.

Pages

Wednesday, June 10, 2020

தஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்து பணியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பணியாளர்களை பயன்படுத்த நடவடிக்கை!

அதிரை நியூஸ்: ஜூன் 10
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திடும் வகையில் மொத்தம் 300 இயந்திரங்கள் தூர்வாரும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வேளாண் உற்பத்தி ஆணையரும், சிறப்பு கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப் சிங் பேடி தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், புதூர் கிராமம், காரிமுத்து ஏரி குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 36.50 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி, ஒரத்தநாடு வட்டம், நெடுவாக்கோட்டை கிராமம், கல்யாண ஓடை வாய்க்கால் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி, பட்டுக்கோட்டை வட்டம், வீரக்குறிச்சி கிராமம், இரண்டாம் எண் வாய்க்கால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 4.8 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி, பட்டுக்கோட்டை வட்டம், மகாராஜசமுத்திரம் கிராமம், மகாராஜசமுத்திரம் ஆறு ரூபாய் 24 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி ஆகிய பணிகள் நடைபெறுவதை வேளாண் உற்பத்தி ஆணையரும், தஞ்சாவூர் மாவட்ட குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளின் சிறப்பு கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் ஆகியோர் (09.06.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர், சிறப்பு கண்காணிப்பு அலுவலர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளில் சுமார் 260 இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பணிகளை விரைந்து முடித்திடும் வகையில் மொத்தம் 300 இயந்திரங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன. ஜூன் 12 ஆம் தேதி அன்று மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகள் முழுவதும் சென்றடையும் வகையில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

நடப்பாண்டில் குறுவை சாகுபடி பருவத்திற்கு 3.4 லட்சம் ஏக்கர் பரப்பளவு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சுமார் 500 கோடி ரூபாயும், தூர்வாரும் திட்டத்தின் கீழ் சுமார் 67 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. முதலில் தண்ணீர் வரும் கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசு குறுவை சாகுபடிக்கு  பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக விதை கிராம திட்டத்தின் கீழ் விதைகள் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலையில் நுண்ணூட்டச்சத்து உரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாய பணிகளுக்கு தேவையான இயந்திரங்கள் மானிய விலையில் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலனுக்காக இயந்திர தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பிற மாவட்டங்களிலிருந்தும் வேளாண்மை பணிகளுக்கு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 77 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆகியோரிடம் ஆலோசனை செய்து தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பணியாளர்களை  தூர்வாரும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும் அனைத்து பகுதிகளுக்கும் செல்லக்கூடிய சிறிய வாய்க்கால்கள் தூர்வாரப்படும். கிராமங்களில் உள்ள குளங்கள் அனைத்தும் தூர்வாரப்படும். இது மழைக்காலங்களில் நீரை சேமித்து வைத்து பாசனத்திற்கு பயன்படும். மேலும் தூர்வாரும் பணிகள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் முறையான வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 151 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் தேவையிருப்பின் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் உருவாக்கிக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர் வழிகாட்டுதலின்படி, பொதுப்பணித்துறை அலுவலர்கள் முறையாக திட்டமிட்டு, தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்கப்படும். இவ்வாறு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், பயிற்சி ஆட்சியர் அமித், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் அன்பரசன், வேளாண்மைத் துறை இணை இயக்குனர் ஜஸ்டின், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.