தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இருந்து ஈஸ்ட் கோஸ்ட் சாலை வழியாக 175 கிலோ மீட்டர் தொலைவில் இராமேஸ்வரம் செல்லும் பிராதன சாலையில் பாம்பனிலிருந்து 11 கிலோ மீட்டர் முன்பாக இடது பக்கமாக பிரியும் குறுக்கு சாலையை கடந்து சென்றால் அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அரியமான் கடற்கரை பகுதி அமைத்துள்ளது. பாக் நீரிணைப்பின் ஒரு பகுதியில் 150 மீட்டர் அகலமும், 2 கிலோ மீட்டர் நீளமும் உடைய இந்த கடற்கரைக்கு வார இறுதி நாட்களை கழித்திட பெருவாரியான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
அமைதியானச் சூழல், மென்மையாக தவழ்ந்துவரும் குளிர்காற்று, மைதாமாவு போன்று மணற்பரப்பை கொண்ட பரந்து விரிந்து கடற்பகுதி, தவழ்ந்து வரும் மிதமான அலை, கண்ணாடி போன்று பளபளக்கும் கடல்நீர் ஆகிய அனைத்தும் அமையப்பெற்றதுதான் அரியமான் கடற்கரை. இங்கு கூட்டம் கூட்டமாக வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் உற்சாகக் குளியல் போடுகின்றனர். இதில், தமிழகத்தின் இராமநாதபுரம், இராமேஸ்வரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் விடுமுறை தினங்களில் அடிக்கடி வந்து செல்கின்றனர். இவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல், அதிராம்பட்டினம் பிரமுகர்கள் இந்த கடற்கரைக்கு படையெடுத்து வருகின்றனர். ஒருமுறை அங்கு சென்று திரும்பியவர்கள் மீண்டும் மறுமுறை செல்லத் தவறியதில்லை.
தொலை தூரத்திலிருந்து இங்கு வருகை தரும் பெரும்பாலானோர் தாங்கள் எடுத்துவரும் உணவை குளித்து முடித்தவுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். அதேபோல், இந்த கடற்கரைக்கு வருகை தரும் சிலர் சமைப்பதற்கு தேவையான சாமான்களை எடுத்து வந்து சொந்தமாக சமைத்தும் சாப்பிடுகின்றனர். சமைப்பதற்கு ஏற்ற பரந்த இடம் இங்கு காணப்படுவதால் உணவு பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.
சமையலுக்கு தேவையான அனைத்து சாமான்களையும் மறக்காமல் எடுத்து செல்வது நமக்கு ஏற்படும் வீண் அலைச்சலோடு மன உளைச்சலையும் தவிர்க்க உதவும். இங்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக அங்கு கழிவறை - குளியலறையை பராமரிக்கும் நண்பர் தெரிவித்தார். மண்டபம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் இந்த கழிவறை - குளியலறை கட்டப்பட்டிருந்தாலும் சிறுநீர் கழிக்க ரூ. 5/- ம், குளிக்க ரூ.10/- ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கடலில் குளித்துவிட்டு அருகில் உள்ள மற்றுமொரு தனியார் நீச்சல் குளத்தில் ('குஷி பீச்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது) மீண்டும் ஒருமுறை குளித்து மகிழ்கின்றனர். இங்கு, சிறுவர்களுக்கு ரூ. 30/-ம், பெரியவர்களுக்கு ரூ.60 ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு, நீச்சல் குளம், செயற்கை அருவி நீருற்று, குழாய் நீருற்று ஆகியவை அமைந்துள்ளது.
இந்த கடற்கரைக்கு சுற்றுலா வருவோர், இங்கிருந்து அடுத்தடுத்து அமைந்துள்ள சீனியப்பா கடற்கரை, பாம்பன் பாலம், பாம்பன் படகு சவாரி, முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ அப்துல் கலாம் மணி மண்டபம், அவரது இல்லம், அங்கு அமைந்துள்ள அவரது நினைவுப் பொருட்கள், இராமேஸ்வரம், தனுஸ்கோடி, அரிய வகை நீர்வாழ் உயிரினங்களை உள்ளடக்கிய அழகிய தீவுகள் மற்றும் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்கா ஆகிய பகுதிகளை காணச்செல்ல தவறியதில்லை.
வீட்டிலிருந்து காலையில் புறப்பட்டு, இரவில் பாதுகாப்பாக வீடு திரும்ப நினைப்போர், குறைந்த செலவில் பகல்நேர பட்ஜெட் சுற்றலாவாக செல்ல விரும்பும் பயணிகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது அரியமான் கடற்கரை மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள சுற்றுலாப் பகுதிகள்.
- முகமது அஜீம் (மாணவச் செய்தியாளர்)
சுற்றுப்பயணம் சென்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteநல்லபடியாக சுற்றுப்பயணம் முடித்து வந்து விட்டீர்கள் இந்த செய்தியை கானும் என்னைப்போல் உள்ள நண்பர்களின் மனதில் ஆசையை புகுத்து விட்டீர்கள் ஆகவே அடுத்த முறை சுற்றுப்பயணம் போகும்போது இது போன்று உள்ள பகுதிகளுக்கு போகும்போது அதிகமான சுற்றுலா பிரியர்கள் ஆர்வமுடன் வருவார்கள். வாழ்த்துக்கள்