.

Pages

Saturday, May 2, 2020

கரோனா பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மீள அதிராம்பட்டினத்தில் அவரவர் வீட்டில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் தீவிர பிரார்த்தனை!

முகமது அஜீம், இஃப்ரா ஆகியோர்
தங்களது வீட்டில் தொழுகையில் ஈடுபட்டபோது
அதிராம்பட்டினம், மே.02
உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து உலக நாடுகள் மீள்வதற்கு, ஊரடங்கால் அதிராம்பட்டினத்தில் அவரவர் வீட்டில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்லாமியர்களின் புனிதமிகு ரமலான் மாதம் முழுவதும் அதிகாலை சுபுஹ் தொழுகை தொடங்கி, மாலை மஹ்ரிப் தொழுகை வரை நோன்பு நோற்பதும், இரவில் தராவீஹ், வித்துரு சிறப்புத் தொழுகைகள், இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு, திக்ரு, ஹிஸ்பு மற்றும் சிறப்பு பிரார்த்தனை ஆகியன அதிராம்பட்டினத்தில் உள்ள பெரிய ஜும்மா பள்ளிவாசல், மரைக்கா பள்ளிவாசல், தக்வா பள்ளிவாசல், செக்கடிப் பள்ளிவாசல், புதுமனைத் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல், தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல், ஏ.ஜே ஜும்மா பள்ளிவாசல், புதுப்பள்ளிவாசல், அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல், புதுத்தெரு மிஸ்கீன் சாகிப் பள்ளிவாசல், ஜாவியா மஜ்லீஸ் வளாகம்,  சி.எம்.பி லேன் இஜாபா பள்ளிவாசல், எஸ்.ஏ.எம் நகர் அல் மஸ்ஜிதுல் மப்ரூர், லதீஃப் பள்ளிவாசல், ஹனீப் பள்ளிவாசல், வாய்க்கால் தெரு மஸ்ஜிதே ரஹ்மானியா, சுரைக்கா கொல்லை கலிபா உமர் (ரலி) பள்ளிவாசல், மக்தூம் பள்ளிவாசல், வண்டிப்பேட்டை நூர் பள்ளிவாசல், நெசவுத்தெரு மஸ்ஜீது-ல்-ஹுதா, மேலத்தெரு அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாசல், பிலால் (ரலி) பள்ளிவாசல், ஆதம் நகர் அர்ரஹ்மான் மஸ்ஜித் உட்பட 39 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் நடைபெறும்.

இதேபோல், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை தவ்ஹீத் பள்ளிவாசல், சிஎம்பி லேன் மஸ்ஜித் தவ்பா பள்ளிவாசல், மேலத்தெரு சானாவயல் மஸ்ஜித் அல் ஹிதாயா ஆகிய பள்ளிவாசல்களில் ரமலான் மாதம் முழுவதும் தொழுகைகள் நடைபெறும்.

மேலும், ரமலான் மாதம் முழுவதும் அதிராம்பட்டினம் பள்ளிவாசல்களில் மாலையில் நோன்பு கஞ்சி காய்ச்சி நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கும், ஏழைகளுக்கும், பிற சமூகத்தினருக்கும் விநியோகிக்கப்படும். மாலையில், 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெறும். இதில், நோன்பாளிகள் பலர் கலந்துகொள்வர். 

இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, அரசின் சட்டங்களை மதிக்க வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், கரோனா வைரஸ் சமூகப் பரவலை தடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், இஸ்லாமியர்கள் 5-வேளை மற்றும் சிறப்புத் தொழுகையை அவரவர் வீட்டிலேயே நடத்துகிறார்கள். பள்ளிவாசல்களில் 'பாங்க்' எனும் தொழுகைக்கான அழைப்பு ஒலி மட்டும் ஒலிக்கப்படுகிறது.

மேலும், பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சாததால், 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும் பள்ளிவாசல்களில் நடத்துவதில்லை. நோன்பாளிகள் பலர் உணவகங்களில் விற்பனையாகும் பார்சல் கஞ்சியை வாங்கி பருகுகின்றனர்.

ஊரடங்கு உத்தரவால், அதிராம்பட்டினத்தில் பல்வேறு தரப்பினர் நடத்தும், அனைத்து சமயத்தவர் பங்கேற்கும்  'இஃப்தார்' எனும் மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புனிதமிகு ரமலான் மாதத்தில், உள்ளூரில் தங்கி இருக்கும் 200 க்கும் மேற்பட்ட வெளியூர் நோன்பாளிகளுக்கு, அதிகாலையில் நடைபெறும் 'சஹர்' எனும் விருந்து உபசரிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ஜக்காத். ஒவ்வொரு நபரும் தான் வைத்திருக்கக் கூடிய சொத்துக்கள், பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் ஆகியவற்றில் 100 க்கு 2.5 சதவிகிதம் அளவு ஜக்காத் தொகையாகக் கொடுக்க வேண்டும். அதுவும், ரமலான் மாதத்தில் அதிகம் தர்மம் செய்யப்படுவது வழக்கம். தற்போது அமலில் உள்ள ஊரடங்கால், வெளியூர்களிலிருந்து உதவி கேட்டு வரும் நபர்களின் வருகை பூஜ்ஜியமாக குறைந்துள்ளது.

இஸ்லாமியர்களின் புனிதமிகு ரமலான் மாதத்தில், அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் மின்னொளியில் களைகட்டி காணப்படும். வர்த்தக நிறுவனங்களில் குறிப்பாக ஜவுளிக்கடைகள், தொப்பிக்கடைகள், மீன், இறைச்சி, காய்கறி பழக்கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், உணவகங்கள், இனிப்பகங்கள் ஆகியவற்றில் வியாபாரங்கள் சூடு பிடிக்கும். சலூன் கடைகளில் சிறுவர் ~ பெரியவர் ~ இளைஞர்கள் கூட்டமும், வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமும் அலைமோதும். அதிராம்பட்டினத்தின் பிரதான சாலைகள் வாகனங்கள் நெருக்கடியால் பரபரப்பாகக் காணப்படும். தற்காலிகமாக ஆங்காங்கே கடைகள் அமைக்கும் வர்த்தகர்கள் ரமலான் நோன்பு காலத்தில் ஈட்டிய வருவாய்யை ஆண்டு முழுவதும் பயன்படுத்திக்கொள்வர். ஊரடங்கால், இவை அனைத்தும் முடங்கியுள்ளன.

ஊரடங்கால், அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறவில்லை என்றாலும், உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீளவும், இந்தியாவில் இதன் தாக்கம் அதிகமாக பரவக்கூடாதெனவும், பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு திரும்பவும், இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் 5-வேளை தொழுகை நடத்திய பின் இறைவனிடம் இருகரமேந்தி மனம் உருகி செய்யும் பிராா்த்தனை வலுவானதாக உள்ளது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.