.

Pages

Sunday, March 8, 2015

சர்வதேச பெண்கள் தின சிந்தனைகள்: 'எழுத்தாளர்' இப்ராஹீம் அன்சாரி

“எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி!’

- பாரதியார்

இன்று சர்வதேச பெண்கள் தினம் உலகம் முழுதும்  கொண்டாடப்படுகின்றது. இந்நாளை  பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் சாதனைகளை கொண்டாடும் நாளாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்தக் கருத்தை முன்னிட்டு எழுந்த சிந்தனைகளை இங்கு பகிர விரும்புகிறேன்.

இரண்டாம் , மூன்றாம் வகுப்பில் படிக்கும் போதே பெண்களைத் ஆணாதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் நிலைகளைப் பாடங்கள்- பாடல்கள் சொல்லித்தருகின்றன.

ஒரு சிறுமி பாடுவதாக இரண்டாம் வகுப்புப் பாடல் இது :- 
“தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நாலு
அண்ணனுக்கு மூணு
எனக்கு ரெண்டு
அம்மாவுக்கு ஒண்ணு “

என்று இட ஒதுக்கீடு அடுப்பங்கரையிலேயே பெண்களுக்கான பாகுபாட்டை ஆரம்பித்துவிட்டது. ஆண்களை உயர்ந்தவர்கள் என்றும் பெண்களை தாழ்ந்தவர்கள் என்றும் இளம்பருவத்திலேயே நெஞ்சங்களை வடிவமைக்கும் முயற்சி இது.

ஒளவையார் பெண்ணாக இருந்தும் கூட “ உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு “ என்றார். ஆண்கள் மட்டும் அளவின்றி உண்ணலாமா?

பெண்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுத்து அவர்களை ஒரு உணர்வுள்ளவர்களாக உலகுக்கு அடையாளம் காட்டிய போக்கு இஸ்லாம் தழைத்த பிறகே ஏற்பட்டது. இன்றும் உலகெங்கும் அணியணியாக பெண்கள் இஸ்லாத்தைத் தழுவி வருவதே இதற்கு சான்று.

வரலாற்றின் பன்முகங்களைப் பார்ப்போமானால் , இஸ்லாம் தோன்றித் தழைக்கும் முன் உலகம் பெண்களை எப்படி நடத்தியது என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும்.

கிரேக்கர்கள்,  பெண்களை வியாபாரப் பொருளாகக் கருதினார்கள். கிரேக்கர்களின் ஞானி என்று புகழப்படும் சாக்ரடீஸ் , “ பெண்கள் உலகின் வீழ்ச்சிக்குக் காரணமானவர்கள் “ என்று குறிப்பிட்டார். அத்துடன், “ பெண்கள் விஷ மரத்துக்கு ஒப்பானவர்கள். அந்த மரத்தின் புறத்தோற்றம்  அழகாக இருக்கும் .ஆனால் அதன் கனிகளை சிட்டுக் குருவிகள் கூட தின்றவுடன் இறந்து விடுகின்றன “  என்று கூறியவரும் அவரே.

ரோமானியர்கள் பெண்களுக்கு “ ஆன்மா” என்று எதுவுமில்லை என்று கருதிக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் பெண்கள் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியும் தூண்களில் கட்டி வைத்தும் கொடுமை செய்தார்கள். அதுமட்டுமலாமல் பெண்களை குதிரைகளின் வால்களில் கட்டி அவர்கள் சாகும்வரை குதிரைகளை விரைவாக ஓட்டினார்கள்.

இந்தியர்கள் அவர்களின் வேதப்படி கணவன் இறந்துவிட்டால் அவனோடு அவனது மனைவியையும் விறகாகப் போட்டு எரித்தார்கள். இன்றும் சில சமுதாயங்களில் மனைவியை வட்டிக்கு அடகுவைத்துப் பணம் வாங்கும் நிலை இந்தியாவில் இருக்கிறது. நான்கு வகை சாதிகள் என்று கட்டமைக்கப்பட்ட இந்திய சமூகத்தில் எந்தச் சாதியில் பிறந்திருந்தாலும் பெண்கள் இழிந்த சாதியாகவே கருதப்பட்டார்கள். இன்றும் கூட ஆணும் பெண்ணும் சமம் என்று அரசியல் சட்டம் அறிவித்தாலும் தங்களின் உரிமைகளுக்காக இன்னும் பெண்கள் போராட வேண்டிய நிலைமைகள்தான் நிலவுகின்றன. பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு  என்பதும் கிடப்பில்தான்  போடப்பட்டுள்ளது.

சீனர்கள் பெண்களை நற்பாக்கியத்தையும் செல்வங்களையும் அழித்துவிடக்கூடிய தன்மை உடையவர்கள் என்று கருதினார்கள். மனைவியரை உயிரோடு புதைப்பதற்கும் பொதுச் சந்தையில் விற்று விடுவதற்கும்  சீனர்கள் உரிமை பெற்று இருந்தார்கள்.

பெண்கள் சாபத்துக்கு உரியவர்களென யூதர்கள் கருதினார்கள்.  ஏனென்றால் அவள்தான் ஆதம் ( அலை ) அவர்களை வழிகெடுத்து மரக் கனியை  உண்ணச் செய்தவள் என்று அவர்கள் கருதுகிறார்கள்.   பெண்ணுக்கு ஏற்படும்  மாத இயற்கைச் செயலால் அவள் அசுத்தமடைந்துவிடுவாள் என்று அவர்கள் ஒதுக்கி வைக்கிறார்கள்.  பெண்ணுக்கு சகோதரர்கள் இருந்தால் தந்தையின் சொத்தில் அவளுக்கு உரிமை  இல்லை என்பதும் யூதர்களின் கருத்து.
பாபிலோனிய சட்டப்படி, ஒரு ஆண் ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டால், கொலை செய்த ஆணுக்கு மரணதண்டனை வழங்கப்படாமல் அவனது மனைவிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலம்வரை ஆங்கிலேய பொதுச் சட்டப்படி , பெண்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. 1567 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் உரிமையும் தரக்கூடாது என்று சட்டம் இயற்றியது. எட்டாம் ஹென்றி அரசரின் காலத்தில் , பெண்கள் அசுத்தமானவர்களாகையால் பைபிளைக் கையால் தொடக்கூடாது என்று சட்டம் இயற்றினார்.

பிரெஞ்சுக்காரர்கள் 586 ஆம் ஆண்டில் ஒரு வினோதமான ஆய்வு செய்தார்கள். ஒரு மாநாட்டைக் கூட்டி பெண்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களா என்பதே அந்த ஆய்வு. ஆய்வின் முடிவில் பெண்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஆனால் அவர்கள் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டார்கள் என்று கண்டறிந்து அறிவித்தார்கள்.
1805 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டப்படி ஒரு கணவன் தனது மனைவியை விற்பது கூடுமென்று இருந்தது. விலை எவ்வளவு  தெரியுமா? ஆறு பெனி ( penny) அதாவது அரை ஷில்லிங்க்( Schilling ) .
பெண்களைப் போல ஆண்களுக்கு நிம்மதி  தரக்கூடியவர்கள் எவருமில்லை. ஆனால் பெண்கள் உலகில் இல்லாவிட்டால் ஆண்களுக்கு வேறு நிம்மதியே தேவை இல்லை என்று ஒரு ஆங்கில நாடக ஆசிரியர் கூறினார்.

இஸ்லாத்துக்கு முன்பு வரை அரபியர்களின் பழக்கமும் பெண்ணடிமைத்தனம்தான். அவர்களுக்கு சொத்துரிமை இல்லை. நடைமுறை அடிப்படை உரிமைகள் இல்லை. பெண் குழந்தைகள்  பிறந்தால் உயிருடன் புதைத்த வன்கொடுமையையும் செய்தார்கள்.

பெண்களுக்கெதிரான அனைத்து அநியாயங்களையும் தட்டிக் கேட்கவும் அவர்களை ஆண்களுக்கு சரிநிகர் சமமானவர்கள்தான் என்று அறிவித்தது இஸ்லாம்தான். உடல்ரீதியாக உள்ள பெண்களின் தன்மைகளைப் பாதுகாக்கவே இஸ்லாம் பெண்களை கண்ணியப் படுத்தி தனித்துவம் தந்தது.  
“ ஆண் அல்லது பெண் , ஈமான் கொண்ட நிலையில் நற்கருமங்கள் செய்திருந்தால் அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள் “ ( 4: 124) என்று அல்லாஹ் தனது திருமறையில் வாக்குறுதி தருகிறான்.

மேலும்,
“ ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி , நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந் தோன்றிய இனத்தவரே” ( 3:195)

“ஆண்களுக்குப் பெண்கள் மீது இருப்பது போன்றே பெண்களுக்கும் ஆண்கள் மீது உரிமை உண்டு “( 2:228)

“பெண்களுக்குத் தொல்லை கொடுப்பதற்காகத் திருமண பந்தத்தில் வைக்காதீர்கள் “ ( 2:231)

“விவாகரத்து ஏற்பட்ட பின் பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை நீங்கள் தடை செய்யாதீர்கள்.” ( 2:232)

“உங்களின் துணையை உங்களின் அமைதிக்காக ( இறைவன் ) ஆக்கினான்” ( 7: 189) என்கிற அல்லாஹ்வின் வார்த்தைகள் பெண்கள் பற்றிய இஸ்லாத்தின் சட்டங்களாகும்.

பெருமானார் நபி ( ஸல்) அவர்கள், “ தனது மனைவியிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர் “    - என்றும் , “ தனது மனைவிக்கு ஊட்டும் ஒரு கவள உணவும் தர்மம்” என்றும்   கூறினார்கள்.

நபி ( ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் , மனிதர்களிலேயே நான் அழகிய முறையில் நடந்துகொள்ளவேண்டியது யாரிடம் என்று கேட்டபோது மூன்றுமுறைகள் தொடர்ந்து, உன்  தாயிடம் என்றும் நான்காவது முறை உன் தந்தையிடம் என்று கூறியதாகவும் ஹதீஸ்களில் படிக்கிறோம்.
இதுவே பெண்மை , தாய்மை பற்றி இஸ்லாத்தின் வெளிப்படையான   கண்ணோட்டமாகும்.

பெண்ணுரிமை, பெண்களின் சுதந்திரம் என்றெல்லாம் பேசும் பெண்ணுரிமைவாதிகள் பின்பற்றிப் பேணப்படவேண்டிய கருத்துக்களின் குவியலாக காணப்படுவதே இஸ்லாம். பெண்களுக்கான இஸ்லாமிய சட்டங்கள் பெண்களை பாதுகாக்கவே என்ற அடிப்படையில் ,  சர்வதேச பெண்களின் தினத்தில் இந்தக்  கருத்துக்களை உள்வாங்கி சிந்திப்போமாக.

இப்ராஹீம் அன்சாரி M.Com.,
எழுத்தாளர் - சமூக ஆர்வலர் - மகளிர் கல்லூரி துணை முதல்வர்

8 comments:

  1. வெளியில் இருக்கும் பெண்களை மதிக்காத மனிதன், வீட்டில் இருக்கும் பெண்களையும் மதிக்க மாட்டான்,எல்லோரும் பெண்களை மதிக்க வேண்டும், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பது, அவர்கள் வீட்டில் இருந்து தரப்பட வேண்டும். பெண் என்பதற்காக பெருமைப்பட வேண்டும். தன்னம்பிக்கையுடன் பெண்கள் அனைத்தையும் அணுக வேண்டும். பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்காதவாறு தங்களை வளர்த்து கொள்ள வேண்டும். அதற்கு கல்வி அவசியம். எனவே பெண்களே படிப்பை விட்டு விடாதீர்கள்! உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    இன்று ஞாயிற்று கிழமை எந்த சீரியலும் இல்லை மத்த நாளில் பெண்கள் அழுதுகொண்டு தான் இருப்பார்கள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    மிகவும் அருமையான விளக்கத்தோடு தொடுத்த ஆக்கம்.
    இன்று சர்வதேச பெண்கள் தினம்.

    அன்று 1969-ல் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம் “அன்னையும் பிதாவும்” கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் இடம் பெற்றிருந்த பல பாடல்களில் ஒரு பாடல் இப்படி தொடங்கும். “மலரும் மங்கையும் ஒரு ஜாதி, தன் மனதை மறைப்பதில் சரி பாதி”

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் இசையில் பி.சுசிலா அவர்கள் மெய் மறந்து பாடி இருப்பார்.

    அன்றைய பெண்களின் நிலைக்கும் இன்றைய பெண்களின் நிலைக்கும் படிப்பில் மட்டும் ஒரு படி மேலே ஏறி இருந்தாலும், நிலைகளின் கோணங்கள் கேள்விக் குறியாக இருக்கின்றது.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com

    ReplyDelete
  3. Super super
    Nice article
    Jasakkallah Khairan ibrahim ansari kaka

    ReplyDelete
  4. மகளிர் தினத்திற்காக பெண்களை சிறப்பிக்கும் அருமையான பதிவு.

    தாயும் பெண்ணே தாரமும் பெண்ணே ..!

    பெண் ..
    ----------.

    ஒவ்வொரு உயிரையும் இவ்வுலகுக்கு அறிமுகப் படுத்தும் உன்னத உறவு

    அப்படியானால் பெண்கள் போற்றப் பட வேண்டியவர்கள். ஆனால் தற்போது நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிரான சில சம்பவங்களை நினைக்கும்போது மனதிற்கு மிக வேதனையாகத்தான் உள்ளது

    ReplyDelete
  5. மிகவும் அருமையான விளக்கத்தோடு தொடுத்த ஆக்கம். நன்றி காக்கா! வாழ்துக்கள்!!!!!!!

    ReplyDelete
  6. வரலாற்றுகாலந்தொட்டேபெண்களின்துயரைவரிசைபடுத்திய இக்கட்டுரையாளருக்குவாழ்த்துகள்பாராட்டுக்கள்பெண்களின்உரிமைகளைமதிப்போம்.

    ReplyDelete
  7. கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.