மாபி கல்பி ஹைருல்லாஹ், நூரு முகமது ஸல்லல்லாஹ்' என்ற கோசம் வானைப் பிளந்ததாம்.
இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் ஒருவர் இரவு பணி முடித்து மணப்பாறை திரும்பும்போது திண்டுக்கல் செல்லும் முஸ்லிம்கள் காரில் பயணம் செய்யும்போது தன்னுடைய அனுபவம் குறித்து கீழ்கண்டவாறு கூறிக்கொண்டு வந்தாராம். 'நான் எத்தனையோ முக்கிய பிரமுகர்கள், பொதுக் கூட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளேன், அங்கெல்லாம் ஒலிபெருக்கிகள் மூலம் காதுகள் செவிடாகும், கழிப்பிட வசதி இருக்காது, உணவுக்கு அலைய வேண்டும், கூட்டத்தினருடையே தள்ளுமுள்ளு, நெரிசல் ஏற்படும், ஒருங்கிணைப்பாளர்களிடையே சண்டை சச்சரவுகள் வரும் ஆனால் உங்கள் பாய் மார்கள் நடத்திய மாநாடு அவைகள் எதுவுமே இல்லை. அது மட்டுமல்லாமல் எங்களுக்கு ஒரு வேலையும் அங்குள்ள தொண்டர்கள் கொடுக்கவில்லை. என்னைப் போன்று பணியில் ஈடுபட்ட மற்ற காவலர்களுக்கும் வயிறார உணவு, தாகம் தீர்க்க தண்ணீர், களைப்பாற தேநீர் கொடுத்து விழுந்து விழுந்து உபசரித்தார்கள். அதனைப் பார்த்து பிரமித்துப் போய் விட்டேன் என்று வாயார புகழாரம். அதுவும் முக நூலில் வந்தது.
எந்த ஒரு நல்ல விழாவிற்கும் திருஷ்டி போன்று ஒரு பாதகமான செயல் நடக்குமாம். அதேபோன்று இஸ்திமா நடக்கும் நாட்களில், வட தமிழக முஸ்லிம்கள் செல்லும் வழியான உளுந்தூர்பேட்டையில் ஒரு முஸ்லிம் அமைப்பினர் அதே நாளன்று குரான் மாநாடு என்று ஒன்று நடத்தியதாம்.
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி
எழுத்தாளர்
சமூக ஆர்வலர்
அருமை
ReplyDelete