ஈசிஆரில் ( E C R ) எந்நாளும் விபத்துக்கள் !
ஒரு காலத்தில் இராஜாமடம் வெங்கட்ராமன் தமிழ்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது தம்பிக்கோட்டை முக்கூட்டுச் சாலை யிலிருந்து நியாயமாக அதிராம்பட்டினம் வழியாக வரவேண்டிய சேது ரோட்டின் ரூட்டை மாற்றி பட்டுக் கோட்டை வழியாக திசை திருப்பி பின் சேதுபாவா சத்திரத்தில் அதை இணைக்கச் செய்தார் என்று கூறுவார்கள். இதனால் போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் அதிராம்பட்டினம் பொருளாதார ரீதியில் வணிக வளர்ச்சி இல்லாத ஊராகப் போய் பட்டுக் கோட்டையை சார்ந்தே நிற்கவேண்டிய நிலைமைக்கு ஆளானது.
அதன்பின் பல ஆண்டுகள் காத்திருந்த பிறகு இ சி ஆர் என்கிற நாடு தழுவிய ப்ராஜக்ட் போடப்பட்டபோது அந்த சாலை அதிராம்பட்டினம் வழியாகச் செல்லும் என்கிற செய்தி கேட்டு மகிழாத மனங்களே இருக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஒரு காலத்தில் இராமநாதபுரம், கீழக்கரை போன்ற ஊர்களுக்குச் செல்லவேண்டுமானால் காரைக்குடி எல்லாம் சுற்றி ஆறிலிருந்து எட்டு மணிநேரம் செலவழித்த காலமெல்லாம் போய் மூன்று மணி நேரத்தில் ஆனந்தமாக கடற்கரைக் காற்றை சுவாசித்துக் கொண்டே போகும் காலம் ஏற்பட்டுள்ளது. . கேட்க ஆளின்றி கிடந்த இ சி ஆர் பகுதிகளை ஒட்டி இருந்த அநாதை நிலங்கள் எல்லாம் இன்று இமாலய விலைக்கு ஏறி வீட்டு மனைபோட்டு விற்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி துறை முகத்திலிருந்து கண்டெய்னர் லாரிகள் சென்னை வரை செல்ல வேண்டுமானால் அவை அதிரை வழியாக செல்வது சிக்கனமாக முடியுமென்பதாலும் திருவனந்தபுரம் பகுதிகள் வழியாக கேரளத்திலிருந்து தர்ஹா சுற்றுலா வரும் பேருந்துகள் யாவும் அதிரையைக் கடந்தே செல்வதாலும் அரவமின்றிக் கிடந்த அதிரைப் பகுதியில் அர்த்த ராத்திரியில் கூட வாகனங்கள் வரிசையாகச் செல்ல ஆரம்பித்தன. இத்தகைய வாகன ஓட்டிகளும் அவற்றில் பயணிப்பவர்களும் அதிரையில் வாகனங்களை நிறுத்துவதன் காரணமாக புதிய புதிய உணவு விடுதிகளும் கணிசமான வியாபார வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதையும் நாம் மறுக்க இயலாது. அத்துடன் அதிரையின் திசைக்கொருபக்கம் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப பெட்ரோல் பங்குகளும் தோன்றி ஊரின் வளர்ச்சியைப் பார்க்க ஒருவகையில் மகிழ்வாகத்தான் இருக்கிறது.
அதே நேரத்தில் ஊரிலும் சுற்று வட்டார கிராமங்களிலும் கூட ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியால் இரண்டு, மூன்று, நான்கு சக்கர வண்டிகளின் எண்ணிக்கையும் கணக்கின்றிப் பெருத்துவிட்டன; இன்னும் பெருகி வருகின்றன. அடுத்தவீட்டுக்குப் போவதானாலும் கூட ஆட்டோவைக் கூப்பிடும் கலாச்சாரம் மேலாங்கி வருகிறது. படிக்கிற பிள்ளைகளும் வெளிநாடுகளில் இருந்து பத்து நாள் விடுமுறையில் வருபவர்களும் கூட இரு சக்கர வாகனங்கள் வாங்கிப் பயன்படுத்துவதை ஒரு பெருமையாகவும் கலாச்சாரமாகவுமாக ஆக்கிவிட்டார்கள்.
இத்தகைய வாகனங்களின் எண்ணிக்கையின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் உள்ளூருக்குள் செல்லும் சாலை வசதிகள் பெருகவில்லை என்பது அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை.
அத்துடன் நெருக்கடியான நேரங்களில் சாலை ஓரங்களில் காய்கறி முதல் வடை, வாடா, சுண்டல் விற்கும் கடைகளும் பெருகிவிட்டன. வேலையற்றவர்கள் கூட்டமாகக் கூடி நின்று கொண்டு சாலைகளை மறைத்துக் கொண்டு வெட்டிப் பேச்சுப் பேசும் இடங்களாகவும் சாலைகள் ஆகிவிட்டன. இன்றைய நிலையில் நமது ஊருக்கு மட்டுமென்று ஒரு மக்கள் தொகை கணக்கு எடுப்போமானால் ஒப்பிடும்போது, ஒரு நபருக்கு ஒரு நாய் வீதம் தெருவில் அலைகின்றன. நாய்களுடன் போட்டி போட்டுக் கொண்டு கட்டிப் போடவும் கவனிக்கவும் ஆளின்றி ஆடு மாடுகளும் அலைந்து கொண்டு இருக்கின்றன. முன்பெல்லாம் இப்படி அத்துமீறி அலையும் ஆடுமாடுகளை அடைக்க பழஞ்செட்டித் தெருவில் பவுண்டு இருந்தது. இப்போது அந்தப் பவுண்டு ஒரு நினைவுச் சின்னமாகிவிட்டது. . போதாக்குறைக்கு வீடுகட்டுபவர்கள் தங்களின் கட்டிடப் பொருள்களான செங்கல், ஜல்லி, மணல் ஆகியவைகளை கொட்டி வைத்து சாலைகளை கணிசமாக ஆக்கிரமிக்கிறார்கள். சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடைகளும் . தங்களுக்குரிய பங்கை செவ்வனே செய்து வருகின்றன. ஊரின் எல்லைகள் அனைத்திலும் கொடி கட்டிப் பறக்கும் சாராய சாம்ராஜ்யமும் தனது கோர முகத்தை காட்டி வருகின்றன.
மிகவும் வேதனையான விஷயம் என்ன வென்றால் குழந்தைகளை இருசக்கர வாகனங்களின் முன்னாள் நிற்கவைத்து அல்லது எரிபொருள் டாங்க் மீது உட்காரவைத்து அவர்களிடம் வண்டியை ஆன் செய்யவும் ஆப் செய்யவும் சொல்லிக் கொடுப்பது அல்லது ஹாரன் அடிக்கச் சொல்லிக் கொடுத்து மகிழ்வது போன்ற அற்ப சந்தோஷத்தின் விலை அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் சில சமயங்களின் அந்த இளம் பிஞ்சுகளின் உயிராகவும் இருக்கலாம் என்பதை நாம் உணர வேண்டும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொதுவாக அதிரையில், குறிப்பாக இ சி ஆர் - ல் ஒரு நாளைக்கு ஒரு விபத்தாவது நடந்து விடுகிறது. இங்கு தரப்பட்டுள்ள இணைப்புக்களை இதய வலிமை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும்.
இந்த விபத்துக்கள் பல நேரங்களில் கோர விபத்துக்களாகி ஒரு சில உயிர்களைப் பலி கொண்டு விடுகின்றன; பலரை ஊனமுற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன . அண்மைக் காலத்தில் பல வாழவேண்டிய இளைஞர்கள் சாலை விபத்துக்களில் அகால மரணத்தைத் தழுவினார்கள்’ கை கால்களை இழந்தார்கள். வெளியூர்களில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் குடும்பத்துடன் கோரமாக நடு ரோட்டில் நசுங்கிக் கிடந்தார்கள். இலட்சக் கணக்கான பணமதிப்புள்ள வாகனங்கள் குப்புறக் கவிழ்ந்து குப்பை மேடாக காட்சி தந்தன.
ஒரு புறம் வளர்ச்சி! மறு புறம் அழிவு! இப்படி வளர்ச்சியும் தளர்ச்சியும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு ஊரை சீரழிக்கவா புதிய புதிய போக்குவரத்து வசதிகள் வேண்டுமென்று கேட்டோம்? இ சி ஆர் வந்த பிறகே இவ்வளாவு விபத்துக்கள் என்றால் தவறு இ சி ஆரைக் கொண்டு வந்தவர்கள் மீதா ? அல்லது அதைப் பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்தி பரிதாபமாக சாகக் கூடாத நேரத்தில் சாகத் தயாராகும் நம் மீதா ?
ஒரு பத்திரிகையில் படித்தேன்.
ஒரு அமெரிக்கரும், ஒரு இங்கிலாந்து நாட்டவரும், ஒரு இந்தியரும் பேசிக்கொண்டார்கள். அமெரிக்கர் சொன்னார், “ எங்கள் நாட்டில் வாகனங்கள் வலது புறமாகச் செல்லும்” . இங்கிலாந்துக் காரர் சொன்னார், “ எங்கள் ஊரில் இடது புறமாகச் செல்லும்” . இந்தியர் கடைசியாக சிரித்துக் கொண்டே சொன்னார், “ எங்கள் ஊரில் இடைவெளி இருக்குமிடமெல்லாம் செல்லும் ”.
சாலைப்பயணம் என்பது மரணத்தை முன்னிருக்கையில் அமரவைத்துச் செல்வது போலாகிவிட்டது. . வாகனப் பயணத்தில் எப்போது எந்த ரூபத்தில் விபத்து நடக்குமென்று அறியமுடியாத சூழல் நிலவுகிறது.
இந்திய சாலைகளில் மட்டுமே சுமார் மூன்று இலட்சம் விபத்துகள் வருடம் தோறும் நிகழ்கின்றன. எண்பதாயிரம் உயிர்களைக் கொல்லும் இந்த சாலை விபத்துகள் மூலம் ஆண்டுக்கு மூவாயிரத்து அறுநூறு கோடி ரூபாய் இழப்பும் ஏற்படுகின்றது என்பது அதிர்ச்சியளிக்கிறது. சாலைகளைப் பயன்படுத்துவோரின் அலட்சியமே தொன்னூறு விழுக்காடு விபத்துகளுக்குக் காரணமாகிறது என்று இந்தியாவிலும், உலக அளவிலும் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இத்தகைய சாலை விபத்துக்களில் அறுபத்தாறு சதவீதம் மதுவைக் குடித்து விட்டு வண்டி ஒட்டுவதாலும் முப்பது சதவீதம் தொலைபேசியில் பேசிக் கொண்டு வண்டி ஒட்டுவதாலும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
அனைவரும் யோசிக்க வேண்டும். ; சிந்தித்துப் பார்க்க வேண்டும். சாலைபாதுகாப்பு விதிகள் சரியாகப் பயன் படுத்தப் படுகின்றனவா ? ஒரு வண்டியில் அனுமதித்த அளவுக்கு மட்டும் ஆட்கள் ஏறிச் செல்கின்றனரா ? சாலை ஓரங்களில் ஏன் இத்தனை ஆக்கிரமிப்புகள்? கைகளைக் கோர்த்துக் கொண்டு நடுச் சாலைகளில் இரண்டு மூன்று இரு சக்கர வண்டிகளை இளைஞர்கள் கூக்குரலிட்டு கும்மாளமிட்டுக் கொண்டு ஓட்டும்போது கரணம் தப்பினால் மரணம் என்பது அவர்களுக்கு மறந்து போய்விட்டதா? இப்படிப்பட்ட இளைஞர்களின் கோரிக்கைக்கும் கண்ணீருக்கும் பதில் கொடுத்து அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கித்தரும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்டிக்கும் சக்தியை இழந்துவிட்டார்களா ? அல்லது பெற்றோரறி மதிக்கும் பழக்கம் மரணித்துவிட்டதா ? மறு உலகம் போவதற்கு அதிவேகத்தில் செல்லும் இளைஞர்கள் இந்த உலகத்தில் உள்ள ஒரு இடத்துக்கு சற்று தாமதமாகச் சென்றால் யார் குடி முழுகிவிடும் ?
வளரும் இளைஞர்களுக்கு இதன் மூலம் வைக்க விரும்பும் வேண்டுகோள் இவைதான்.
சாலை விதிகளை மதித்து உங்கள் உயிர்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள உங்களுக்கே உதவிக் கொள்ளுங்கள். பிறப்பவர்கள் இறப்பது இயற்கை ஆனால் அந்த இறப்பைத் தேடி நீங்களே வலியப் போக எத்தனிக்காதீர்கள்.. “ இளம் கன்று பயமறியாது ” என்றும் “ கல்லைத் தின்றால் செறிக்கிற வயது “ என்றும் உங்களை உசுப்பிவிடும் சில பழமொழிகளை உங்களைக் கெடுப்பதற்காகவே சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்பதை உணருங்கள். நில்! கவனி! செல்! என்கிற புதிய பழமொழியை நினைவில் கொள்ளுங்கள். ! உங்களை நம்பி - நீங்கள் ஆசைப்பட்டீர்கள் என்று உங்களுக்கு வாகனம் வாங்கித்தந்த உங்கள் பெற்றவர்களின் கனவை உங்களின் சாலைவிதிகளை மீறிய போக்குகளால் தரைமட்டமாக்கி விடாதீர்கள்.
உங்களது உற்சாகத்தை உங்கள் வண்டியின் ஆக்சிலேட்டரில் காட்டாதீர்கள் ; உங்களின் மார்க் சீட்டுகளில் காட்டுங்கள். முக்கியமாக நீங்கள் ஓட்டும் வண்டியின் பெட்ரோல் செலவை நீங்கள் உங்கள் உழைப்பின் மூலம் செய்யவில்லை . எங்கோ பாலைவனத்தில் கூலித் தொழிலாளியாக வியர்வை வடிக்கும் உங்கள் தகப்பனின் வியர்வைத்துளிகளே உங்களின் வண்டிகளில் பெட்ரோலாக ஊற்றப்படுகிறது என்று எண்ணிக் கொள்ளுங்கள். வெளியே போன நீங்கள் வீடு வந்து சேரும்வரை உங்களின் தாய்மார்கள் இன்னொரு பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் எண்ணிக் கொள்ளுங்கள்.
காவல்துறை நண்பர்களின் கண்காணிப்பு சாலை விபத்துக்களைத் தடுப்பதில் இன்றியமையாததாக இருக்கிறது. நிச்சயமாக இது அவர்களின் கடமை என்றாலும் கூட நாமும் நினைவூட்ட வேண்டி இருக்கிறது. டாடா ஆஸ் போன்ற வாகனங்களில் கூட்டமாக வேலையாட்களை ஏற்றிச் செல்வது, லோடு லாரிகளின் மீது ஏற்றப்பட்ட மூட்டைகள் மீது லோடு மேன்கள் ஏறி உட்கார்ந்து செல்வது, இருவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட இரு சக்கர வண்டிகளில் மூன்று நான்கு பேர்கள் ஏறிப் போவது, ஆட்டோவில் ஓட்டுனருக்கு அருகில் இடைச் சொருகலாக ஒருக்கணித்து ஒருவர் உட்கார அனுமதிப்பது ஆகிய அத்துமீறல்கள் காவல்துறை உடனே கண்காணிக்க வேண்டியவைகளாகும். மேலும் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை கைது செய்து அவர்களின் உரிமத்தை ரத்து செய்வது, உரிமமே இல்லாமல் இரண்டு சக்கர மற்றும் கார்களை ஓட்டுபவர்களை தடுத்து வழக்குப் பதிவு செய்வது, ஓவர் ஸ்பீடில் செல்பவர்களின் உரிமத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளில் காவல்துறையும் அவர்களது பணிகளுக்குள்ள கடமை விதிகளை கண்டிப்பாக செயல்படுத்த இறங்க வேண்டும்.
சாலை விதிகளை மதிப்போம் ! நமது உயிர்களைக் காத்துக் கொள்வோம். !
இப்ராஹிம் அன்சாரி
தொடர்புக்கு: ebrahim.ans8@gmail.com
சரியான நேரத்தில் வந்த தலையங்கம். இவற்றை துண்டு பிரசுரமாக அடித்து அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கலாம்.
ReplyDeleteஅதிவேகம் ஆபத்தை வரவழைத்துவிடுகிறது. ஒருவருக்கு ஏற்படும் விபத்தால் அவருடைய குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி விடுகிறது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சகோதரர் பிரபல எழுத்தாளார் இப்ராஹிம் அன்சாரி அவர்களின் இந்த ஆக்கம் சரியான நேரத்தில் வந்த ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லவேண்டும், உங்களுடைய இந்த ஆக்கம் மிகவும் நீண்ட இடைவெளிக்குப் பின் வந்தாலும் உங்களுடைய எழுத்து நடைகள் இடைவெளி இல்லாமல் அழகாக புரியும்வண்ணம் இருக்கின்றது.
வரலாறு தெரியாதவர்களுக்கு இ.சி.ஆரின் வரலாறு நன்று, அந்த இ.சி.ஆர். வந்தது நல்லது, பயன்படுத்த தெரியாதவர்களுக்கு கெட்டது. நடனம் ஆடத் தெரியாதவள் மேடை சரியில்லை என்று சொன்னாலாம்.
ஆனால் ஒன்று, நல்லது சொன்னால் அதற்க்கு எதிர்மறையாகத்தான் செய்கின்றனர், ஆனபடியால் எதிர்மறையாக சொல்லணும் போல் இருக்கு.
சரியான நேரத்தில் வந்த உங்களுடைய இந்த ஆக்கம். ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தணும். இக்கால இளைஞர்களுக்கு சாலைகளில் உள்ள வேகத்தடைகள் பயனற்றதாகி இருக்கின்றனது, அவர்களுக்கு மனதளவில் வேகத்தடையை உண்டுபண்ண வேண்டும்.
//வேலையற்றவர்கள் கூட்டமாகக் கூடி நின்று கொண்டு சாலைகளை மறைத்துக் கொண்டு வெட்டிப் பேச்சுப் பேசும் இடங்களாகவும்//
தகப்பன் விட்டுச் சென்ற பணத்திலும், அண்ணன் தம்பி வெளிநாட்டிலிருந்து அனுப்புகின்ற பணத்திலும் குளிர் காய்ந்து கொண்டு, குறிப்பாக மாலை நேரங்களில் நமதூர் பல முக்கங்களில் அமர்ந்து கொண்டு வருவோர் போவோரை புறம் பேசும் மனிதர்கள் ஒரு பக்கம். மறுப்பக்கம் இளைஞர்களின் இருசக்கர வாகனத்தில் சாகசம். உருப்படப் போவது எப்போது?
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
Daily licence checking போட்டா Road freeயாக இருக்கும்
ReplyDeleteஇப்ராஹிம் அன்சாரி காக்காவின் உணர்வு பூர்வமான தலையங்கம். சிந்திக்கும்படியான வேண்டுகோள். ஆனால் படித்துவிட்டு செயல்படாமல் போவோர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். ஐந்து நிமிடதாமதத்திற்க்காக அசுர வேகத்தில் சென்று அற்ப ஆயுளில் உயிர்துறப்போர்தான் அதிகமாக இருக்கிறார்கள். பின் விளைவுகளை முன்கூட்டியே நினைத்து நிதானித்து வாகனம் ஓட்டினால் வாழ்நாளை நீட்டிக்கலாம் என்று யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
ReplyDeleteஇந்தப் பதிவை படித்தபிறகாவது விபத்துக்கள் நமதூரில் குறைந்தால் ஆதங்கப்படும் நல்லுள்ளங்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.
இப்றாகீம் காக்காவின் இந்த ஆக்கம் ஆழ்மன வேதனையின் வெளிப்பாடாகவும், எதிர்கால தலைமுறை மீதான அக்கரையாகவுமே படுகிறது.
ReplyDeleteஇந்த ஆக்கத்தை வாசித்துக்கொண்டு இருக்கும்போதே நோட்டீஸாக அடித்து வெளியிடத்தகுதியானது என்ற எண்ணம் ஓடியது. நண்பர் நிஜாம் இதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
1) பெட்ரோல் பங்குகளில் இந்த நோட்டீஸை வாகன ஓட்டிகளுக்குக் கொடுக்கும் வகையில் பங்க் உரிமையாளர்களே இதற்கான செலவை பகிர்ந்து கொள்ளலாம்.
2) மாணவர்களுக்கு சாலைப்பாதுகாப்பு குறித்த கருத்தரங்கங்கள், போட்டிகள் வைக்கலாம்.
3) ECR சாலையில் பள்ளி கல்லூரிகள் அருகே பகல்நேர போக்குவரத்து காவலர் பணிக்காக கல்லூரி மாணவர்களில் சிலரை கல்லூரி நிர்வாகம் சுழற்சி முறையில் பயன் படுத்தலாம்.
இளைஞர்களுக்கு சுயபொறுப்புடன் வாகனம் ஓட்டும் பக்குவம் அவசியம் என்பதை உணராதவரை எத்தகைய அறிவுரையும் விழலுக்கு இரைத்த நீரே. எனினும், முயற்சிகளைத் தொடர்வோம்.
காக்கா உங்களுடைய மன வேதனைகளை புரிந்தவர்கள் மட்டும்தான் இதை ஜீரணிக்க முடியும், மற்றவர்களைப் பற்றி கூறவா முடியும். பெற்றோர்கள் சரியாக இருந்தால் பிள்ளைகள் சரியாக இருக்கும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பயப்ப்படும்வரை எதுவும் சரியாகும் என்று சொல்ல முடியாது.
ReplyDeleteஇந்த வலைதளத்தில் உங்களைப்போல் இன்னும் சிலர் விழிப்புணர்வு ஆக்கங்களை தந்த வண்ணம் இருக்கின்றனர், அதை பலரும் படிக்கின்றனர், சிலர் பின்னூட்டமும் இடுகின்றனர், செயல் படுத்துவது யாரு? இங்குதானே இடிக்குது.
உங்களைபோல் ஜமால் முஹம்மது காக்கா, தம்பி அதிரை மெய்சா, தம்பி சேக்கன்னா எம்.நிஜாம், இவர்களுடைய ஆக்கங்கள் அனைத்தும் உயிருள்ளவை, உயிர் இருந்தும் என்ன பயன்? எழுந்து நடப்பதற்கென்ன தவழக்கூட முடியாமல் அப்படியே முடங்கி விடுகின்றது. காரணம் மக்களின் அலட்ச்சியப் போக்கு.
மாற்றம் ஒன்றே!!!!!?????
பொதுவாக நம்ம ஜனங்களை நேர்வழிக்கு கொண்டுவர இஸ்லாமிய அமைப்புகள் அதிரடி நடவடிக்கையை கையாள வேண்டும், இல்லாட்டி நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். இஸ்லாமிய அமைப்புகள் கட்ட பஞ்சாயத்து, காசு வாங்கிட்டு வேலை செய்றது போன்ற வேலைகளில் ஈடுபடாமல் ஈமானை வலுப்படுத்தி மக்களுக்காக இறங்க வேண்டும்.
ReplyDelete//ஒரு காலத்தில் இராஜாமடம் வெங்கட்ராமன் தமிழ்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது தம்பிக்கோட்டை முக்கூட்டுச் சாலை யிலிருந்து நியாயமாக அதிராம்பட்டினம் வழியாக வரவேண்டிய சேது ரோட்டின் ரூட்டை மாற்றி பட்டுக் கோட்டை வழியாக திசை திருப்பி பின் சேதுபாவா சத்திரத்தில் அதை இணைக்கச் செய்தார் என்று கூறுவார்கள். //
ReplyDeleteமூத்த எழுத்தாளர் இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களின் இந்த பதிவு நமதூரின் வீடெங்கும் செல்லவேண்டும் ....
வெங்கட்ராமன் இவர் நமதூரில் உண்ட சோத்துக்கு ரெண்டகம் செய்தவர் ....ஒருங்கிணைந்த தனி சட்டமன்ற தொகுதியாக இருந்த அதிராம்பட்டினத்தில் முஸ்லிம்கள் அதிகம் என்பதால் முத்துபேட்டையை திருத்துறை பூண்டி சட்ட மன்றத்துடன் சேர்த்து அதிராம்பட்டினம் .மதுக்கூர் ,முத்துபேட்டை முஸ்லிம்களை பிரித்தவர் .....மத்தியில் ரானுவமந்திரி ,துணை ஜனாதிபதி அதன்பின் ஜனாதிபதி என்று நம்மவர்களின் தயவில் அரசியலில் செழித்து நமக்கே ஆப்புவைத்தவர் .
எப்படித்தான் ஆந்தைபோல் அலறினாலும
ReplyDeleteகோட்டான்போல்கத்தினாலும்அதுஎருமைமாட்டின்மேல்பெய்த மழையே! நாய்வாலைநிமிர்த்தலாம்.இந்தநாட்டுமக்களைதிருத்தவேநல்லகட்டுரைஆனால்விழளுக்குஇறைத்தநீரே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteசிறந்த விழிப்புணர்வு கட்டுரை. சமுதாய அக்கறை உள்ளவர்களால் மட்டுமே இதுபோன்று ஆணித்தரமாக சுட்டிக்காட்டி எழுதமுடியும். வாழ்த்துக்கள்.
கட்டுரையை எழுதி பிரசுரித்து அதை எல்லோரும் படிக்கும் வண்ணம் பிரசுரமும் செய்தாகிவிட்டது. இனி பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதே தற்போதையக் கேள்வி...? கட்டுரை காரணத்தை சரியாக விளக்கி விட்டது. விழிப்புணர்வை யார் மக்கள் முன் கொண்டு செல்வது...?. விபத்தை தவிர்க்க இனி என்னென்ன நடவடிக்கைகள் ஊர் அளவிலும் அதிகாரிகள், அமைச்சர்கள் அளவிலும் கொண்டுசெல்லவேண்டும் என்று முடிவெடுத்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இதுவரை அதிரையில் நடந்துள்ள விபத்துக்கள் அடங்கிய முழு விவரத்தையும்,(தகவல் அறியும் சட்டத்தின் மூலம் , காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் பெற்று அதை கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர், மத்திய, மாநில போக்குவரத்து துறை அமைச்சர்கள், முதல் அமைச்சர் தனிபிரிவு அலுவலம் என்று தொடர் புகார் மூலம் இதற்கு ஒரு தீர்வு காண முன்வரவேண்டும். இதற்கு சகோதரர் கோ.மு.அ. ஜமால் முஹம்மது = K.M.A. JAMAL MOHAMED. அவர்களை தாரளமாக துணைக்கு அழைக்கலாம்.
பட்டுக்கோட்டை அன்னபூர்ணா திரை அரங்கம் அருகே சாலை குறுக்கு தடுப்பு அமைத்து உள்ளதைப்போல, காலேஜ் அருகில் உள்ள இரயில் கேட்டில் இருந்து முத்துப்பேட்டை ரோட்டில் அமைந்துள்ள பெட்ட்ரோல் நிலையம் வரை இந்த தடுப்பை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லூரி மற்றும், பள்ளி இந்த ரூட்டில் அமைந்துள்ளதால் அதை சுட்டிக்காட்டி இந்த சாலையின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரியை மாணவர்கள் கடந்து செல்ல ஜீப்ரா கிராசிங் மற்றும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ரோடு அதிரையை கடந்து செல்லும் வரை பிளாஷ் லைட் கல் ஆங்கங்கே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த பகுதி முழுவதையும் விபத்து பகுதியாக அறிவித்து அதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலைவிதிகளை மதிப்போம் மதிப்போம் என்று சொல்லுகின்றோமே தவிர சாலைவிதிகள் என்றால் என்னென்ன என்றே நிறைய வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. எனவே போக்குவரத்து அதிகாரிகளை கொண்டு ஊர் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் போல சாலை போக்குவரத்து விதிகளை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும்.
துரியத கால நடவடிக்கையை சமுதாய இயக்கங்கள், ஊர் ஜமாத்கள், அரசியல் கட்சிகளை கொண்டு இருக்காவிட்டால், இனி சகோதரர் இபுராஹிம் அவர்கள் கட்டுரை பார்ட் 2, கட்டுரை பார்ட் 3 என்று எழுதிக்கொண்டேதான் இருக்க முடியும்.
சாலை விதிகளை மதிப்போம் ! நமது உயிர்களைக் காத்துக் கொள்வோம். !
ReplyDeleteசாலை விதிகளை மதிப்போம் ! நமது உயிர்களைக் காத்துக் கொள்வோம். !
ReplyDeleteசரியான நேரத்தில் வந்த தலையங்கம். இவற்றை துண்டு பிரசுரமாக அடித்து அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கலாம்.அதிவேகம் ஆபத்தை வரவழைத்துவிடுகிறது. ஒருவருக்கு ஏற்படும் விபத்தால் அவருடைய குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி விடுகிறது. . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . இப்படிக்கு . . . . . . . . . . .. . . . . . . . . . . . . ஜம் ஜம் அஸ்ரப் 9976438566
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteசிறந்த விழிப்புணர்வு கட்டுரை. சமுதாய அக்கறை உள்ளவர்களால் மட்டுமே இதுபோன்று ஆணித்தரமாக சுட்டிக்காட்டி எழுதமுடியும். வாழ்த்துக்கள்.