.

Pages

Sunday, April 12, 2015

ஒலி பெருக்கி அறிவிப்பு இல்லை: அதிரை பேரூராட்சி கைவிரிப்பு !

அதிரை பேரூராட்சியின் பொது நிதி மற்றும் தஞ்சையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் அவர்களின் 'தொகுதி மேம்பாடு நிதி' ஆகியவற்றிலிருந்து அதிரை பேருந்து நிலைய பகுதியில் வர்த்தக கட்டிடங்கள் மற்றும் மேற்கூரை கட்டி முடிக்கப்பட்டது. இதில் மொத்தம் 24 வர்த்தக கடைகள் ஏலத்திற்கு வர இருக்கிறது. இந்த கடைகளிலிருந்து வாடகையாக கிடைக்கிற வருமானத்தை அதிரை பேரூராட்சி பொதுநல பணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான கட்டுமான பணிகள் கடந்த சில வருடங்களாக மும்முரமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இதற்கான டெண்டர் விடும் பணியை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. முதற்கட்டமாக பேருந்து நிலைய மைய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள டேக்ஸி வாகனங்களை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் பேரில் அதிரைக்கு வருகை தந்த வருவாய் ஆய்வாளர் டேக்ஸி ஸ்டாண்ட் வாகன ஓட்டுனர்களிடம் நேரடி விசாரணையை மேற்கொண்டார். தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது. மேலும்  டேக்ஸி வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று இடம் கை காட்டப்படும் என தெரிகிறது. இந்த பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீர்ந்துவிட்டால் இதன்பிறகு கடைகள் ஏலம் விடும் பணிகள் துவங்கும் என தெரிகிறது.

முன்னதாக பேரூராட்சியின் சார்பில் கடைகள் கட்டும் பணி துவங்கியதிலிருந்து கடைகள் அனைத்தும் கட்டி முடிக்கும் வரை ஏராளமான வர்த்தகர்கள் குறிப்பாக பேக்கரி, உணவகம், டீ கடை, பழக்கடை, பலசரக்கு கடை, அடகு கடை ( வட்டிக்கடை ), மதுபானக்கடை, சர்பத் கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு தொழில் புரியும் உள்ளூர் மற்றும் வெளியூர் வாழ் வர்த்தகர்கள் கடைகள் கேட்டு பேரூராட்சி நிர்வாகத்தை அணுகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிரையின் சமூக ஆர்வலர் குலாப்ஜாமூன் அன்சாரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுநல தகவல் கேட்டு கடந்த [ 02-01-2015 ] அன்று மனு அனுப்பி இருந்தார். அதில் பேரூராட்சிக்கு சொந்தமாக பேரூந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகள் எப்போது ஏலம் விடப்படும் என்றும், மேற்படி கடைகள் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி ( ஆட்டோ மூலம் ) அறிவிப்பு செய்யப்படுமா என்று கேட்டு இருந்தார். அதற்கு பேரூராட்சி சார்பில் கடந்த [ 05-01-2015 ] அன்று அளிக்கப்பட்ட தகவலில் 'அரசிதழ், நாளிதழ் விளம்பரம் மாத்திரமே செய்யப்படும்' என்றும் 'ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்காது' என கூறப்பட்டுள்ளது.

ஒலிப்பெருக்கி அறிவிப்பு இல்லை என கூறிவிட்டதால், பெரும்பாலான பொதுமக்களுக்கு கடை ஏலம் விடும் நாள் மற்றும் நிபந்தனைகள் குறித்து விவரங்கள் அறிந்துகொள்வதில் சிரமம் ஏற்படும். ஆகையால் அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் விடும் நாள், இடம் மற்றும் நிபந்தனைகள் குறித்த விவரங்ககளை எளிமையான முறையில் பலரும் அறிந்துடும் வகையில் அனைத்து பகுதிகளிலும் பகிரங்கமாக அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும், கடைகளை ஏலத்தில் எடுக்க எவ்வித அரசியல் குறுக்கீடும் இல்லாதவாறு உரிய முறையில் வெளிப்படையான டெண்டர் விடவும், உள்ளூரை சேர்ந்த படித்த பட்டாதாரி இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், புதிதாக தொழில் தொடங்கும் நபர்களுக்கு கடைகளை வழங்கவும், ஏற்கனவே மற்றொரு இடத்தில் தொழில் நடத்தி வருபவர், மேல் வாடகைக்கு விடும் நபர்கள் ஆகியோரை டெண்டரின் போது புறக்கணிக்கவும், ஒரு நபருக்கு ஒரு கடை என்பதை தீர்மானிக்கவும், மக்கள் அதிகமாகக் கூடும் பகுதியாகிய இங்கு வட்டிக்கடை, மதுக்கடை ஆகியவற்றிற்கு கடைகள் வழங்க வேண்டாம் என பொதுமக்களும், ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 comment:

  1. ஒலிப்பெருக்கி அறிவிப்பு இல்லை என கூறிவிட்டதால் கடை ஏலம்விடுவதில் அரசியல் குறுக்கீடு கண்டிப்பாக இருக்கும். செல்வந்தர்கள், அரசியல் முக்கிய புள்ளிகள் பினாமி பெயரில் கடை எடுத்து அதை Sublease விட்டு அதிக வருமானத்தை பார்க்கப் போகிறார்கள். ஒரு கடைக்குள் இன்னொருவர் கடை நடத்த அனுமதித்தால் போக்குவரத்து, வணிகவலகத்தின் தோற்றம் முற்றிலும் மாறிவிடும், பொதுமக்கள் முன்னிலையில் ஏலம்விட்டால் ஒவ்வொரு கடையும் எவ்வளவு வாடகைக்கு போகுதுன்னு தெரியும்; மறைமுக ஏலத்தால் ஒவ்வொரு கடையும் 1500, 2500, 3000, 3500 இப்படை விடுவதால் அரசுக்கு தான் நஷ்டம் ஏற்படும். வாடகை நிர்ணயித்தது வெளிப்படையாக இருக்க வேண்டும், எந்த நோக்கத்திற்காக, வணிக வளாகம் கட்டப்பட்டதோ, அது நிறைவேறாமல் போகும் அச்சம் நிலவக் கூடாது. என்னத்தான் நடக்கப் போகுதுன்னு பார்ப்போமே!

    சமூக செய்தி மக்களுக்களுக்கு தெரியப் படுத்திய சமூக ஆர்வலர் குலாப்ஜாமூன் அன்சாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.