.

Pages

Thursday, March 19, 2015

சோப்பு பார்ட்டிகள் உங்கள் ஊருக்கும் வரக்கூடும், ஜாக்கிரதை!

கிராமத்தில் தனது வீட்டுத் திண்ணையில் உடல்  நலக்குறைவு காரணமாக சற்றுச் சோர்வாக அமர்ந்திருந்தார் அந்தப் பெண்மணி. அப்போது, ஆர்ப்பாட்டத்தோடு வாகனத்தில் வந்து இறங்கினர் சிலர். ‘அபாரமாய் வெளுக்கும் சலவை சோப்பை அஞ்சே ரூபாய்க்குத் தருகிறோம். வாங்கிக்கங்க... வாங்கிக்கங்க...’ என்று கூவினார்கள்.

கூடவே, குஷியூட்டும் ஓர் அறிவிப்பையும் வெளியிட்டார்கள். ‘ஒவ்வொரு சோப்புடனும் ஒரு கூப்பன் தருவோம். அதை சுரண்டிப் பார்த்தால், டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற விலையுயர்ந்த பரிசுகள் கிடைக்கக்  கூடும். உங்களுக்கு வேண்டிய பரிசை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம்’ என்று முழங்கினார்கள். திண்ணைப் பெண்மணியிடமும், ‘அஞ்சு ரூபாய்தானேக்கா... வாங்கிக்கங்க. உங்களுக்குப் பரிசும் கிடைக்கலாமே?’ என்று அன்புக் கோரிக்கை விடுத்தார்கள்.

சரி, போனால் போகுது என்று ஐந்து ரூபாய்க்கு ஒரு சோப்பை வாங்கினார் அவர். அவருக்கு கொடுத்த டோக்கனை சுரண்டிப் பார்க்க, அதில் ‘முதல் பரிசு’ என்றிருந்தது. அப்பெண்மணிக்குத் தலைகால் புரியவில்லை. உடல்நலக்குறைவுகூட ஓடி மறைந்துவிட்டது போன்ற உணர்வு. தனக்கு டி.வி. வாங்கிக்கொள்வதா அல்லது பிரிட்ஜ் அல்லது வாஷிங்மெஷினை தேர்வு செய்வதா என்று இனிய குழப்பத்தில் மூழ்கினார் அவர். அதற்குள் விஷயம் கிராமமெங்கும் தீயாய் பரவிவிட்டது. பாய்ந்து வந்து சோப்புகளை அள்ளத் தொடங்கினார்கள்.  திண்ணை அக்காவுக்கோ தனக்கு எப்போது பரிசு கொடுப்பார்கள் என்ற பதற்றம். சோப்புக்காரர்களிடம் மெதுவாய் அவர் கேள்வியைப் போட, ‘வாங்கக்கா... வீட்டுக்குள்ளே போய் பேசுவோம்’ என்று அழைத்தது அந்த ‘டீம்’. ‘சரி, வீட்டுக்குள் வைத்துத்தான் பரிசைக் கொடுப்பார்கள் போல’ என்று உள்ளே அழைத்துச் சென்றார். வீட்டுக்குள் போனதும், தட்டு, பூரி தேய்க்கும் கட்டை, கரண்டி, லொட்டு லொசுக்கு என்று சில பொருட்களைக் கடைபரப்பினார்கள்.

பார்வையிலேயே அவை படு மலிவானவை என்பது தெரிந்தது.  ‘மூவாயிரம் மதிப்புள்ள இந்தப் பொருட்களை ‘கம்பெனி’ உங்களுக்கு வெறும் 1500 ரூபாய்க்குத் தருது... வாங்கிக்கங்க’ என்றார்கள். பெண்மணிக்கு எரிச்சல். ‘அது சரி, நீங்க பரிசா தருவதா சொன்ன பொருள் எங்கே?’ என்றார் அவசரமாய். ‘நீங்க இந்தப் பொருட்களையெல்லாம் வாங்கிக் கொண்டால், நாங்கள் ஊருக்குச் சென்று அனுப்பிவைப்போம்’ என்று காதில் சூட்டுவதற்கு சரம் சரமாய் மாலை தொடுத்தார்கள்.

பெண்மணி கோபமாகிவிட்டார், ‘எனக்கு எந்தப் பொருளும் வேணாம், நீங்க போயிட்டு வாங்க’ என்று ஐந்து ரூபாயோடு போகட்டும் என்று அவர்களை வெளியே துரத்தினார். அவர்களிடம் சோப்பு வாங்கிய மக்கள் கும்பல் தங்களுக்கு எப்போது பரிசு கிடைக்கும் என்று சூழ்ந்து நச்சரிக்க, ‘விரைவில் வெள்ளித் திரையில் காணுங்கள்’ என்று ‘டாட்டா’ காட்டிவிட்டு, ‘சோப்பு’ போடுவதற்கு அடுத்த ஊருக்கு வேனை கிளப்பிவிட்டார்கள். சோப்பு பார்ட்டிகள் உங்கள் ஊருக்கும் வரக்கூடும், ஜாக்கிரதை!

நன்றி: தினத்தந்தி

5 comments:

  1. மக்களுக்கு சரியான சாட்டையாடியான விழிப்புனருவு,

    ReplyDelete
  2. SHOP WITH ABTA SHOPPING MALL... NOT ON THE STREET PEOPPLE

    ReplyDelete
  3. SHOP WITH ABTA SHOPPING MALL... NOT ON THE STREET PEOPPLE

    ReplyDelete
  4. யாரை? எப்படி ஏமாற்றனும் தெரிந்துதான் அவனவன் மக்களை விதவிதமான வழியில் ஏமாற்றான் கிராமத்து மக்கள் அப்படி என்றால் நடுத்தர தட்டு மக்கள் விளம்பரங்களை நம்பி ஏமாறுகிறார்கள் என்பதை தினம் தினம் பார்க்கலாம்.

    லலிதா நகை விளம்பரம் பார்த்ததுண்டா. லலிதா நகை விளம்பரம் மிகவும் மோசமான விளம்பரம். நீங்கள் பார்த்தால் நீங்களே சொல்வீர்கள். இப்படியும் ஒரு விளம்பரமா என்று. மூன்று வகையான பெண்கள் மூன்று வகையான வசனம் எல்லாமே எப்படி முடிகிறதென்றால் லலிதாவில் நகை வாங்கினால் ஆஹா... மத்ததெல்லாம் ஸ்வாஹா என்று. இதை எப்படி மற்ற நகை கடைகள் ஏற்றுகொள்கின்றனவென்று. நாங்கள் நியாயமானவர்கள் என்று சொல்வதற்கு உரிமை உண்டு. ஆனால் மற்றவர்கள் மோசமானவர்கள் என்று சொல்வதற்கு என்ன உரிமை உள்ளது.

    கல்யாண் நகை கடை விளம்பரம் பாருங்கள். இதில் கல்யாணில் நகைகளுக்கு 5% லிருந்து தான் சேதாரம் என்று சொல்லும் கருத்தை நடிகர் பிரபு சொல்வார். கல்யாணில் சேதராம் 5% லிருந்துதான் என்பதை அழுத்தி விட்டு சொல்வார். சேதாரத்தை அடித்து நொறுக்கி விட்டதாக பலமாக சொல்வார். விளம்பரத்தில் சொன்னது போல் இல்லாமல் அதிகமாக வசூலிக்கப்படும்.

    குருவி சேர்ப்பது போல் சேர்க்கும் நடுத்தர தட்டு மக்களே விளம்பரங்களை மட்டும் நம்பி எந்த ஒரு நகை கடைக்கும் செல்லாதீர்கள். எல்லாவற்றையும் சரியாக பரிசீலித்து வாங்குங்கள். இல்லையென்றால் உங்களது பணம் பறிபோய்விடும்.

    ReplyDelete
  5. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். மக்கள் எத்தனை விழிப்புணர்வு பெற்று இருந்தாலும் புதுப் புது விதத்தில் ஏமாற்றும் கலைகளை கற்று கொண்டு உலகமுழுதும் ஒருகூட்டம் மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறது. நாம் முதலில் விளம்பரத்தையும் விலையையும் பார்த்து பொருட்கள் வாங்காமல் தரத்தைப் பார்த்து பொருட்களை வாங்கக் கற்றுக் கொண்டாலே ஏமாறுவதிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.