தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க அரசு உத்தேசித்துள்ளது. இதில் பட்டுக்கோட்டை கிழக்கு பகுதியில் உள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியை தலைமையிடமாகக் கொண்டு தாலுகா பகுதியாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிர்வாக வசதிக்காக, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தை பட்டுக்கோட்டை மேற்கு, பட்டுக்கோட்டை கிழக்கு என இரண்டு வட்டங்களாகப் பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2 வட்டங்களுக்கும் பட்டுக்கோட்டையே தலைமை இடமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் அதிரை மைதீன் நம்மிடம் கூறியது:
அதிராம்பட்டினம் பகுதியில் தாலுகா அமைப்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஒரு காலத்தில் இப்பகுதி மிகப்பெரும் வாணிபப்பகுதியாகவும், சட்டமன்ற தொகுதியாகவும் இருந்துள்ளது. இப்பகுதியில் விவசாயிகள், மீனவர்கள் அதிகளவில் உள்ளனர். தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
அதிராம்பட்டினத்தை சுற்றி அதிக கிராமங்கள் உள்ளது. இப்பகுதியினர் நலனை கருத்தில் கொண்டு அதிராம்பட்டினதத்தை தலைமையிடமாகக்கொண்டு தாலுகா அலுவலகம் புதிதாக அமைக்க வேண்டும்.
ஊர் மற்றும் சமூக நலனில் அதிக அக்கறை உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும், தன்னார்வ தொண்டு அமைப்புகளும் அதிராம்பட்டினம் பகுதியில் தாலுகா அமைய தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்' என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் அதிரை புகாரி நம்மிடம் கூறியது:
மக்கள் தொகை குறைவாக இருந்த காலகட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிராம்பட்டினத்தில் கடந்த 1981 ஆம் ஆண்டு நடந்த நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நிகழ்ச்சியில் தாலுகா அலுவலகம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். தற்போது இப்பகுதியில் மக்கள் தொகை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதிராம்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு தாலுகா அலுவலகம் மற்றும் அதிராம்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்பட வேண்டும்' இதற்கு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கவனத்திற்கு இப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தம்பி வழக்கறிஞர் சிவி சேகர் அவர்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கே.எம்.ஏ ஜமால் முஹம்மது நம்மிடம் கூறியது:
கல்வி தொடர்பான சான்றிதல் மற்றும் பட்டா, பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வேண்டும் என்றால் சுமார் 15-20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது. இந்த பணிகளுக்காக ஒரு நாள் முழுவதையும் செலவிட வேண்டி உள்ளது. இப்பகுதி மக்களின் நியாமான கோரிக்கையை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான அதிராம்பட்டினத்தில் தாலுகா அலுவலகம் ஏற்படுத்த தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், கோட்சியார், வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்க சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும். என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சாகுல் ஹமீது நம்மிடம் கூறியது:
அதிராம்பட்டினம் சுற்றுப் புற பகுதிகளில் அதிக கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. மிகப்பெரும் பரப்பளவை கொண்டுள்ள பகுதி. இப்பகுதியில் தாலுகா அலுவலகம் அமைந்தால் அதிராம்பட்டினம் அருகில் உள்ள மகிழங்கோட்டை, தொக்காளிக்காடு, ராஜாமடம், புதுப்பட்டினம், மல்லிபட்டினம், ஆண்டிக்காடு, கொள்ளுக்காடு, மருதங்க வயல், கூடலிவயல், ஏரிபுறக்கரை, கீழத்தோட்டம், பழஞ்சூர், மளவேனிக்காடு, ராசியங்காடு, முடிச்சிக்காடு, மஞ்சவயல், நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை ஆகிய கிராமப்பகுதி பொதுமக்கள் மிகவும் பயன் பெறுவர். என்றார்.
சென்னை மாநிலமாக இருந்த பொழுது 1952 முதல் 1962 வரை அதிராம்பட்டினம் சட்மன்ற தொகுதியா இருந்துள்ளது எனவே தாலுக்கா தலைமையிடமாகும் சிறப்பும் தகுதியும் "அதிரைகே"
ReplyDeleteஅனைத்துக் கட்சியினரும் இணைந்து சட்டமன்ற உறுப்பினரை இது தொடர்பாக சந்திக்க வேண்டும்.
ReplyDeleteஅதிரை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஓங்கி குரல்எழுப்பவேண்டும்..
ReplyDelete