.

Pages

Wednesday, April 30, 2014

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க மஹல்லாவாசிகளுக்கு அழைப்பு !



அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் செயற்குழு கூட்டம் வருகின்ற வெள்ளி கிழமை ( 02-05-2014 ) மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஷார்ஜாவில் உள்ள சகோதரர் அல் அமீன் இல்லத்தில் நடைபெறும் என அறிவிப்பு செய்யபட்டுள்ளது. இதில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது

இப்படிக்கு,
கடற்கரைதெரு அமீரக அமைப்பு - துபாய்

காட்டுப்பள்ளி கந்தூரி - நேரடி ரிப்போர்ட் !

அதிரையில் அமைந்துள்ள காட்டுப்பள்ளி மற்றும் கடற்கரைதெரு தர்ஹாக்களில் வருடந்தோறும் கந்தூரி விழா எடுத்துவருவது வழக்கமாக இருந்துவருகிறது. இவற்றை அதிரையில் வாழுகின்ற ஒரு சாரார் ஆதரிப்பதும் மற்றொரு சாரார் கடுமையாக எதிர்த்து வருவதுமாக இருக்கும். கடந்த 500 வருடங்களுக்கும் மேலாக அதிரையில் கொண்டாடப்பட்டு வரும் இந்த விழாவை அதிரையில் வாழும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் தங்களின் எதிர்ப்பையோ அல்லது ஆதரவையோ கந்தூரி ஆதரவாளரிடமோ அல்லது எதிர்ப்பாளரிடமோ பகிரங்கமாக தெரியப்படுத்தியதில்லை.

கடந்த சில வருடங்களாக ஊரில் நடக்கும் கந்தூரி விழாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிரையில் இயங்கிவரும் தவ்ஹீத் அமைப்புகள் அவ்வப்போது துண்டு பிரசுரங்களும், தெருமுனை பிராசாரங்களும், பொதுக்கூட்டங்கள், கந்தூரி விழாவிற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டைகளும், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்குதல், கந்தூரி விழாவின்போது விநியோகிக்கும் மின்சாரத்தை தடை செய்யாமலிருக்க மின்சார வாரியத்தின் கவனத்துக்கு எடுத்துச்செல்தல் உள்ளிட்ட எதிர்ப்புகளை பகிரங்கமாக தெரிவிக்கவும் தவறியதில்லை.

இவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காட்டுப்பள்ளி தர்ஹாவின் கந்தூரி ஊர்வலம் இன்று மாலை 4.30 மணியளவில் காட்டுப்பள்ளி தர்ஹாவிலிருந்து புறப்பட்டு சென்றது. இதில் கடந்த முறை 15 க்கும் மேற்பட்ட உருப்படிகளுடன் நகரை வலம்வந்த ஊர்வலம் இம்முறை இரண்டே இரண்டு உருப்படியோடு சென்றது.

பட்டுக்கோட்டையில் நேற்று கோட்டாசியர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதானக்கூட்டத்தில் கந்தூரி கமிட்டியினரும், ADT அமைப்பினரும் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நடுத்தெரு, புதுமனைதெரு, சிஎம்பி லேன், ஆஸ்பத்திரி தெரு ஆகிய பகுதிகளுக்கு ஊர்வலம் செல்லாது என இருதரப்பினரும் ஏற்றுகொண்ட தீர்மானத்தின்படி இந்த பகுதிகளுக்கு இம்முறை செல்லவில்லை.

கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் நகரில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படாமல் இருந்தது. ஊர்வலத்தின் போது எவ்வித அசம்பாவிதமங்களும் நடைபெறாமல் தடுக்க பட்டுக்கோட்டை டிஎஸ்பி செல்லபாண்டியன் தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார்கள்.


அதிரையில் மே 11 முதல் வர்த்தக மற்றும் கலாச்சார பொருட்காட்சி !

வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் சார்பில் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய மக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக பயன்பாடுகளை மையமாக வைத்து நடப்பு கல்வி ஆண்டின் விடுமுறை தினங்களில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பொருட்காட்சி நடைபெற இருக்கிறது.

இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரை சாரா திருமண மஹாலில் கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத்தில் பொருட்காட்சியை ஏற்று நடத்த நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டது. இதில் பொருட்காட்சி தொடர்பான ஆரம்பகட்ட பணிகளை விரைவாக மேற்கொள்வது எனவும், பொருட்காட்சியை எதிர்வரும் 11-05-2014 முதல் 25-05-2014 வரை நடத்தி முடிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து கமிட்டியாளர்களால் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.





காட்டுப்பள்ளி கந்தூரிவிழா தொடர்பாக கோட்டாட்சியர் ஏற்பாடு செய்த சமாதானக்கூட்டத்தில் ADT பங்கேற்பு [ படங்கள் இணைப்பு ]

அதிரை காட்டுப்பள்ளி தர்ஹா கந்தூரிவிழா தொடர்பாக நேற்று மாலை பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ஏற்பாடு செய்த சமாதானக்கூட்டத்தில் ADT நிர்வாகிகளும், கந்தூரி விழா கமிட்டியினரும் கலந்துகொண்டார்கள்.

இதுதொடர்பாக ADT வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது :

அதிரையில் 30.4.2014இல் தொடங்கும் காட்டுப்பள்ளி தர்கா கந்தூரியைத் தடை செய்ய வேண்டி, மாவட்ட ஆட்சியருக்கு அதிரை தாருத் தவ்ஹீத் மனு ஒன்றை அனுப்பியது .


அதைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் 'சமாதானக் கூட்டம்' ஏற்பாடு செய்யப்பட்டு, கந்தூரிக் கமிட்டியினரும் கந்தூரியை எதிர்க்கும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினரும் அழைக்கப்பட்டிருந்தோம்.

கலந்து கொண்டவர்கள்:


அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக
1. எம்.பி. அஹ்மத் (அமீர்)
2. ஜமீல் எம் ஸாலிஹ் (செயலர்)
3. நிஜாமுத்தீன் (பொருளாளர்)
4. கமாலுத்தீன் (இஸ்லாமியப் பயிற்சி மையப் பொறுப்பாளர்)
5. அஹ்மது ஹாஜா
6. மாஜுதீன்

கந்தூரிக் கமிட்டி சார்பாக
1. எம்.எம்.எஸ் ஷேக் (அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்புத் தலைவர்)
2. சுல்தால் அப்துல் காதர் 
3. மஸ்தான் கனி
4. பத்ருஸ் ஸமான் ( மதார் சா)
5. அப்துல் வாஹித் (கித்தில்)

தொடக்கமாக, கோட்டாட்சியரின் முன்னுரையை அடுத்து எங்களிடம் கருத்துகள் கேட்டபோது, தாருத் தவ்ஹீத் தொடங்கப்பட்ட 1982லிருந்து 32 ஆண்டுகால தாருத் தவ்ஹீதின் பிரச்சாரங்களில் இதுவரைக்கும் எந்தவொரு சிறு அசம்பாவிதமும் நடந்ததில்லை என்பதையும் சட்டம்-ஒழுங்குக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இதுவரை நாங்கள் நடந்துகொண்டதில்லை என்பதையும் தகவலாகப்  பதிவு செய்துகொண்டு, "எங்களுடைய கருத்துகளைக் கேட்டுப் பதிவு செய்து அதை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என்று நகரக் காவல்துறை ஆய்வாளர் எங்களை அழைத்தார். கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு எதிரானது; அதற்குத் தடை வேண்டும் என்ற எங்களுடைய உறுதியான கருத்துகளை ஏற்கனவே மாவட்ட ஆட்சியருக்கு எழுத்து மூலமாக அனுப்பிவிட்டோம்" என்றும் சுட்டிக் காட்டினேன். "லா இலாஹ இல்லல்லாஹ்வின் பொருள் உங்களுக்கே தெரிந்திருக்கும். வழிபாடுகள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று அதற்குப் பொருள். கந்தூரியை வழிபாடு என்று நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். கந்தூரிக் கமிட்டியினரும் வழிபாடு என்றே குறிப்பிடுகின்றனர்.  இரண்டு பேருக்கு வழிபாடுகள் என்பது இஸ்லாத்தில் கிடையாது. உள்ளூரிலும் வெளியூரிலும் வசூல் செய்து, ஒருவருடைய இறந்த தினத்தை மேள தாளங்களோடு மகிழ்ச்சியோடு கொண்டாடுவது என்பது கந்தூரிக் கமிட்டியாரின் வழக்கமாக இருக்கிறது. இது எவ்வளவு மோசமான செயல்?

சட்டம்-ஒழுங்கைப் பற்றி மட்டும் உங்களுக்குப் பிரச்சினை. எங்களுடைய பிரச்சினை என்னவென்றால், கந்தூரி என்பது இஸ்லாத்தில் உள்ளதுதான் என்பதை நிறுவச் சொல்லுங்கள்; நாங்களும் சேர்ந்து செய்கிறோம். கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை நாங்கள் நிறுவுகிறோம்; நிறுத்திவிடச் சொல்லுங்கள்" என்று தீர்வு சொன்னேன்.

நாகூரிலும் அஜ்மீரிலும் முத்துப்பேட்டையிலும் போய் நிறுத்திவிட்டு வரும்படி அதிமேதாவித்தனமான பதிலை மதார் சா வைத்தார்.

"நாகூர் கந்தூரியைப் பற்றி நாகப்பட்டின ஆர்டிஒ ஆஃபிசிலும் முத்துப்பேட்ட கந்தூரியைப் பற்றி திருவாரூர் ஆர்டிஓ ஆஃபீஸிலும் பேச்சுவார்த்தை நடக்கும். பட்டுக்கோட்டை ஆர்டிஓ ஆஃபீஸில் நாம் உட்கார்ந்திருப்பது அதிராம்பட்டினத்துக் கந்தூரியைப் பற்றிப் பேசுவதற்காக" என்று விளக்கினேன்.

கந்தூரியை நிறுத்துவதற்குத் தமக்கு அதிகாரம் இல்லை என்று கோட்டாட்சியர் கூறிவிட்டு, கந்தூரியை அமைதியாக நடத்துவதற்கு உங்களுடைய கண்டிஷன் என்ன? என்று கேட்டார். அதற்கு, "கந்தூரியே கூடாது என்பதுதான் அவர்களுடைய கண்டிஷன்" என்று காவல்துறை ஆய்வாளர் பதிலளித்தார். நாங்கள் ஆமோதித்தோம்.

எம்.எம்.எஸ் ஷேக் அவர்கள், கந்தூரிகள் ஆல் ஓவர் இந்தியாவில் நடப்பதாகக் குறுக்கிட்டார்.

அதுவரை பொறுமையாக இருந்த அமீர் அவர்கள் தம்மை ஆங்கிலத்தில் கோட்டாட்சியரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, "இந்தியா முழுக்கவும் நடந்தாலும் கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு முரணானது" என்பதை ஆங்கிலத்தில் எடுத்துக் கூறினார். கந்தூரி எதிர்ப்பாளர்களின் வீட்டுக்கு எதிரே வேண்டுமென்றே பாட்டும் கூத்தும் நெடிய நேரம் நடத்துவது வழக்கமாயிருக்கிறது என்ற அமீரின் குற்றச்சாட்டுக்கு, "பெண்கள் கூட்டம் நின்றால், கூத்து நடக்கத்தான் செய்யும்" என்று மஸ்தான் கனி கூறியதும் ஹாஜாவுக்குப் பற்றிக் கொண்டது. மறைந்த சகோ. அபுல்ஹஸன் அவர்களின் வீட்டுக்கு எதிரே நடந்த நீண்ட நேரக் கூத்தும் அதற்கு எதிர்வினையாக மிளகாய்த் தண்ணீர் அபிஷேகமும் நடத்தப்பட்டதை எடுத்துச் சொல்லி, யார் வீட்டுப் பெண்கள்? முஸ்லிம் வீட்டுப் பெண்கள் வீட்டுக்கு எதிரே கூத்துப் போடுவதுதான் வழிபாடா? அப்படி நடந்தால் கலவரம் ஏற்படாதா? எனப் பொங்கிவிட்டார். கோட்டாட்சியர் அமைதிப்படுத்த முயன்றபோது, தான் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இதே மேலத்தெரு கந்தூரி ஊர்வலத்தில் கொலைவெறியுடன் தாக்கப்பட்டதையும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியால் பாதிக்கப்பட்டு இன்றுவரை ச்சார்ஜ் ஷீட் போடப்படாமல் காவல்துறை இழுத்தடிப்பதையும் தான் ஹஜ்ஜுக்குப் போவது தாமதப்படுவதையும் எடுத்துரைத்தார்.

மேலத்தெருவில் கந்தூரிக்கு எதிர்ப்பு பலமாக இருப்பதாக நிஜாமுத்தீன் கூறியபோது எம்.எம்.எஸ் ஷேக், மேலத்தெரு கமிட்டிதானே கந்தூரி நடத்துகிறது? மேலத்தெருவில் எதிர்ப்பு எப்படி வரும்? எனக் கேட்டார். அதற்கு, "நாளைக்கு மேலத்தெரு ஜமா அத் கூட்டத்தைக் கூட்டுவோம். அப்போது தெரியும் எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதென்று" என்று நிஜாமுத்தீன் புள்ளி வைத்தார். கந்தூரி முடிந்து கூட்டுவோம் என்று எம்.எம்.எஸ் ஷேக் பதிலளித்தார். நிஜாமுத்தீன் விடாமல், "நாளைய கந்தூரிக்கு எதிர்ப்பு எவ்வளவு எனத் தெரிந்துகொள்வதற்குக் கந்தூரி முடிந்தபின் கூடி என்ன பிரயோஜனம்?" என்று எதிர் கேள்வி கேட்டபோது பதில் சொல்லாமல் சம்பந்தமில்லாத பேச்சுகள் குறுக்கிட்டன.

அல் பாக்கிதத்துஸ்ஸாலிஹாத் பள்ளி அருகில் பதட்டம் இருப்பதை நிஜாமுத்தீன் பதிவு செய்தபோது, மதார் சா "அவர்களில்தான் யாராவது சிலர் பிரச்சனை உண்டாக்குவார்கள்" எனப் பழியை எங்கள் மீது சுமத்தப் பார்த்தார். அதற்கு, "L&O பிரச்சனை வரக்கூடாது என்பதால்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளோம். L&O problem உண்டு பண்ணிதான் தீர்வு என நாங்கள் நம்பினால் அதையும் நாங்கள் செய்வோம்.  இரண்டாம் தர வேலை செய்ய மாட்டோம். நீங்கள் அதை விரும்பினால் அமைதிப் பேச்சு வார்த்தை மெத்தேடை மாற்றிக்கொள்வோம். எப்படி வசதி?" என நிஜாமுத்தீன் எதிர்க் கேள்வி வைத்தார்.

"மழையில்லாமல் செடிகளெல்லாம் கருகிக் கிடக்கின்றன. எங்கள் வீட்டுக்கு அருகில் வைத்துதான் வெடி விடுகிறார்கள். தீ விபத்து நடப்பதற்கு முன்னெப்போதையும்விட இந்த வறட்சி காலத்தில் வாய்ப்புகள் அதிகம்" என்பதை மாஜுதீன் பதிவு செய்தார்.

இறுதியாக சமாதானக் கூட்ட நடவடிக்கைகள் ப்ரிண்ட் செய்து வந்தது.

அதிலிருந்த 'மேலத்தெரு ஜமாஅத்தினரும்' என்பதை நிஜாமுத்தீன் எதிர்த்ததில் அது முழுதும் நீக்கப்பட்டது. காட்டுப்பள்ளிவாசல் என்பது காட்டுப்பள்ளி தர்கா என்று திருத்தப்பட்டது. கடைத்தெரு சாலையின் வடக்குப் பக்கம் முழுமையாகக் கந்தூரி ஊர்வலம் போகாது என்று கந்தூரிக் கமிட்டியினரால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட உறுதியை எழுத்தில் (ஆறாவது ப்பாயிண்ட்டாக) இணைக்க வலியுறுத்தினோம் (இணைப்பு).


செயலாளர் - அதிரை தாருத் தவ்ஹீத்

Tuesday, April 29, 2014

செய்னாங்குளத்தின் புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்துதர வேண்டி கீழத்தெரு ஜமாத்தினர் பேரூராட்சியிடம் கோரிக்கை !

அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் கீழத்தெரு மஹல்லாக்கு உட்பட்ட புதுக்குடி பகுதியில் அமைந்துள்ள செய்னாங் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த சில மாதங்களாக இதற்குரிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தொடர்ந்து நடைபெற வேண்டிய முக்கிய பணிகளில் சிலவற்றை கிடப்பில் போடப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து கீழத்தெரு ஜமாத்தினர் இன்று காலை அதிரை பேரூராட்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று பேரூராட்சியின் செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணைதலைவர் ஆகியோருக்கு தனித்தனியே கோரிக்கை மனுக்கள் எழுதி, அதில் குளத்தின் நிறைவுபெற வேண்டிய பணிகளை விரைந்து முடித்துதர துரித நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனர்.

இதுகுறித்து மான் சேக் நம்மிடம் கூறியதாவது...
'நாங்கள் கொடுத்துள்ள மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதமானால் ஜமாத்தின் சார்பில் தஞ்சை சென்று மாவட்ட ஆட்சியரிடமும், பேரூராட்சியின் இணை இயக்குனரிடமும் புகார் அளிப்பதை தவிர வேறுவழியில்லை' என்றார்.

Monday, April 28, 2014

மரண அறிவிப்பு !

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அலியார் அவர்களின் மகளும், மர்ஹூம் செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் மனைவியும், சாகுல்
ஹமீது அவர்களின் மாமியாவுமாகிய ஹாஜிமா பாத்திமா அவர்கள் இன்று மாலை 6 மணியளவில் சிஎம்பி லேன் பகுதியில் உள்ள ஏ எல் மெட்ரிக் பள்ளி எதிரே அமைந்துள்ள வீட்டில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அதிரைக்கு மழை வேண்டி தக்வா பள்ளி மீன்மார்கெட் வியாபாரிகள் நடத்திய சிறப்பு பிரார்த்தனை ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை தக்வா பள்ளி மீன் மார்க்கெட் வர்த்தகர்கள் சார்பில் வறண்டு காணப்படும் அதிரைக்கு மழை வேண்டி இன்று மாலை மீன் மார்கெட் வளாகத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் தக்வா பள்ளி இமாம் தமீம் அன்சாரியின் தலைமையில் பங்கேற்ற அவரது குழுவினரால் மழை பைத் ஒதப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மார்க்கெட் பகுதி வர்த்தகர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மீன்வியாபாரிகள், காய்கறி வியாபார்கள், இறைச்சி வியாபாரிகள் உள்ளிட்ட அப்பகுதியில் வர்த்தகம் செய்யும் வியாபாரிகள் ஏற்று நடத்தினார்கள்.









அதிரையில் நடந்த கால்பந்து தொடர் போட்டியில் WFC அணி கோப்பையை கைப்பற்றியது ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப் [ WFC ] சார்பாக 7 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நமதூர் மேலத்தெரு மருதநாயகம் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த இரு நாட்களாக பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தந்த தலைசிறந்த அணிகள் விளையாடினார்கள். இதில் இறுதி ஆட்டமாக அதிரை WFC அணியினரும் பட்டுக்கோட்டை AVK அணியினரும் மோதினார். இரு அணிகளும் ஒருவொருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பெரும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் எந்தவொரு அணியும் கோல் போடாததால் ட்ரை பிரேக்கர் முறையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதிலும் இரு அணியினரும் சமநிலையை பெற்றதால். நீண்ட பரிசிலினைக்கு பிறகு டாஸ் மூலம் வெற்றி வாய்ப்வை நிர்ணயம் செய்வது என போட்டி நடத்துனர்களும், ஆட்டத்தை வழிநடத்தியவரும் முடிவு செய்தனர். அதன்படி டாஸ் வென்ற WFC அணியினர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

கடந்த இரு நாட்களாக விறுவிறுப்புடன்  நடைபெற்று வந்த ஆட்டத்தில் யில் அதிரை WFC அணியினர் முதல் பரிசையும், பட்டுக்கோட்டை AVK அணியினர் இரண்டாம் பரிசையும், மூன்றாம் பரிசை அதிரை AFFC அணியினரும் தட்டிச்சென்றனர்.

இதையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பல்வேறு ஆர்வலர்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த தொடர் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்திய WFC அணியை சேர்ந்த அஸார், அன்சர்கான், AFFA அணியை சேர்ந்த முபீஸ் மற்றும் பட்டுக்கோட்டை AVK அணியை சேர்ந்த ஒருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

நேற்றைய இறுதி ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வருகைதந்து ரசித்தனர்.

செய்தி மற்றும் புகைப்படங்கள் : அப்துல் வஹாப்














மரண அறிவிப்பு !

வெற்றிலைகாரத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் O.M. யாக்கூப் லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் ரஹிம் லெப்பை அவர்களின் மனைவியும், மர்ஹூம் OM முஹம்மது ஹுசைன் லெப்பை, மர்ஹூம் OM. உமர் லெப்பை, மர்ஹூம் OM. ஜெய்னுல்ஆபிதீன் லெப்பை, OM சித்திக் லெப்பை ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் முஹம்மது புஹாரி, அன்வர்தீன், நூர் முஹம்மது ஆகியோரின் தயாருமாகிய ஜொஹ்ரா அம்மாள் அவர்கள் நேற்று இரவு 12 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.