அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அனுபவ அறிஞர்களே... எஞ்சோட்டு செட்டுகளே... இளவயசு மொட்டுகளே... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எங்கள் இளம்பிராய நினைவுகள் உங்கள் மனப்பதிவுக்காக சில படத்துளிகளாய்...
ஒவ்வொரு ஊரும் ஒரு வரலாற்று பெட்டகம் அதில் நம் அதிரையும் ஒன்று என்பதை எத்தனை பேர் இன்னும் மறக்காமல் உள்ளோம் அல்லது இளந்தலைமுறைக்கு எடுத்துச் சொல்லியுள்ளோம் என்ற பிரயாசையின் வெளிப்பாடே இப்புகைப்படத் இத்தொகுப்பு!
வாங்க! நேற்றைய அதிரையை சும்மா சுத்தி பாத்துட்டு திரும்புவோம்!!
அதிரையின் மைந்தர்கள் கனவிலும் நினைவிலும் மறக்கக்கூடாத மனிதருள் மாணிக்கம், வள்ளல், கல்வித் தந்தை சேக் ஜலாலுதீன் அப்பா அவர்களுக்காக ஏகன் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவர்களாக உள்நுழைவோம் வாருங்கள்....
ஆரம்பத்தில் கனரா பேங்க் இயங்கிய கட்டிடம் (மீராசா டாக்டர் கிளினிக் எதிர்புறம்) இதற்கப்புறம் தான் வான்பரீதா பில்டிங் மற்றும் இப்போதைய இடம்
உச்சி வெயில் நேரத்தில் சின்ன ஓய்வு
ஒரு நேரத்துல நமதூரின் பிசியான அச்சகங்களாக செயல்பட்ட ABC பிரிண்டர்ஸ் மற்றும் ரமானுஜம் அச்சகம் இன்றும் தன்னம்பிக்கையோடு தாக்குப்பிடித்து கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு கொண்டுள்ளன
நம்ம ஊருக்குள்ளும் விவசாயம் நடந்துருக்குங்க! சானா வயல், சவுக்குக் கொல்லை, இன்றைய MSM நகர் ஏரியான்னு நம்ம ஊரின் உள்ளும் புறமும் நடந்த விவசாய பூமி எல்லாம் பொண்ணுக்கு வீடு என்ற வரதட்சணை கொள்ளையாலே கான்கிரீட் காடுகளா போச்சுங்க! (விவசாயத்துக்கு தண்ணியில்லைங்கிறது இன்னொரு காரணம்)
மேலத்தெருவில் முதன்முதலில் பர்மா தேக்கு கொண்டு கட்டப்பட்ட முதல் மெத்தை வீடும் அதன் இன்றைய மிச்சங்களும் (குட்டப்புறா வீடு)
இன்றைக்கும் மட்டப்பா வீடு என்று அழைக்கப்படும் பழைய மாடி வீட்டின் எஞ்சிய சுவர் (மேலத்தெரு)
அன்னாள் நமதூர் KMC கல்லூரி மாணவர்களின் NCC படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்த சுவர் இன்று பயனற்று போய் நிற்கிறது (செடியன்குளம் இறக்கம்)
நமதூர் ரயில்வே ஸ்டேசனை ஒட்டியுள்ள லெவல் கிராஸிங்கை தாண்டினால் 50 மீட்டர் தொலைவில் ஒரு பிரமாண்ட தகரக் கொட்டகை இருந்ததுங்க! இதை கஸ்டம்ஸ் ஆபிஸ், சால்ட் ஆபீஸ் என்று சொல்லுவாங்க எது சரின்னு தெரியல ஆனா காலப்போக்குல நம்மூரு ஆளுங்க காத்து வாங்க தான் பயன்பட்டுச்சு, தகர கட்டிடத்தை தேடிப்போன எனக்கு இந்த திறந்தவெளிதாங்க தென்பட்டுச்சு. எந்த பழைய இரும்பு வியாபாரி எடுத்துட்டு போனாருன்னு தெரியல!
அந்த நாளாயிலே கால்நடையா நம்ம வூரு கடற்கரைக்கு போனவங்க கண்டிப்பா இந்தப் பாலத்துல உக்காந்து இளைப்பாரம போயிருக்க மாட்டாங்க.
ஒரு காலத்துல உப்பளங்கள் நிறைந்த ஊருங்க, இப்ப ஏதோ கொஞ்சம் பாக்கியிருக்கு இவைகளும் இரால் பண்ணைகளாக மாறுமுன் நம் எதிர்கால தலைமுறைக்கு புகைப்படமாய் காட்ட சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
சுனாமிலேயும் மாறாதது நம்ம வூரு சேத்துக் கடலுங்க, நாங்களும் இந்த சேத்து கடல்ல கூட்டாளிகளோட வரிமட்டி புடிச்சி வெளையாண்டுருக்கோம்ல. (நம்ம பக்கத்து கிராமம் கீழத்தோட்டத்துல சுனாமி அலைகள் மணலை கொண்டு வந்து வெளியே தள்ளி அழகிய பீச்சாக மாத்திட்டு போச்சுங்க)
ஒரு காலத்துல குளியல் துறையா இருந்த காலேஜ் மூணு கண்ணு பாலம் இப்படி புதர் மண்டி கிடக்கிறது மனச பிசையுதுங்க!
ராஜாமடம் ரோடு (மகிழங்கோட்டை) முன்னாள் ரயில்வே ஸ்டேசன்
நம்ம ஊருல ரயில் காணப்போயி கொஞ்ச நாள் தான் ஆவுது ஆனா அதுக்கு முன்பே நம்ம பக்கத்து கிராமங்களின் ரயில்வே ஸ்டேசன்களே காணமப்போனது எத்தன பேருக்கு தெரியும்?
அதிரைக்கும் முத்துப்பேட்டைக்கும் இடையிலே மஞ்சவயல், தம்பிக்கோட்டை, சுந்தரம், மறவக்காடுன்னு பல ஸ்டேசன்கள் இருந்துச்சுங்க, அதே மாதிரி அதிரைக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையிலே (மகிழங்கோட்டையில்) ராஜாமடம் ரோடு ஸ்டேசன் இருந்ததுங்க, இந்த ரயிலடிலேருந்து மேலத்தெரு கீழத்தெரு மக்கள் அதிகமா முத்துப்பேட்டைக்கு பயணம் செஞ்சிருக்காங்க! அதன் இன்றைய மிச்சம் இது!
CMP வாய்க்காலில் மகிழங்கோட்டை லெவல் கிராஸிங் அருகேயுள்ள ஒற்றை நாவல் மரம்
நம்ம ஊரு CMP வாய்க்காலில் தண்ணி வந்த காலத்துல இருபுறமும் 50க்கு மேற்பட்ட நாவல் மரங்கள் காய்த்து குலுங்கின, அதில் ஏறி பறிக்கவும், பொறுக்கவும் பல தடவை போய் வந்த எங்கள் இளவயது கால்கள் இன்று எத்தன மரங்கள் மிச்சமிருக்குன்னு தேடிப்போய் ஏமாந்ததை என்னான்னு சொல்றது!
CPM லேன் VKM ஸ்டோர் அருகேயுள்ள கிணறு ஒரு காலத்துல குடிநீர் துறைய ஜொலிச்சதுங்க ஆனா இப்ப?????
அழிவின் விழிம்பில் உள்ள அழிஞ்சி மரமும் பழமும்
அதிரையர் சீண்டாத இந்த அழிஞ்சிப்பழங்கள மூட்டை மூட்டையாய் பறித்து சென்னையில் விற்று சம்பாதித்த ஆங்கிலப்பா என்ற அன்றைய இளைஞரின் திறமையை கண்டு இன்றும் வியக்கேன்.
அன்றைய சிறுவர்கள் தெருவொர கபுருகளுக்கு கந்தூரி கூடு செய்ய, பள்ளி விடுமுறை நாட்களில் சர்பத் கடைகள், சிறிய மிட்டாய்கள் கடைகள் போட, விளையாட்டு குடிசைகள் போட இந்த அழிஞ்சி மர போத்துகளை தாங்க வெட்டிக்கிட்டு போவாங்க!
லெட்சோட்டை / லெட்சகொட்டை
கிலுவை
முள்ளு முருங்கை
(இந்த ஒத்த மரத்தை தவிர வேறு எதுவும் என் கண்ணுல படல)
வேலிகளே சுற்றுச்சுவர்களாய் இருந்த காலத்துல பார்த்த மரங்கள இனி அருங்காட்சியகத்துல கூட பார்க்க முடியாத நிலமை. காசும் கட்டடங்களும் வந்த பின்ன ஒரு புகைப்படம் எடுக்க வேலி காத்த மரங்கள தேடியலஞ்சத நெனச்சா... என்னாத்த போங்க!
மேலத்தெரு சைடு மரைக்கா குள கரையில இருந்த குடிநீர் கிணறு இது, இதுவும் காலப்போக்குல தூர்ந்து குப்பை மேடாகிடுச்சி.
அந்த காலத்துல தென்னந்தோப்புகளுக்குள்ள இருந்த குடிநீர் கிணறுகளில் ஒரு குடம் நல்ல தண்ணி அள்ளனும்னா ஒரு கொடம் மரைக்கா குளத்து தண்ணிய கொண்டு போய் தென்னமரத்து தூர்ல ஊத்தனுமுங்க! இலவச மின்சாரம் இல்லாத நாளுங்க அதெல்லாம்.
சரியா இந்த எடத்துல நியூ சினிமாங்கிற பேர்ல இங்கே ஒரு டூரிங் டாக்கீஸ் கொட்டாய் 5 வருசம் இருந்ததுங்க! அப்ப நம்ம பிலால் நகரு பேரு நண்டு வெட்டி வெப்பலுங்க!
இந்த இடத்துல தான் சிறுவர்களின் நாவில் நிறைந்த ஜமால் ஐஸ் கம்பெனி இயங்கியது
கூடு இருக்கு ஆனா சிட்டுக்குருவி எங்கே? கண்ணுக்தெரிந்த அழிவு!
இது ஒரு காலத்துல பேருல மட்டும் ரோடு இருந்த சேதுரோடுங்க! இப்போ ECRல ரோடு இருக்கு சேது தான் போன இடம் தெரியல.
அதிகாலை 5 மணி, காலை 8 மணி, பகல் 1 மணி, மாலை 6 மணி மற்றும் இரவு 9 மணி என தவறாமல் தினமும் 5 முறை முழங்கிய சங்கிற்கே சங்கு ஊதியாகிவிட்டது, இனி அது காட்சிப் பொருள் மட்டுமே.
அதோ நடுவுல அந்த ஆட்டோ தெரியுற எடத்துல தாங்க அண்ணா சிலை ஒண்ணு ரோட்டுக்கு நடுவுல இருந்தது, அவர சுத்தி இருந்த கட்சிக் கொடி கம்பங்கள்லாம் ரோட்டோரம் ஒதுங்கிக் கொள்ள அவர் போன எடந்தாங்க தெரியல, அதுவும் நல்லது தான்.
அறந்தாங்கிலிருந்து வந்த என் நண்பர் ஒருத்தரு 'பவித்ரா திருமண மண்டபம்' பக்கத்துல வெயிட் பண்றதா சொல்ல பேந்த பேந்த முழுச்சிக்கிட்டு போய் தேடுனா அட நம்ம 'ஜக்கரியா தியேட்டரு' புது அவதாரம் எடுத்தது அப்பதான் தெரிஞ்சது.
சுரைக்கா கொல்லை, சால்ட் லேன் எதிரேயிருந்த போலீஸ் காலனி கிரவுண்ட் முக்கால்வாசி வீடாக மீதம் கால்வாசி இப்படி கம்பி வேலிக்குள் சிறைவாசியாக, இமாம் ஷhபி பள்ளி மாணவ சிறுவர்களாய் பலமுறை கால்பந்து விளையாடியது மட்டும் இன்னும் பசுமையான நினைவில்.
சுரைக்கா கொல்லையில் செயல்பட்ட, அந்த மஞ்சள் நிற தொடர் கட்டிடமாக இருந்த சால்ட் ஆபீஸ தேடிப்போன எங்களுக்கு இந்த காலி மனையும் அறிவிப்பு பலகையுமே அதன் முந்தைய இருப்பின் சாட்சிகளாக தென்பட்டன.
இப்ப மக்தூம் பள்ளி இருக்கிற எடத்துல தான் நம்ம ஊரு ரிஜிஸ்டர் ஆபீஸ் இருந்ததுங்க மேலும் அதன் வாசல்ல இருந்த முரட்டு பலா மரம் அந்த இடத்துக்கே அப்படி ஒரு அழகுங்க!
இந்த சந்துக்குள்ள தாங்க நம்ம ஊரு வானிலை ஆராய்ச்சி மையம் இருந்தது மேலும் கடலைமிட்டாய் கம்பெனி ஒன்றும் செயல்பட்டு வந்தது (80 காசு கொடுத்து ஒரு பாக்கெட் கடலை மிட்டாய் வாங்கின அதில 120 காசுக்கு இருக்கும், கடலை மிட்டாய் ஒன்று 5 காசுங்க)
இது பேரு தொட்டி அதாவது ஆட்டுத் தொட்டிங்க, ஆடு மாடுகள் நம்ம ஊரு வயல்ல போய் மேய்ந்தால் வயல்காரன் ஆட்டை பிடித்துக் கொண்டு வந்து இந்த ஜெயில்ல விட்டுட்டு போயிடுவாரு அப்புறமா ஆட்டுக்காரங்க ஆட்டை ஊரேல்லாம் தேடிட்டு கடைசிய இங்க வந்து பார்த்த உள்ளே நம்ம ஆடும் இலை மேஞ்சுகிட்டு நிக்கும் அப்புறம் என்ன எத்தன நாளு ஆடு உள்ளே இருந்துச்சோ அத்தன நாளுக்குன்னு கணக்கு பண்ணி தெண்டம் கொடுத்துட்டு ஆட்ட கூட்டிக்கிட்டு போயிரலாமுங்க!
இன்னைக்கு காய்கறிகடையாகவும், இட்லிக்கடையாகவும் தெரியுற இந்த கட்டடத்துக்குள்ள தாங்க நம்ம ஹனீப் டாக்டர் ஆரம்ப நிலையில கிளினிக் நடத்துனாங்க, எந்த நேரத்துலயும் ஓடி வந்து உதவிய அவரையும் அவரது அன்றைய நர்ஸ்களையும் இன்றைக்கும் நன்றியோட நினைக்கிறோமுங்க!
இந்த வணிக வளாகம் இருந்த எடத்துல தாங்க நம்மவூரு பெரிய போஸ்ட் ஆபீஸ் இருந்தது (நம்ம மக்கள் இன்னும் மறக்காம பழைய போஸ்ட் ஆபீஸ் தெருன்னு சொல்றது ஆறுதலான விஷயங்க) மேலும் இதன் சைடுல தான் குதிரை வண்டி ஸ்டாண்ட் இருந்தது, ஆட்டோக்கள் அதிரைக்குள் தலைகாட்டிய கொஞ்ச நாளிலேயே குதிரை வண்டித் தொழில் கூண்டோடு நொடிச்சுப் போச்சுங்க!
அரைக்கிடா, அத்தாஸூ, சாகுல் ஹமீது, ஐத்துருஸ், அத்தாஸூ மகன் என பலர் இங்கே குதிரை வண்டி ஓட்டிகளாக அதிரையர்களுக்கு சேவை செய்துள்ளனர்.
துருக்கி தொப்பி, மலேசியா தொப்பி, மாப்ள தொப்பி, துணி தொப்பி, மதரஸா தொப்பி என வகை வகையா தயாரிச்சு ஊருக்கே தொப்பி போட்டு அழகு பாத்தவரு கடையின் இன்றைய நிலை!
வெளிநாடுவாழ் நெசவுத்தெரு முஹல்லாவாசிகளின் தூய எண்ணத்தால் உருவான அதிரையின் முதற் சங்க கட்டிடம். இன்றைக்கும் சென்று போன அந்த நன்மக்களின் கனவை நிறைவேற்றிக் கொண்டு கம்பீரமாக உள்ளது.
இளம் வயதில் நம்ம மார்க்கெட்டுக்கு மீனு வாங்க போனவங்க மனசுல இன்னும் மறையாம இருக்கிற அந்த பழமையான கிணத்து மேல தானுங்க இந்த வாட்டர் டேங்கும் பைப்பும் இருக்கு!
தனிப்பட்ட ஓருவரின் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மோதல் மேலத்தெருவுக்கும் கரையூர் தெருவினருக்கும் இடையே கலவரமாக, விளைவு காவல்துறையினர் கண்மூடித்தனமாக சுட கீழத்தெருவை சேர்ந்த சகோதரன் நூருல் ஹசன் ஷஹீதாக்கப்பட்டான்.
தவறிய இன்னொரு குண்டில் சிதறிய தக்வா பள்ளியின் சுவர் காவல்துறையின் காட்டு தர்பாரை இன்னும் இரத்த சாட்சியாய் சொல்லிக் கொண்டுள்ளது.
(இந்தியன் பேங்க் அருகில், இமாம் ஷhபி பள்ளியின் பின்புறம்)
நம்ம ஊருல 40 வருடங்களுக்கு முன் மருத்துவ சேவை செய்த இக்ராம் டாக்டர் இந்த ஏரியாவுல தாங்க இருந்தாரு, இன்னும் எத்தன பேரு அவர ஞாபகத்தில வச்சிருக்கோம்?
ஆரம்ப இமாம் ஷhபி நர்சரி & பிரைமரி ஸ்கூல் இந்த வீட்ல தாங்க துவங்கியது (இந்த பச்ச பயிண்ட் வீடு பழைய வீட இருக்கும் போது) கிட்டங்கி தெருல பள்ளிக்கூடம் தொறந்து எங்களுக்கெல்லாம் அறிவொளி தந்த குழந்தை சேக்காதி அவர்கள் கொஞ்ச காலத்திற்கு முன் தான் காலமானாங்க, இன்னாலில்லாஹி வ இன்னஇலைஹி ராஜிவூன் அன்னாரின் பாவங்களை மன்னித்து மறுமையில் சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திக்கின்றோம்.
கீழத்தெரு புதுக்குடியில் இயங்கிய 'நங்கூரம் மார்க்' சேமியா கம்பெனி இன்று வீடாக, இது கயிற்றுக்கடை ரஜாக் அவர்களின் சொந்தக் கம்பெனி
மேலத்தெரு காவண்ணா அவர்கள் சொந்தமாக நடத்திய 'காவண்ணா ஆயில் பார் சோப்' கம்பெனியும் இன்று வீடாக மாறிவிட்டது.
கடைத்தெருவில் காவண்ணா அவர்கள் நடத்திய ஹோட்டல் (ரொட்டிக்கடை) அந்தக் காலத்தில் ஆட்டுக்கால் பாயாவுக்கு மிகவும் புகழ்பெற்றது.
400 ஆண்டுகால குத்பா பள்ளியில் தொழுத அனுபவமும் அதன் கட்டமைப்பும் இன்னும் கண்ணுள்ளே குளிர்ச்சியாய், இப்பள்ளியை நிர்மாணித்த மகுதூம் சின்ன லெப்பை ஆலிம் செய்கு அப்துல் காதிர் அவர்களுக்கு அல்லாஹ் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயரிய சொர்க்கத்தை வழங்குவானாக!
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஏமாற்றம், ஏன்?
இன்னும் உண்டு ஏராளம் என்றாலும் எல்லாவற்றை என் ஓருவனால் மட்டும் கணக்கிட முடியாது மேலும் என் விடுமுறையும் அதை அனுமதிக்காது என்பதால் நீங்கள் ஓவ்வொருவரும் தங்களுடைய அனுபவ நினைவலைகளை இன்றைய இளைய அதிரையர்களுடன் பகிர்ந்து கொள்ள முன் வர வேண்டும் என்ற வேண்டுகோளுடனும் பகீர்விர்கள் என்ற நன்நம்பிக்கையுடனும் நிறைவு செய்கிறேன்.
ஜமால் மற்றும் ஹாரித் ஒத்துழைப்புடன்
அருமையான புகைப்படத்துடன் பழைய அதிரையின் ஞாபகத்தினையும்,விளக்கத்தினையும் அளித்த நண்பர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
ReplyDeleteமேலும் இத்துடன், ஊருக்கே உரிய எம்ஜிஆரால் திறந்துவைக்கப்பட்ட மேலத்தெரு பெரிய நீர்தேக்க தொட்டி,நான் படித்த சாதுலிய்யா நர்சரி பள்ளி,பழைய காவல் நிலைய கட்டத்தில் புதிய காவல் நிலையம், பழைய ஆர்.ஈ அலுவலகம், பழைய தனலெட்சுமி வங்கி அலுவலகம், ஊருக்கு பெருமை சேர்க்கும் ரஹ்மானிய மற்றும் ஸலாஹிய்ய மதரஸாக்கள்,ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அரசு மருத்துவமனை,காட்டுப்பள்ளி அருகே இருக்கும் புளியங்கொல்லை,வண்டிப்பேட்டை பெட்ரோல்பங்க், அதைவிட தக்வா பள்ளியில் இருந்து காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி வரை கடகட ஓட்டை ரோட்டில் சைக்கில் ஒட்டியது, காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் டிபன் பாக்ஸ் டைமர் வெடிகுண்டு பீதியால் ஸ்கூல் லீவு விட்டது. பல சுவரஸ்யமான நிகழ்வுகள்.
அருமையான ஒரு பதிவு சகோதரர் அதிரையின் பழைய பசுமையான இடங்களை சுற்றி நமக்கு அறிய தந்தமைக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமைலும் நற்கூலி வழங்குவானாக ஆமீன்.
ReplyDeleteஇதுபோல அன்று நாம் குளித்த குளங்களின் பட்டியல் இட்டால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்.
அருமையான புகைபடங்கள் பழைய நினைவுகள்.அதிரை நியூஸ் வாழ்த்துகள்....
ReplyDeleteஅருமை பாராட்டுக்கள்
ReplyDeleteலீவுலே ஊர் வந்தும் ரெஸ்ட் எடுக்கலையே :)
ReplyDeleteபதிவும் - படங்களும் அருமை
அருமையான புகைபடங்கள் பழைய நினைவுகள்.அதிரை நியூஸ் வாழ்த்துகள்....Reply
ReplyDeleteகாலங்கள் கடந்தாலும் நமதுரின் பழய இடங்களை கண்ட மகிழ்ச்சி நம்மை நாமதுருக்கே அழைது சென்றது இந்தப்பதிவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
ReplyDeleteIndha padhuivirku jazakallah khairan
ReplyDeletePalaya imam shafi ..street...nabagam....
ReplyDeletesattendru maarudhu vaanilai....
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteஎனது அருமை தம்பி அமீன் அவர்களே அருமையான புகைப்படங்கள் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்ற பாடலின் வரிகள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது நான் 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்து விடு முறையில் ஊறுக்கு வந்தாலும் கூட நான் இத்தனை இடங்களையும் பார்க்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. ஆனால் ஒரு ரூபாய் கூட செலவே இல்லாமல் மிக அழகாக தம்பி அமீன் சுத்தி காட்டி விட்டார் இதற்க்கு நான் முதலி நன்றி சொல்லிக்கொள்கிறேன், எல்லா இடங்களையும் எழுதியிருந்தீர்கள் மேலத்தெருவில் உள்ள வாட்டர் டேங்கை எடுக்க மறந்து போய் விட்டது என்று நினைக்கிறேன் பரவாயில்லை அடுத்த தொடரில் விடுபட்ட இடங்களையெல்லம் போடுவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு உறு துனையாக செயல்பட்ட தம்பி மார்களுக்கும் எனது மிக்க நான்றி உங்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.
என்று அன்புடன்
அதிரை அல்மாஸ்
தம்பி அமீன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteஅடுத்த பதிவில் நமது மக்கள் பயன்படுத்தி இன்று மறைந்து போன சில பொருள்களையும் தேடிப் படம் பிடித்துப் போடுங்கள்.
உதாரணமாக, மரவை என்று அன்று கலரிகளில் , இன்றைய எவர் சில்வர் சகன் வரும் முன்பு உபயோகிப்போம். அதில் பூ படங்கள் எல்லாம் இருக்கும்.
அதே போல் படிக்கான், பாக்கு வெட்டி, வெற்றிலைப் பெட்டி, , சில வீடுகளில் இரும்புப் பெட்டி, சிலர் வீட்டு தலை வாசல் கதவுகள் கூட அழகான வேலைப்பாடுகளாக இருக்கும். அந்தக் கதவுகளின் சாவி- அதைத் திறப்பு என்று சொல்வோம். - நல்ல வெயிட்டாக அழகாக இருக்கும்.
செடியன் குளத்தில் துணிகள் துவைப்பதற்காக ஒரு பெரிய மரத்தின் கட்டை கிடக்கும். அதை காண ஆசையாக இருக்கிறது.
அழிஞ்சிப் பழத்தை காணும் போது, குளிக்கபபோகிறேன் என்று அழிஞ்சிப் பழம் பறித்து சாப்பிட்டுவிட்டு நேரம் கழித்து வந்ததால் என் வாப்பாவிடம் வாங்கிய விசிறி மட்டை அடி நினைவுக்கு வருகிறது. முதுகு இன்றும் வலிக்கிறது.
ஓல்ட் இஸ் கோல்ட் . நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.
அருமையான பகிர்வு.
ReplyDeleteபடங்களும் படத்துடன் எழுதப்பட்டுள்ள குறிப்புக்களும் பழங்காலத்துக்கு இழுத்துச் சென்று விட்டது. அக்கால நினைவுகள் கண்களில் சுழலுகின்றன.அது ஒரு பொற்காலம். அதில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
OLD IS GOLD
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சூடான வெயில் நேரத்தில் குளுமையான பதிவு, பழையது என்றும் பழையது ஆனாலும் அதுமாதிரி இனி வருமா என்ற ஏக்கம் இருக்குதே அது மிகவும் கொடுமையானது, இன்று பறவைகளே திண்டாடும்போது மனிதன் எம்மாத்திரம்?
நம்ம ஊருக்கு சாவி கொடுத்து இயங்கும் சுவர் கடிகாரம் முதன் முதலில் யார் வீட்டுக்கு வந்தது?
நம்ம ஊருக்கு அம்பாசிடர் கார் முதன் முதலில் யார் வீட்டு வந்தது?
நம்ம ஊரில் முதன் முதலில் இருசக்கர வாகனமான சைக்கிளை இயக்கிவர் யார்?
தெரிந்தால் பதில் தாருங்கள், தெரியாவிட்டால் பதிலை நான் தருவேன்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
அருமையான பதிவு
ReplyDeleteஅருமையான புகைபடங்கள் பழைய நினைவுகள்.அதிரை நியூஸ் வாழ்த்துகள் படங்களும் அருமை
ReplyDeleteMeendum meendum indha thogupai paarka thonugiradhu....
ReplyDeleteThanks for remember fast life. .....
ReplyDeletedo you have remember ABTA vin azahiya sattaikal
அருமையான பதிவு உங்கள் பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்..,
ReplyDeletepakirnthu kondamaiku nandri
ReplyDeletemikayum arumai
ReplyDelete