.

Pages

Sunday, January 27, 2019

திருச்சி இனாம்குளத்தூரில் பிரமாண்ட இஜ்திமா மாநாடு ~ லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

அதிரை நியூஸ்: ஜன.27
ஜன.26, 27, 28 ஆகிய 3 நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு இஜ்திமா மாநாடு திருச்சி அருகே, இனாம்குளத்தூரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

நேற்று (ஜன.26) சனிக்கிழமை காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு சிறப்பு துஆவுடன் இஜ்திமா மாநாடு தொடங்கியது. அதைத்தொடர்ந்து மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றன.

இந்த மாநாடு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) தொடர்ந்து நடக்கிறது. மாநாட்டில், இறைவன் கட்டளையை நிறைவேற்றி இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் (ஸல்) வாழ்க்கை முறையை பின்பற்றி அனைவரும் வாழ வேண்டும், மறுமை வாழ்வை நினைத்து அதற்கு தகுந்தாற்போல் எப்படி வாழ வேண்டும், சகோதரத்துவம், மனிதநேயம், மனிதாபிமானம், நல்லொழுக்கம், ஒற்றுமை, பிறருக்கு உதவும் மனப்பான்மை, அனாதைகளை ஆதரித்தல், ஏழை ~ எளியோருக்கு உதவுதல், மகளிருக்குரிய உரிமை மற்றும் சலுகைகளை இஸ்லாமியம் அருளியபடி முறையாக கொடுத்து அவர்களை கவுரவப்படுத்துவது, குழந்தை வளர்ப்பு முறை பற்றி போதித்தல், வணிகத்தில் நேர்மை, கொடுக்கல் ~ வாங்கலில் நேர்மை, மது இல்லா வாழ்வு, உயரிய பண்பாட்டோடு வாழ்வது, இழிவு பேசுவதை தவிர்த்து வாழ்வது குறித்து தினமும் சொற்பொழிவு நடைபெறுகிறது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள பிரபல மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றுகின்றனர். இதேபோல பஜ்ர், லுஹர், அஸர், மஹ்ரிப், இஷா ஆகிய 5 வேளை தொழுகையும் மாநாடு திடலில் நடைபெறுகிறது.

மாநாட்டில் திருமணம்:
வளர்ந்து வரும் நாகரிக உலகில் பிரமாண்டமான முறையில் திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு மாறாக நபிவழி சுன்னத் என்பதன் அடிப்படையில் எளிமையான முறையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மாநாட்டு திடலில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வட மற்றும் தென் மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் இனாம்குளத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதால் ரெயில் மூலமும் அதிக அளவில் முஸ்லிம்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

பிரமாண்ட பந்தல்:
திருச்சி ~ திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டிபுதூரில் இருந்து இனாம்குளத்தூர் வரை லட்சக்கணக்கானோர்  அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

வாகனங்கள் நிறுத்துவதற்கும் பல ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. குடிநீர் வசதி, குளியல் அறை, உணவு, கழிவறை, தூங்குவதற்கான இடம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மாநாட்டு திடல் மற்றும் மக்கள் வந்து செல்லும் பகுதி முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இவை பார்ப்பதற்கு இரவை பகலாக்கும் வகையில் உள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, டெல்லி, பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலங்கை, சவுதி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் வந்து குவிந்தனர்.

சிறப்பு துஆ:
மாநாடு நாளை (ஜன.28) திங்கட்கிழமை பகல் லுஹர் தொழுகையுடன் நிறைவுபெற உள்ளது. முன்னதாக, உலக அமைதி, ஆரோக்கியம், பாதுகாப்பு, மறுமை வாழ்வு சிறக்க ஆகியவற்றை வலியுறுத்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். இதில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டும், மேல்விஷாரத்தில் 1997 ஆம் ஆண்டும் பிரமாண்ட இஜ்திமா மாநாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்தக்கது.

போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் இஸ்லாமிய தன்னார்வல இளைஞர்கள்:
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இஸ்லாமிய தன்னர்வல இளைஞர்கள் வாகனங்களை ஒழுங்குபடுத்தியதோடு அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.

14 மண்டலங்கள்:
மாநாட்டில்,  தமிழகத்தின் தென் ஆற்காடு (01), கோவை (02), வெளி மாநிலங்கள் (03), இராமநாதபுரம் (04), சேலம் (05), மதுரை (06), புதுக்கோட்டை (07), திருநெல்வேலி (08), பாரா ஜமாத் (09), திருச்சி (10), தஞ்சாவூர்(11), வட ஆற்காடு (12 ), செங்கல்பட்டு (13), சென்னை (14) என 14 மண்டலங்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. இப்பகுதிகளில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்தோர் அமர்ந்து இருந்தனர்.

3 வேளை உணவு: 
ஒவ்வொரு மண்டலங்களுக்கும் தனித்தனியாக உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டு அதில், இரவு, காலை, பகல் ஆகிய 3 வேளைகளுக்கான உணவு பரிமாறப்பட்டது. இப்பணிகளில் தன்னார்வ களப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.

மருத்துவ முதலுதவி:
மாநாட்டில் மருத்துவ முதலுதவிக்காக மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

வழிகாட்டல்:
மாநாட்டு வருகையாளர்களுக்கு வழிகாட்ட பிரதான சாலைப் பகுதிகளில் 'வழிகாட்டி பதாகைகள்' ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தன.

ஸ்டால்கள்:
மாநாட்டில் இஸ்லாமிய மார்க்க நூல்கள், தொப்பி, அத்தர், பழங்கள், சிப்ஸ், குளிர் பானங்கள், தின்பண்டங்கள், பேக்கரி கேக் வகைகள், பட்டர் பிஸ்கட்ஸ், மலைத்தேன், பனங்கருப்பட்டி, மசாலா பவுடர், சூப், சுண்டல் ஆகியவை விற்பனைக்காக தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.