.

Pages

Saturday, December 17, 2016

புகார் கொடுக்க வருபவர்களிடம் மனிதநேயத்துடன் போலீசார் நடந்து கொள்ள வேண்டும்: தஞ்சை மாவட்ட எஸ்.பி அறிவுரை !

போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் மனிதநேயத்துடன் போலீசார் நடந்து கொள்ள வேண்டும் என்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் அறிவுரை வழங்கினார்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் உள்ள வரவேற்பு அறையில் அமர்ந்து பொதுமக்களிடம் புகார்களை பெறும் போலீசாருக்கான 2 நாள் பயிற்சி முகாம் தஞ்சையில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமை தாங்கி பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

போலீசார் செய்யும் சிறிய தவறுகள் கூட மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. கடந்த 15 ஆண்டுகளாக திரைப்படங்களில் கூட பெருமளவில் போலீசார் செய்யும் நல்ல செயல்களை காட்டுவது இல்லை. தவறுகளைத்தான் காட்டுகிறார்கள். சமுதாயத்தில் என்ன தவறு நடக்கிறதோ அதைத்தான் அவர்கள் காட்டுகிறார்கள். அதற்கு போலீசாரும் உதாரணம்.

எனவே போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் தவறாக பேசாதீர்கள். அவர்களிடம் அநாகரீமாக நடந்து கொள்ளாதீர்கள். போலீசாரின் செயல்பாடு குற்றம், திருட்டு போன்ற சம்பவங்களை தடுக்கத்தான். நாம் நல்லது அதிகமாக செய்கிறோம். ஆனால் அதை மக்களிடத்தில் யாரும் எடுத்துச்சொல்வது இல்லை. குற்றங்களைத்தான் படம்பிடித்து காட்டுகிறார்கள். எனவே புகார் கொடுக்க வருபவர்களிடம் நண்பர்களாக பழகுங்கள். அவர்களை உட்கார வைத்து புகார் குறித்து கேளுங்கள். அப்போது தான் தவறு எங்கு உள்ளது என தெரிய வரும்.

புகார்கள் வந்தால் அதனை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவித்தால் தான் நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். இதே போல் தான் கும்பகோணத்தில் ஒரு சப்–இன்ஸ்பெக்டர் புகாரை வாங்கிக்கொண்டு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பின்னால் சாதிக்கலவரம் ஏற்பட்டது. இதே போல் ஒரு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒரு இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுத்தார். ஆனால் அதை அவர் வாங்கிக்கொண்டு, புகார் கொடுத்தவர் தான் குற்றம் செய்தது போல் பேசி அனுப்பி விட்டார்.

இதையடுத்து அந்த அதிகாரி உயர் அதிகாரிகளிடம் பேசி எனது கவனத்துக்கு வந்தது. நான் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் விசாரணை நடத்த உத்தரவிட்ட போது அந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது எந்த தவறும் இல்லை என்பது தெரிய வந்தது. இது குறித்து ஓய்வு பெற்ற அதிகாரி கூறுகையில் எனக்கு பக்கத்து வீட்டுக்காரர் செய்த தொந்தரவை விட உங்கள் போலீஸ் நிலையத்தில் அலைக்கழித்தது தான் அதிக மன உளைச்சலை ஏற்படுத்தியது என கூறினார். எனவே போலீசார் மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும். பயிற்சி பெற்றவர்களை அதனை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பயிற்சியில் கலந்து கொண்ட போலீசாருக்கு பயிற்சி கையேடுகளும் வழங்கப்பட்டன. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், ராஜேந்திரன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாம் இன்றும் (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

நன்றி : தினத்தந்தி

3 comments:

  1. போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் மனிதநேயத்துடன் போலீசார் நடந்து கொள்ள வேண்டும் என்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் அறிவுரை மிகவும் வரவேற்கத்தக்கவை ., தமிழக காவல்நிலையத்தில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து அறிவுரை வழங்கியது அருமை. பேச்சு - தோற்றம், லஞ்சம் இவைகள் முக்கிய காரணிகளாக இருக்கு; யோவ் , டேய் , ஒருமையில் பேசுவதால் புகார் கொடுப்பதை தவிக்கிறார்கள், அப்படியே போனாலும் "சாப்பீட்டீர்களா ..." ஒருவர் கேட்பார் நாம் "சாப்பிட்டேன் .." என்று சொன்னாலும் நாங்க சாப்பிட வில்லை பார்சல் வாங்குங்கள் என்று சற்றும் தயக்கமின்றி சொல்லுவதை பார்க்கிறோம் ., புகார் கொடுக்கபோறோமா அல்லது சாப்பாடு வாங்கி கொடுக்கப்போறோமா என்று சந்தேகம் வரும். மருத்துவமனைக்கு போனாலும் செலவு இங்கே வந்தாலும் செலவு என்று புலம்பும் மனநிலையில் மக்கள். மீசையை காட்டி பயமுறுத்தாதீங்க. புகார்களை பதிவு , தெரிவிக்க இணைய முகவரி ., அலைபேசி எண் அனைத்து காவல்நிலையத்தில் இருக்க வேண்டும்

    ReplyDelete
  2. போலீஸில் போற்றத்தக்கவர்களும் உள்ளார்கள் பணம் தின்னி பொறுக்கிளும் உள்ளார்கள் !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.