.

Pages

Friday, March 30, 2018

பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக்குவரத்து சேவை ஏப்ரலில் முறைப்படி தொடக்கம்!

பட்டுக்கோட்டை, மார்ச் 30   
சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே அமைக்கப்பட்ட  புதிய அகலப் பாதையில் இன்று முதல் ரயில் போக்குவரத்து தொடங்குகிறது.எனவே, கிடப்பில் போடப்பட்ட  அடிப்படை வசதி தொடர்புடைய பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி- திருத்துறைப்பூண்டி இடையிலான  ( தெற்கு ரயில்வேயின் கடைசி ) மீட்டர் கேஜ் ரயில்பாதை அகலப் பாதையாக மாற்றும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.
 
இப்பாதையில் பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி கடைசி ரயில் இயக்கப்பட்டது.  அதன் பின்னர் பட்டுக்கோட்டை திருவாரூர் பயணிகள் ரயில் 2013-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.

தொடங்கப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் பலவேறு பிரச்னைகளால் மிகவும் சுணக்கமாக நடைபெற்று வந்தன.இந்நிலையில்,  பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையிலான 72 கி.மீ. தொலைவுக்கு மட்டும் பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 28, மார்ச் 1, 2 தேதிகளில் இப்பகுதியில் பாதுகாப்பு ஆணையர் பாதுகாப்பு பரிசோதனைகளை மேற்கொண்டார்.

பின்னர் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி கிடைக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையிலான போக்குவரத்து தொடங்கும் என  ரயில்வே அறிவித்து தொடர்புடைய  கால அட்டவணையும் வெளியிட்டது.

இதையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர், அடுத்து ஏப்ரல் 6, 7 அல்லது 13, 14 தேதிகளில் முறைப்படி போக்குவரத்து தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

ஒரு நாள் போக்குவரத்தும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே மேற்கொள்ளப்படுவதாக ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த மார்க்கத்தில், மொத்தம் 36 ரயில்வே கேட்டுகளும், 14 பெரிய பாலங்கள் மற்றும் 262 சிறுபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ரயில்வே கேட்டுகளுக்கு பணியாளர்கள் (கேட் கீப்பர்கள்) இது வரை நியமிக்கப்படவில்லை. 

எனவே தாற்காலிகமாக மாற்றுப் பணியாளர்களைக் (மொபைல் கேட் கீப்பர்களை)  கொண்டு ரயில் கேட்டுகளை மூடி, திறந்து ரயில்கள் இயக்கப்படும் என கோட்ட இயக்க மேலாளர் பிரசன்னா உத்தரவிட்டுள்ளார்.இதற்கென இரு பணியாளர்கள் அந்த ரயிலில் பயணிக்கின்றனர்.

சென்னை, புதுச்சேரி ரயில்கள் இணைப்பு:
வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, பட்டுக்கோட்டையில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் காரைக்குடிக்கு மாலை 6 மணிக்கு சென்றடையும். இதன் மூலம் காரைக்குடியிலிருந்து (8.35-க்கு) வரும்  ராமேசுவரத்திலிருந்து வரும் விரைவு ரயில் மூலம்  சென்னை செல்ல முடியும். மேலும் வெள்ளிக்கிழமை மட்டும் இயங்கும் வாரந்திர  (கன்னியாகுமரி-  புதுச்சேரி) ரயிலையும் பிடிக்க முடியும்.

அதேபோல எதிர் மார்க்கத்தில்,காரைக்குடியில் காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் பட்டுக்கோட்டைக்கு 1 மணிக்கு சென்றடையும். இதில், காலை 9.35-க்கு விருதுநகரிலிருந்து காரைக்குடி வந்து சேரும் தென்மாவட்டப் பயணிகள் ரயலில் வருவோர் 10 மணிக்கு புறப்படும் பட்டுக்கோட்டை பயணிகள் ரயில் மூலம் அப்பகுதியை அடைய வாய்ப்பாக உள்ளது.

விருதுநகர் ரயிலை பிடிக்க முடியாது:
ஆனால் பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் ரயிலில் செல்லும் பயணிகள் அங்கிருந்து விருதுநகர் செல்லும் பயணிகள் ரயிலை பிடிக்க முடியாது. காரணம் அந்த ரயிலும் அதே நேரத்தில் (மாலை 6 மணி) புறப்படுவதால் பிடிக்க முடியாது.

எனவே இந்த நேர அட்டவணையில் ஏதாவது ஒன்றை மாற்றி அமைத்தால் தென்மாவட்ட பயணிகளும் பயன் பெற முடியும் என பயணிகள் தெரிவித்துள்னர்.

கழிவறை, ஓய்வறை பணிகள் கிடப்பில்:
பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையிலான சிறு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளான கழிவறை மற்றும் ஓய்வறை வசதிகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. இதனால் பயணிகள்  அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கழிவறைகளில் வடிகால் மற்றும் தண்ணீர் வசதிகள், நடைமேடைகளில் இருக்கை வசதிகள் குறைவாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே ரயில் போக்குவரத்து தொடங்கும் முன் கிடப்பில் போடப்பட்ட பணிகளை முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.