.

Pages

Sunday, January 19, 2014

கருத்தாடல்கள் ஓர் அலசல் !

ஒரு காலத்தில்  தினத்தந்தி, தினகரன், தினமணி, THE HINDU, மாலைமலர், மாலைமுரசு போன்ற பத்திரிக்கைகளின் வாயிலாக அரசியல், நாட்டு நடப்பு, உலக செய்திகளை தெரிந்து கொண்டோம் இரவு 10 மணிக்கு நடந்த சம்பவம் காலை செய்தித்தாள்களில் இடம் பெறாது. பகல் 11 மணி சம்பவங்கள் மாலைச்செய்திதாள்களில்  வராது. காரணம் தொலை தொடர்பு வசதிகள் சரிவர இல்லாததுதான்,  போட்டோ கிராஃபர் புகைப்படம் எடுத்து டெவலப் செய்து ஆள் மூலம் பத்திரிகை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து பிரசுரமாக நாள் பிடிக்கும் [ இன்று போட்டோ கிராஃபர் என்று தனி உத்யோகமெல்லாம் கிடையாது ] நிருபரே பார்த்துக்கொள்வார்.

பத்திரிகை வாயிலாக செய்தி அறிந்த காலத்தில் சலூன் கடை, டீ கடை போன்ற இடங்களில் ஓசி பேப்பர் படிக்க ஒரு கூட்டம் இருக்கும் அந்த இடங்களில்தான் உலக பொருளாதாரம், அரசியல் ஆலோசனை இலவசமாக உபதேசிக்கப்படும், வீண் வாதங்களும் சண்டைகளும் அடிக்கடி நடைபெரும் பல கடைகளில்  இங்கு அரசியல் பேசாதீர் என்று பலகைகளில் எழுதி தொங்கவிடப்பட்டு இருக்கும்.

அரசியலை கரைச்சி குடிச்சவர்கள் என்று தெருவிற்கு 2 பேர் இருப்பார்கள் அவரை சுற்றி ஒரு கூட்டம் பத்திரிகை செய்தியின் விளக்க உரைகளை கேட்டுக்கொண்டு இருப்பார்கள் !  பத்திரிகையில் வந்த செய்திக்கு விமர்சனம், எதிர்ப்பு கருத்து, ஆதரவு செய்திகளை நாம் பதிய விரும்பினால் தனியாக சிரத்தை மேற்கொள்ள வேண்டும் [ கடிதம் எழுதி தபால் அலுவலகம் சென்று கவர் அல்லது கார்டு வாங்கி போஸ்ட்  செய்ய வேண்டும் ] பிரசுரம் ஆக ஒரு வாரம் ஆகலாம் எடிட்டரால் தள்ளுபடி செய்யப்படலாம் தினம் பேப்பரில் நம் கமெண்ட்ஸ் வந்துள்ளதா என்று தேட வேண்டும் வேலை வெட்டி இல்லாதவர்கள் செய்யும் வேலை என்று அன்றைய காலத்தில் பிறரால் தூற்றப்பட்டார்கள்.

இந்த நவீன உலகத்தில் 1/2 மணி நேரத்திற்கு முன்பு அமெரிக்காவில் நடந்த நிகழ்வு அதிரையில் TV மூலமாக காணொளியில் காண்கிறோம் அடுத்த நொடியில் நம் முகநூலில் பிறருக்கு தெரியப்படுத்துகிறோம் [ அன்று 100 வருடம் வாழ்ந்தவர் இன்று 30  வருடம் வாந்தவருக்கு சமமாவார்கள் அவ்வளவு வேகம் ] அன்று  இரண்டு நண்பர்கள் தனியறையில் விவாதித்து வந்ததை இன்று தனித்தனி அறையில் அமர்ந்துகொண்டு இருவரும் விவாதிக்கிறார்கள் !
 
அறிவியலின் முன்னேற்றம் ஊருக்கு 10 வலைதளங்கள் முளைத்து விட்டன அந்த ஊர்களின் செய்தி ஆங்காங்கே பதியப்படுகின்றன செய்தி சொல்லும் விஷயம் 4 வரிஎன்றால் கருத்து கந்தசாமிகளின் கருத்து 40 வரியாகி போகிறது நல்ல செய்தி சொல்பவர்கள் குறைவாய் இருக்கின்றனர் மற்றவர்களை திட்டித்தீர்ப்பவர்கள் அதிகம்பேர் இருப்பதுதான் கவலையளிக்கிறது நான்கு சுவருக்குள்ளே நண்பர்களாய் பேசப்படுவது வலைதளத்தின் கருத்துப்பகுதியிலும் வரைமுறை இல்லாது பேசப்படுகிறது.
 
ஒரு வலைதளத்தில் வந்த செய்தி உண்மையா !? பொய்யா !? என்பது ஆராயப்படுவது இல்லை அப்படியே உண்மை என்று நம்பி ஆதரவு தருகிறேன் பேர்வழிகள்  என்று கிளம்பி  விடுகிறார்கள் அதுபோல் எதிர்க்க வேண்டும் என்று நினைத்தால் வார்த்தை பிரயோகம் கடினமாக இருப்பது கவலைக்குரியது. வலைதளங்களை ஆக்கப்பூர்வமான விஷயத்திற்கு பயன் படுத்தவேண்டும் COMMENTS என்பது  ஆக்கப்பூர்வமான விஷயங்களை சொல்ல வேண்டும்   ஆனால் அரைவேக்காட்டு தனமாக, விஷயங்களை தெளிவாக உணராமல் கருத்திடுகிறார்கள்.
     
மேலும் ஒரு காலத்தில் படிக்கும்போது, அல்லது வேலைக்காக காத்திருக்கும்போது நண்பர்கள் ஒன்று கூடி மரத்தடியிலோ, குளத்து மேட்டிலோ, மன்றம் என்ற பெயரால் ஓலை குடிசையிலோ, குட்டி சுவரிலோ, கண்டதையும் முழு அறிவு பெறாமலேயே அரட்டை கச்சேரிகளை நேரம் போவது தெரியாமல் நேரத்தை வீண் விரயம் செய்து கொண்டிருப்போம் அதே ஞாபகம் இன்று நல்ல வேலை கிடைத்து பொறுப்புகள் பல நம் தலைமீது இருந்தும் அரட்டைக்கென்றே தனியாக இணையதளம் அமைத்து கண்டதையும் கருத்திட்டு மற்றவர் மனம் புண்படியாக நடந்து கொள்வதும் தவறான நடத்தையில் பாவத்தை சம்பாதித்து கொண்டு இருக்கிறோம் என்பதனை மறவாதீர்கள் நண்பர்களே !
 
ஒரு இஸ்லாமியனின் குறைகளை இன்னொரு முஸ்லீம் மக்கள் மத்தியில் பிரபல படுத்துவது பாவகாரமான காரியம் என்று நாயகம் [ஸல்] அவர்கள் கூறி இருக்கின்றார்கள் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்
 
தவறுகள் செய்யாத மனிதர்கள் இல்லை தம் தவறுகளை யாராகிலும் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளதவன் மனிதனே அல்ல !

மு.செ.மு. சபீர் அஹமது

14 comments:

  1. ஆக ! என்ன..... அழகான முறையில் அழகான விழிப்புணர்வுகள். நல்தொரு ஆக்கம்.

    முடிவுரை மிகச் சிறப்பு.
    >>>>>>தவறுகள் செய்யாத மனிதர்கள் இல்லை தம் தவறுகளை யாராகிலும் சுட்டிக்காட்டினாள் திருத்திக்கொள்ளதவன் மனிதனே அல்ல <<<<<!

    ReplyDelete
  2. சரியான நேரத்தில் வந்த தலையங்கம் !

    வாசித்துவிட்டு திருந்தட்டும்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    அருமையான படைப்பு.
    திருந்துமா? திருத்தப்படுமா? தானே திருந்துவானா?


    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. மிகச்சிறந்த கட்டுரை, ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் அறிய வேண்டிய பதிவு

    ReplyDelete
  5. முதல் கமெண்ட் எழுதியுள்ள சகோதரா! நபி தாஸ் (நபியின் அடிமை) என்ற பெயர் இஸ்லாத்தில் கூடாதே, எல்லோரும் அல்லாஹ்வின் அடிமைகள் அன்றி வேறில்லையே, மாற்றிக் கொள்ளலாமே.

    >>>>>>தவறுகள் செய்யாத மனிதர்கள் இல்லை தம் தவறுகளை யாராகிலும் சுட்டிக்காட்டினாள் திருத்திக்கொள்ளதவன் மனிதனே அல்ல <<<<<!

    ReplyDelete
    Replies
    1. //முதல் கமெண்ட் எழுதியுள்ள சகோதரா! நபி தாஸ் (நபியின் அடிமை) என்ற பெயர் இஸ்லாத்தில் கூடாதே, எல்லோரும் அல்லாஹ்வின் அடிமைகள் அன்றி வேறில்லையே, மாற்றிக் கொள்ளலாமே. //

      அதிரை அமீன் என்ற நபர் மிகவும் உன்னிப்பாக கவனித்து ஆராய்ச்சிகள் செய்து ஒரு புது விளக்கம் "தாஸ்" என்ற பாரசீகச் சொல்லுக்கு அடிமை என்று கண்டுபிடித்துள்ளார்.

      இதுவரை "தாஸ்" என்ற தாசன் என்ற இச்சொல்லுக்கு நேசன் என்றதான் உலகம் அறித்துள்ளது. நபிதாஸ் என்றால் நபி நேசன் என்றுதான் பொருள்கொள்ள வேண்டும்.

      அடுத்தது:

      மேலும் குலாம் ரசூல் என்றால் இவர் என்ன அர்த்தம் கூறுவார் ?

      அதிகம் தெரிந்தவர் போல் தெரிகிறது இதற்கும் ஏதாவது புது அர்த்தம் தருவாரோ என்னவோ தெரியவில்லை !
      சரி விபரத்திற்கு வருவோம். இமாம் ஹசன் (ரலி) அண்ணவர்கள் ஒரு சமயம் உமர் கத்தாப் (ரலி) அவர்களின் பிள்ளையிடம் "நீங்கள் எல்லாம் எங்கள் பாட்டனாரின் அடிமைகள்தானே", என்று கூறியதை, கலிஃபா அவர்களின் பிள்ளைகள் அவர்களிடம் முறையிட, அதற்கு இமாம் ஹசன் (ரலி) அண்ணவர்களிடம் "அவ்வாறாகவா தாங்கள் கூறினீர்கள்" என்று வினவ, அண்ணவர்களும் அதனை ஆமோதிக்க கலிஃபா அவர்கள் ஆனந்தம் அடைந்து நாயகத்தின் அடக்க ஸ்தலத்தில் வந்து சொல்லச் சொன்னார்கள். அவ்வாறு அங்குச் சொல்ல ஆனந்தம் அடைந்தார்கள், என்ற உண்மை சரித்திரம் அறிய வேண்டுகிறேன். அதனால் அவ்வாறு பெயரிடுவதும் தவறில்லை.

      Delete
    2. சகோதரா, தலைப்பிற்கு ஓப்ப கண்ணியமான முறையில் என்னுடைய வேண்டுகோளை பதிந்தேன்.

      எனக்கு பாரசீக மொழி தெரியாது, எனக்கு அது தற்போது தேவையுமில்லை.

      நான் தமிழறிந்த முஸ்லீம் ஆதலால் தமிழில் தாஸ் / தாசன் என்றால் அடிமை என்றே பொருள் அறிந்துள்ளேன்.

      நான் ஆராய்ச்சியாளன் அல்ல மேலும் நீங்கள் கேட்கும் பெயருக்கெல்லாம் பொருள் கூறிக் கொண்டிருப்பதும் என் வேலையல்ல.

      முத்தாய்ப்பாக, நீங்கள் எழுதியுள்ள கதையை நம்ப வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்கு மார்க்க அடிப்படையில் தவறாக பட்டதை சுட்டிக் காட்டினேன் திருத்துவதும் திருந்துவதும் உங்கள் இஷ்டம்.

      இனி உங்களுடைய மறுமொழிக்கெல்லாம் பதில் எழுதி என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, இதுவே இறுதியானது.

      Delete
    3. எனது பதில் கண்ணியமான முறையில் தான் உள்ளது. உங்களுக்குத் தெரியவில்லை என்றால் சும்மா இருப்பதுதான் கண்ணியம். என்பேரில் குறைகாண முயல்வது எப்படி என்னால் ஏற்றுக்கொள்ளமுடியும். இதில் மார்க்கம் என்றெல்லாம் எழுதுகிறீர்கள். மார்க்கம் அறியாதவன் நான் அல்ல. நீங்கள் அறிந்த மார்க்கம் தவறென்றால் தாங்கள் ஒதுங்குவதே மேல். எங்கள் உண்மைகளை கதை என்றெல்லாம் எழுதுவது என்ன தர்மம் ? என்ன கண்ணியம் ? எங்கள் மனதை புண்படுத்துவது எப்படி சரியாகும். ஆக கட்டுரையை நன்கு படித்து விளங்கிக்கொள்வது நல்லது. அடுத்தவர் மனம் நோகாமல் எழுத வேண்டும். தாஸ் என்பது தமிழ் சொல் அல்ல. தங்களது எழுத்துக்கள் என்னை பதில் எழுத தூண்டியது.

      Delete
  6. கருத்தாடல் பற்றிய சிறப்பான அலசல்.

    சமீபத்தில் ஒரு கட்சியின் செய்தியில் அதிகாரப்பூர்வம் பற்றிய ஐயத்தில் அந்த கட்சியைப் பற்றி வினா தொடுத்த போது, அந்த கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ளவரையே தனிப்பட்ட அவர் மீது நான் அவதூறாக எழுதியதாக போட்டுக்கொடுத்தவர்களை நினைக்க வேதனையாக உள்ளது.

    ReplyDelete
  7. தவறுகளை சுட்டிகாட்டுவதும் அதனை திருத்துவதும் அரசியல் நாகரிகம்,ஆனால் தவறை சுட்டிகாட்டியவருக்கு அடி உதை எல்லாம் இது இன்றைய நாகரிகம் " நம்மளுக்கு எதுக்கு வம்பு "

    ReplyDelete
  8. வாசித்துவிட்டு திருந்தட்டும்.

    Reply

    ReplyDelete
  9. வாசித்துவிட்டு திருந்தட்டும்.

    Reply

    ReplyDelete
  10. கால சூழலுக்கு ஏற்ற பதிவு. அருமை.

    பதிவில் கொண்டுவந்து இத்தகையோருக்கு படிப்பினை பாடம் நடத்திய சகோதரர் சபீர் அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ஒருகாலத்தில் நிகழ்வுச் செய்திகளை அறிவது அரிதிலும் அரிதாக இருந்தது. இன்றைய நிலை அப்படியல்ல. விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி, கல்வியறிவில் முன்னேற்றம், மக்களின் விழிப்புணர்வு இப்படி அனைத்திலும் அசுர வளர்ச்சியடைந்தது மட்டுமல்லாது பொறுப்புணர்வுடன் சமுதாயச் சிந்தனையில் செயல்படுவோர் இப்படி பல விதத்திலும் முன்னேற்றமடைந்தும் காழ்ப்புணர்வு, முன்னேற்றத்தில் பொறாமை,தாழ்வு மனப்பான்மை இப்படி சில விஷயங்களில் பின்தங்கி இருப்பது வேதனையாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  11. ஊடகங்களை பயன்படுத்தும் போது ஊடக தர்மத்தை பேன வேண்டும் என்று நம் முன்னோர்கள் கற்று தந்தது, தேச பிதா காந்தி கொல்ல பட்ட செய்தியை விபரமாக ரேடியோவில் அறிவிக்க செய்த மவுண்பேட்டன் பிரபு மற்றும் நம் இந்திய தலைவர்களின் தேச ஒற்றுமை விழிப்புணர்வு மாறி இப்போது அதே வளர்சி அடைந்த ஊடகத்தை கொண்டு மக்களை தூண்டி இன படுகொலை செய்ய பயன் படுத்தும் இன்றைய அரசியல் தீவிர வாதிகளை அடையாளம் கண்டும் இன்னும் ஒற்றுமை இன்றி இருப்பது வேதனையானது. .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.