.

Pages

Monday, June 9, 2014

விவசாய திட்டப்பணிகளை வேளாண்மை துணை இயக்குநர் நேரில் ஆய்வு !

பேராவூரணி வட்டாரத்தில் வேளாண்மை துறையின் மூலமாக 2013-14 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டப்பணிகளை தஞ்சாவூர் மாவட்ட துணை வேளாண்மை இயக்குநர் (மாநிலத்திட்டம்) சி.சீனிவாசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது விவசாயிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.
                   
குறிச்சி கிராமத்தில் புதிதாக துவங்கவிருக்கும் துணை வேளாண் கிடங்கினையும் ,துறவிக்காடு கிராமத்தில் மு.அன்பழகன் வயலில் ,ஹெக்டேருக்கு ரூபாய் 7500/- மானியத்தில் அமைக்கப்பட்ட ,துவரை நாற்று முறை நடவு வயலினையும் பார்வையிட்டார்.துவரை செடி நன்றாக உள்ளதாகவும் ,களை எடுத்து மண்ணினை கொத்திவிட்டு,மண் அணைக்குமாறும் விவசாயிகளிடம் ஆலோசனை வழங்கினார்.தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட மழைத்தூவான் கருவியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
       
குறிச்சி கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் ஹெக்டேருக்கு ரூபாய் 15,000/-மானியத்தில் பெரியதம்பி வயலில் அமைக்கப்பட்ட நீர் கொண்டு செல்லும் குழாயினையும் ,களத்தூர் கிராமத்தில் திருப்பதி ,சக்திவேல் ஆகியோரது வயல்களில் ரூபாய் 8 லட்சம் மானியத்தில் அமைக்கப்பட்ட சோலார் பம்ப்செட்டினையும் ,அது செயல்படும் விதத்தையும் ஆய்வு செய்தார்.
               
வேளாண் துணை இயக்குநரிடம் இவ்வட்டாரத்திற்கென கூடுதலாக மானிய விலை சோலார் பம்ப்செட் அமைத்து தரும்படி விவசாயிகள் கேட்டுக்கொண்டனர் .அதற்கு பதிலளித்த துணை இயக்குநர் ,'தற்சமயம் நுண்ணீர் பாசனம் மற்றும் பாசன கருவிகள் அமைத்து பயிர் செய்யும் பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுவதாகவும் ,தேவைப்படும் விவசாயிகள் உடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அவர்களை அணுகி முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் .
       
பின்னர் மாவடுகுறிச்சி கிராமத்தில் ரூபாய் 50,000/- மானியத்தில் சுந்தர்ராஜன் என்பவரது வயலில் அமைக்கப்பட்ட தென்னை கொப்பரா உலர்கலன் கருவியினை பார்வையிட்டு பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.சித்தாதிக்காடு இராமன் வயலில் அமைக்கப்பட்டுள்ள TMV.3 சான்று நிலை எள் விதைப்பண்ணை வயலினை ஆய்வு மேற்கொண்டு சிறப்பாக உள்ளதாகவும் ,இந்த வயலில் உற்பத்தியாகும் எள் விதையினை முழுமையாக கொள்முதல் செய்திடவும் உதவி விதை அலுவலரிடம் அறிவுறுத்தினார் .
           
மேலும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தினை ஆய்வு மேற்கொண்டு,உதவி வேளாண்மை அலுவலர்கள் அனைவரும் ஜூன் மாதம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் கலந்து கொண்டு 2013-14 ஆம் ஆண்டில் பயிர் சாகுபடி பரப்பு ஒரு சென்ட் அளவு கூட விட்டுவிடாமல் பதிவு செய்யவேண்டும் ,நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள அனைத்து திட்டங்களுக்கும் பயனாளிகளை முன்னதாகவே தேர்வு செய்து வைத்து ,திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது இலக்கினை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டார் .
                 
ஆய்வின் போது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ஈஸ்வர் ,வேளாண்மை அலுவலர் கா.முருகேசன், துணை வேளாண்மை அலுவலர் பூ.தி.மணிமாறன், உதவி வேளாண்மை அலுவலர்கள் நாடிமுத்து ,கார்த்திகேயன் ,தீபா ,கோகிலா ,இராஜரெத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி : எஸ். ஜகுபர்அலி 
பேராவூரணி.



2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. ரூபாய் 8 லட்சம் மானியத்தில் சோலார் பம்ப்செட்டினை பணக்காரர்கள் அமைத்துக்கொள்ள முடியும் அனால் சிறு விவசாயிகள் நிலைமை அவ்வாறு இல்லை,

    அதிகமா விவசாய நிலங்கள் வைத்து இருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் இப்படி வழங்குவதால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வீண் விரயம் செய்கிறார்கள், கட்டணம் நிர்ணயம் செய்தால் அளவோடு நீரை பயன்படுத்துவார்கள்

    இலவச மின்சாரம் குறு நில விவசாய்க்கு மட்டும் வழங்கினால் மின்சாரத்தை சேமிக்கலாம் - செய்வார்களே !

    விவசாயகளுக்கு வேளான் துறை நல்ல ஆலோசனை, மானியம், இலவசம் இப்படி வழங்கியும் உணவு பொருட்கள் அண்டை மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது -

    மேற்சொன்ன வழிகாட்டுதலை எல்லா விவசாய்கள் பின் பற்றினால் தஞ்சை நெற்களஞ்சியமாக மாறும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.