ஒவ்வொரு நபியும் ஏதேனும் கைத்தொழில் செய்துள்ளதாக அறிகிறோம். தாவூத் (அலை) அவர்கள் இரும்பை உருக்கி அதன்மூலம் போர்க்கவசங்கள் செய்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கைத்தொழில் குறித்துக் கூறியுள்ளதைக் காணும்போது உழைப்பின் உயர்வையும் மேன்மையையும் உணர முடிகிறது. அதில் ஒன்று: கையால் உழைத்துண்பதே உணவுகளில் மிகச்சிறந்தது. நபி தாவூத் (அலை) அவர்கள் தம் கையால் உழைத்துண்பவர்களாக இருந்தார்கள்.
ஒவ்வொரு நபியும் ஆடு மேய்த்துள்ளார்கள். தச்சராக, வணிகராக, தொழில்முனைவோராக, கப்பல் கட்டுநராக, ஆடை நெய்பவராக இப்படிப் பல்வேறு தொழில்களைச் செய்வோராக நபிமார்கள் இருந்துள்ளனர்.
இமாமத் பணி என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஓர் உன்னதமான பணி. ஆனால் அவர்கள் ஓர் இமாமாக இருந்து மக்களுக்கு தொழுகை நடத்தியதோடு பல்வேறு பணிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். மக்களை நிர்வகித்தல், எதிரிகளை எதிர்நோக்குதல், பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், குடும்ப விவகாரங்களைக் கவனித்தல், சமுதாயப் பணிகளைச் செவ்வனே செய்தல் உள்ளிட்ட எத்தனையோ பணிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். நாம் அந்த அளவிற்குச் செய்யவில்லையானாலும் பொருளாதாரத்தில் பிறரிடம் தேவையாகாத வகையில் சுயமாக ஏதேனும் கைத்தொழில் செய்து நம் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள முயற்சி செய்யலாமே? முயற்சியும் கடுமையான பயிற்சியுமிருந்தால் எந்தத் தொழிலையும் எளிதாகச் செய்யலாம்.
நவீன யுகத்தில் வாழ்ந்து வருகின்ற ஆலிம்கள் தம் வறுமையைச் சொல்லிக்கொண்டே இருப்பதைக் காண்கிறோம். நீங்கள் ஏன் உங்கள் பிள்ளையை, உங்களைப் போலவே ஆலிமாக ஆக்கவில்லை என்று வினவினால், நான் பட்ட சிரமம் போதாதா? என் பிள்ளையும் சிரமப்பட வேண்டுமா? என்று மறுவினாத்தொடுக்கின்றனர். இவர்கள் தம் ஓய்வு நேரங்களை முறையாகப் பயன்படுத்தினால் தம் வறுமையை ஓட ஓட விரட்டலாம். இமாம்களாக உள்ள ஆலிம்கள் தங்கள் தொழுகை நேரம் போக எஞ்சிய நேரங்களில் தமக்கு மிகவும் விருப்பமான ஏதேனும் தொழிலை மேற்கொண்டால் அவர்கள் தம் வாழ்வில் முன்னேற்றம் காணலாம்.
தற்காலத்தில் கணினியும் இணையதளச் சேவையும் மிகுந்துவிட்டதால் இருந்த இடத்திலிருந்தே செய்யக்கூடிய பணிகள் ஏராளம் உள்ளன. அதற்குத் தேவை ஒரு கணினியும் இணையதள இணைப்பும் ஆகும். இது இருந்தால் எங்கிருந்து கொண்டும் நம் வேலையைச் செய்து கொடுக்கலாம். பிறமொழிகளை மொழிபெயர்த்தல், நூல்களை எடிட்டிங் செய்தல், பிழைதிருத்தம் செய்ய ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை வாங்கி வந்து, நீங்கள் இருக்கின்ற இடத்தில் இருந்துகொண்டே எடிட்டிங் செய்து கொடுக்கலாம்.
பி.கு: உங்கள் வியாபாரத்தில் நீங்கள் வெற்றி பெற அடுத்தவரிடம் ஆலோசனை கேட்காதீர்கள்!!!
அப்படி கேட்பதானால், உங்கள் வியாபாரத்தை விட உங்களைப் பற்றிய குறிப்புகளைத் தான் நீங்கள் அதிகம் சொல்ல வேண்டியிருக்கும். உங்கள் குணம், பலம், பலவீனம் அறியாமல் சொல்லப்படும் ஆலோசனை உங்கள் நேரத்தை மட்டுமல்ல, ஆலோசனை சொல்பரின் நேரத்தையும் சேர்த்தே வீணடிக்கும்..
-அதிரை தென்றல் (இர்ஃபான்)
நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள்.
ReplyDelete