.

Pages

Wednesday, February 28, 2018

சவுதியில் வாகனம் ஓட்டுனர் மொபைலில் பேசுவதை கண்காணிக்க நவீன ஏற்பாடு!

அதிரை நியூஸ்: பிப்.28
சவுதி அரேபியாவில் எதிர்வரும் 05.03.2018 திங்கட்கிழமை முதல் வாகனம் ஓட்டும் போது மொபைலில் பேசிக் கொண்டு செல்வோரை நவீன மின்னனு சாதனம் மூலம் கண்காணிக்கப்படுவர் என்றும் பிடிபடுவோர் அதிகரிக்கப்பட்ட அபராதமான முதன்முறைக்கு மட்டும் 150 ரியால் அபராதம் செலுத்த வேண்டும்.

இரண்டாவது முறையாக பிடிபட்டால் 300 ரியால் அபராதத்துடன் 24 மணிநேரம் உள்ளிருக்க வேண்டும். அதேபோல் சீட்பெல்ட் அணியாதவர்களும் அபராதம் விதிக்கப்படுவர் என சவுதி போக்குவரத்து போலீஸ் (முரூர்) தெரிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

சவுதி விசிட் விசா அதிகப்பட்சமாக 180 நாட்கள் மட்டுமே நீட்டிக்க முடியும்!

அதிரை நியூஸ்: பிப்.28
சவுதி அரேபியாவிற்கு விசிட் விசாக்களில் வருபவர்கள் அதிகப்பட்சம் 180 நாட்களுக்கு மட்டுமே நீட்டித்து தங்கிக் கொள்ளலாம். விசிட் விசா காலாவதியாவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக விசிட் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். கடைசியாக வழங்கப்படும் எக்ஸிட் விசா ஸ்டாம்பிங் கட்டணமின்றி செய்து தரப்படும் இந்த விசா 60 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

இந்தப் புதிய விதியால் வெளிநாட்டு ஊழியர்களின் துணைவர்கள் மற்றும் இரத்த உறவுகள் யாரும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டு குறிப்பிட்ட தவணைக்குள் திரும்ப வராவிட்டால் அவர்கள் மீது மீண்டும் உள்நுழைய தடை விதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ்ஜிற்கு முறையான அனுமதியின்றி வருபவர்கள் மீண்டும் சவுதிக்குள் நுழைய 10 ஆண்டுகளுக்கு தடைவிதிக்கப்படுவார்கள். கடந்த வருடம் சுமார் 12 மில்லியன் விசாக்கள் ஹஜ், உம்ரா யாத்ரீகர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 30 மில்லியனாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்னொரு புறம் இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் பணிகளும் நடந்து வருகின்றது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

அமீரகத்தில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற இந்தியர் விமான நிலையத்தில் பிடிபட்டார்!

File Image
அதிரை நியூஸ்: பிப்.28
அமீரகம், அபுதாபியின் புறநகர் பகுதியான மப்ரக் பாலத்திலிருந்து (Mafraq Bridge towards Dubai) துபை நோக்கிச் செல்லும் சாலையில் ஒரு இந்தியர் அனுமதிக்கப்படாத இடத்தில் கம்பி வேலியில் ஏறிக்குதித்து சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த வாகனத்தில் அடிபட்டு சிகிச்கைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்த எதிர்பாரா விபத்தை ஏற்படுத்திய இன்னொரு இந்தியர் தான் ஓட்டி வந்த வாகனத்தை விபத்து நடந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு தப்பித்துச் சென்றார். எனினும் அபுதாபி போலீஸார் விபத்து நடைபெற்ற 2 மணிநேரத்தில் அவரை மடக்கிப் பிடித்தனர்.

அவர் அபுதாபி விமான நிலையத்திலிருந்து பறப்பதற்கு இன்னும் 30 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தில் விபத்துப் பகுதியிலிருந்து சம்பந்தப்பட்டவர்கள் தப்பிச் செல்வது கடும் குற்றமாகும். பிடிபட்டவருடைய விஷயத்தில் அடிபட்டு இறந்தவர் மீது குற்றம்  இருக்கையில் வம்படியாக தப்பிக்க நினைத்து தன்னைத்தானே சிக்கவைத்துக் கொண்டுள்ளார் என்றே தோன்றுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

ஓமனில் மார்ச் 22 முதல் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அளவை கண்காணிக்க புதிய சட்டம்!

அதிரை நியூஸ்: பிப்.28
எதிர்வரும் 2018 மார்ச் 22 ஆம் தேதி முதல் பெரிய அளவில் பிற நாடுகளுக்கு பணம் அனுப்பும் அல்லது எக்ஸ்சேஞ்சுகளில் மாற்றும் பணத்தை கண்காணிக்கவும், அது எதற்காக அனுப்பப்படுகிறது, எவ்வாறு அந்தப் பணம் திரட்டப்பட்டது என்பது பற்றியும் Enhanced Due Diligence என்ற சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை Anti-Money Laundering law சட்டத்தின் கீழ் நீட்சியாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்தின் மூலம் 400 ஓமன் ரியால்களுக்கு (சுமார் 1,040 டாலர்) மேல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும் அனைவரும் பதில் சொல்லியாக வேண்டும்.

உங்கள் சம்பளத்திற்கு மேலதிகமாக அனுப்பப்படும் பணம், போனஸ், அட்வான்ஸாக பெறப்பட்ட சம்பளம் மற்றும் வங்கிகளில் பெறப்பட்ட லோனாக இருந்தாலும் சரியே, இந்தப் பணம் எங்கிருந்து எவ்வாறு கிடைத்தது என்பதிற்கான காரணத்தை ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும்.

Sources: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 

தஞ்சை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து சுற்றுலாத் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு சுற்றுலாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (28.02.2018) தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதிலும், சுற்றுலா பயணிகள் வருவதிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.  தமிழக அரசின் உத்தரவின்படி பள்ளி மாணவ மாணவயிர்களுக்கு சுற்றுலா தலங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதம் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு கல்வி மாவட்டத்திற்கு 50 மாணவ மாணவியர் வீதம்  அரசு பள்ளியில் நன்கு பயிலும் 150 மாணவ மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு நாள்  சுற்றுலாவாக இன்று சுற்றுலா தலங்களான பெரிய கோவில், அரண்மனை, கல்லணை, திருச்சி அண்ணா கோளரங்கம் ஆகியவற்றை சுற்றி காண்பிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் ஒரு புத்தக பை மதிய உணவு, சிற்றுண்டி ஆகியவை சுற்றலாத்துறை சார்பில் வழங்கப்பட்டது.  இரண்டு பேருந்துகளில் சென்ற பள்ளி மாணவ மாணவியர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழியனுப்பி வைத்தார்.

முன்னதாக சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா குறித்த வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ஆண்ணாதுரை பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதிரை அரசு மருத்துவனையில் டாக்டர் ஹாஜா முகைதீனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.28
அரசு மருத்துவராக கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்தவர் டாக்டர். எஸ். ஹாஜா முகைதீன். இவர், இன்று (பிப்.28) புதன்கிழமை  அரசு மருத்துவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, இவரது மருத்துவச் சேவையைப் பாராட்டி, பணி நிறைவு பாராட்டு மற்றும் வழியனுப்பும் விழா அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன் தலைமை வகித்து வாழ்த்திப் பேசினார்.

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் கெளசல்யா, டாக்டர் கார்த்திகேயன், டாக்டர் சுதாகர், டாக்டர் ஷெரீன், மருத்துவமனை பணியாளர்கள் சீதா, ராஜேஸ்வரி, ராஜலெட்சுமி, ஜெயபாரதி, வினோதகன், பன்னீர் மற்றும் சமூக ஆர்வலர் எம்.நிஜாமுதீன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள். முடிவில், டாக்டர். எஸ். ஹாஜா முகைதீன் ஏற்புரை வழங்கினார். இவ்விழாவில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பணியாளர்கள், ஊழியர்கள், ஊர் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 

Tuesday, February 27, 2018

தஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் 2018-19ன் கீழ் பயன் பெற கல்வி நிலையங்களை தேசிய கல்வி உதவித்தொகை  இணைய தளத்தில் வருகின்ற 31-03-2018க்குள் இணைக்க வேண்டும்  என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு. அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 12ஆம் வகுப்பு, வாழ்க்கை தொழிற்கல்வி (Vocational), ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல் மற்றும் மருத்துவம், எம்ஃபில், ஆராய்ச்சிப்படிப்பு ஆகியவற்றை பயிலும் கிறித்துவர் - இஸ்லாமியர் - புத்தமதத்தினர் - சீக்கியர் - ஜைன் மற்றும் பார்சி மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு. பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேசிய கல்வி உதவித்தொகை இணையம் (National Scholarship Portal) www.scholarships.gov.in வாயிலாக மத்திய அரசின் மு்லம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இக்கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற அனைத்து கல்வி நிலையங்களும் மேற்காஹணும் இணைய தளத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும், எனவே. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு. அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களும் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் பதிவு செய்துள்ளதையும், பயனீட்டாளர் குறியீடு (USER ID) பெறப்பட்டுள்ளதையும் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  AISHE / UDISE எண் மற்றும் கல்வி நிலையத்தின் பெயர் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பின் அவ்விவரத்தினை உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

AISHE எண் பெறாத கல்லுரிக் கல்வி நிறுவனங்கள் மத்திய அரசின் www.aishe.nic.in என்ற  இணைய தளத்தில் ஆன்லைன் மு்லம் பதிவு செய்து பெறலாம் எனவும். பள்ளிகளை பொறுத்தவரை UDISE எண்ணிற்கு முதன்மைக் கல்வி அலுவலரை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது,

இணையத்தில் கல்வி நிறுவனத்தினை பதிவு செய்வது தொடர்பாக கல்வி நிலைய முதல்வர் - தலைமையாசிரியர் - டீன் கோரிக்கை கடிதம். (சுய ஒப்பமிட்டது). தலைமையாசிரியர் - முதல்வர் - டீன் பெயர். மொபைல் எண் (அவசியம்).  AISHE / UDISE எண். கல்வி நிலையத்தின் முழு முகவரி மற்றும் இதர விவரங்களுடன் (கோரப்படும் பட்சத்தில்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கல்வி நிலையங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ( www.scholarships.gov.in ) பதிவு செய்வதற்கான கடைசி தேதி 31-03-2018 எனவும், 31-03-2018 வரை இணையதளத்தில் பதிவு செய்துள்ள கல்வி நிலையங்கள் மட்டுமே 2018-19 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற இயலும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை  தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் ரூ.35.39 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுமானப் பணி ஆய்வு!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதி மன்ற கட்டடம் கட்டப்பட்டு வருவதை செய்தியாளர் பயணத்தில் இன்று (27.02.2018) பொதுப்பணித்துறை  ( கட்டடம், கட்டுமானம், பராமரிப்பு ) பிரிவு உதவி செயற்பொறியாளர் பி.செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உதவி செயற்பொறியாளர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
தஞ்சாவூரில் கோர்ட் ரோட்டில் செயல்பட்டு வரும் நீதிமன்றங்கள் இட நெருக்கடி காரணமாக தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் சுமார் 13 ஏக்கர் 5693 சதுரடிகள் பரப்பளவில் தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என 1,55,916 சதுரடி பரப்பளவில் ஒருங்கிணைந்த நீதி மன்ற கட்டடம் கட்டப்பட்டு வருகின்றது.  தரை தளமானது 63,270 சதுரடி பரப்பளவில், நில அபகரிப்பு நீதி மன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் 1, 2, 3, நீதிமன்றங்கள், மோட்டார் வாகன விபத்து நீதிமன்றங்கள் 1, 2, (தனி மாவட்ட நீதிமன்றம்), மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் 1,2 ஆகியவையும், முதல் தளத்தில் 29,376 சதுரடி பரப்பளவில் குடும்ப நல நீதிமன்றம், முதன்மை சார்பு நீதி மன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், முதன்மை மாவட்ட நீதி மன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம் 1,2 சிறப்பு நீதி மன்றம் (அத்தியாவசியப் பண்டங்கள்), விரைவு நீதி மன்றம் (இ.கோர்ட்),  மகளிர் நீதி மன்றங்களும், மேலும்,  6 எண்ணிக்கையிலான மாடிபடி கட்டுகள், 4 எண்ணிக்கையிலான மின்தூக்கிகள், 18 எண்ணிக்கையிலான நீதிபதிகளின் கார்கள் நிறுத்த வாகனக்கூடம், பொது  மக்கள் கார்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமும் அமைக்கப்படவுள்ளது. இக்கட்டடத்தில் நீதிமன்றங்கள் அனைத்தும் குளிர் சாதன அறையாக அமைக்கப்படவுள்ளது. இப்பணியானது 31.01.2019-க்குள் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இந்நிகழ்ச்சியின் போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம்,
பொதுப்பணித்துறை ( கட்டடம், கட்டுமானம், பராமரிப்பு ) பிரிவு உதவி செயற்பொறியாளர் பி.செந்தில்குமார், உதவி பொறியாளர் எம்.ரகு, ஒப்பந்தகாரர் எஸ்.ஈஸ்வரன் மற்றும் பலர் உடன் உள்ளனர்.

குவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கான மருத்துவக் கட்டணங்கள் மறுஆய்வு!

அதிரை நியூஸ்: பிப்.27
குவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த ஆய்வின் அடிப்படையில் புதிய கட்டண விகிதங்களை குவைத் அரசே நேரடியாக வெளியிடும், முன்பு போல் பாராளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் கட்டணங்கள் அமையாது என்றும் குவைத் சுகாதாரத் துறை அமைச்சர் ஷேக். டாக்டர் பாஸில் அல் ஸபா தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் கூற்றுப்படி, ஒரு புதிய ஆய்வுக்கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வெளிநாட்டினருக்கு விதிக்கப்படும் மருத்துவ கட்டண விபரங்கள் ஒப்பீடு செய்யப்படும். மீளாய்வின் போது மருத்துவமனைகள் மற்றும் பாலிகிளினிக்குகளின் கருத்துக்களும் பெறப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Source: Times of Kuwait
தமிழில்: நம்ம ஊரான் 

சவுதி ரியாத், ஜித்தாவில் நவீன போக்குவரத்து பஸ்கள் இயக்கம்!

அதிரை நியூஸ்: பிப்.27
சவுதி ரியாத், ஜித்தாவில் நவீன பொது போக்குவரத்து திட்ட பஸ்கள் இயக்கம்

சவுதியின் முக்கிய மாநகரங்களான ரியாத் மற்றும் ஜித்தாவில் 'ஹத் அல் பலத்' எனப்படும் புறநகர் பகுதிகளில் 'ஹாப்லாஸ்' எனப்படும் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது இவ்வருட ஆரம்பத்தில் அமைச்சரவை குழுவின் முடிவில் ரத்து செய்யப்பட்டு மாற்று ஏற்பாடாக அரசின் நவீன பொது போக்குவரத்து பேருந்துகளை மட்டும் இயக்க உத்தரவிடப்பட்டு இருந்தது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

ஏற்கனவே மினிபேருந்துகளை இயக்கி வந்தவர்கள் விரும்பினால் சாப்ட்கோ நிறுவனத்தில் (அரசு பொது போக்குவரத்து கழகம்) மாதச் சம்பளத்தின் கீழ் பணியாற்ற இணைந்து கொள்ளலாம் அல்லது சமூக மேம்பாட்டு வங்கியில் கடன் பெற்று தங்களுக்கு ஏற்ற புதிய வியாபாரம் ஒன்றை துவக்கிக் கொள்ளலாம். சாப்ட்கோ (Saptco) நிறுவனத்தில் சேர விரும்பவில்லை என்றாலோ அல்லது வங்கியில் கடன் பெற்று புதிய தொழில் தொடங்க விரும்பவில்லை என்றாலோ அரசின் உதவித்திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (செவ்வாய்)முதல் அரசின் நவீன பொது போக்குவரத்து நிறுவன பேருந்துகள் மினிபேருந்து இயக்கப்பட்ட ரூட்டுகளில் இயங்கத் துவங்கியுள்ளன, இதன் டிக்கெட் 3 ரியால்கள் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய போக்குவரத்து வசதி சம்பந்தமாக சவுதியர்களும், வெளிநாட்டினரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

அமெரிக்காவில் ஆளூர் ஷா நவாஸ்க்கு AAF சார்பில் சிறப்பான வரவேற்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: பிப்.27
அமெரிக்காவில் அதிகமான அதிரை பிரமுகர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த 2012 ஆம் ஆண்டு அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பு (AAF) தொடங்கப்பட்டது.  கால் ஆண்டிற்கு ஒரு முறை அனைவரும் குடும்பத்துடன் ஒன்று கூடி தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதுடன் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை செய்வது வழக்கம். குறிப்பாக பெருநாள் பண்டிகைகள், விடுமுறை தின காலங்களில் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்துவரும் ஆளூர் ஷா நவாஸ் சந்திப்பு நிகழ்ச்சி, அதிராம்பட்டினம் அமெரிக்கன் கூட்டமைப்பின் (AAF) சார்பில், ப்ரீ மவுண்ட் கோகோநட் பார்டி ஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, 'தொழிலதிபர்' ஜபருல்லாஹ் தலைமை வகித்தார். ஏ.ஏ.எஃப் துணைத் தலைவர் சலீம் வரவேற்றுப் பேசினார். இதில், சிறப்பு அழைப்பாளராக ஆளூர் ஷாநவாஸ் கலந்துகொண்டு, 'இந்திய அரசியலில் இஸ்லாமியர்களின் பங்கு' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில்,  ஏராளமான அதிராம்பட்டினம் பிரமுகர்கள் கலந்துகொண்டு, ஆளூர் ஷா நவாஸ்க்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
 

துபை விமான நிலைய ரன்வே மேம்பாட்டு பணிக்காக 2019 ஆம் ஆண்டில் 45 நாட்கள் ஒரு ரன்வே மூடல்!

அதிரை நியூஸ்: பிப்.27
துபையில் ரன்வே பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக அடுத்த வருடம் 45 நாட்களுக்கு மூடப்படுகிறது

துபை சர்வதேச விமான நிலையத்தில் வடக்கு மற்றும் தெற்கு என 2 பிரதான ரன்வேக்கள் உள்ளன. இவற்றில் தினமும் சுமார் 1,100 விமானங்கள் இறங்கி, ஏறிச் செல்கின்றன. இதன் பராமரிப்பு பணிகள் வாராந்திர அடிப்படையில் செய்யப்பட்டு வருகின்றன என்றாலும் பாதுகாப்பு, சேவை மற்றும் திறனை மேம்படுத்துவதற்காக ரன்வேக்கள் மற்றும் அது தொடர்பிலான உட்கட்டமைப்புக்கள் முற்றிலும் புதிதாக சீரமைக்கப்படும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இதுபோல் வடபுற ரன்வேக்கான பெரும் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதை தொடர்ந்து தென்புற ரன்வே மட்டுமே இயங்கியது. அக்கால கட்டத்தில் விமான சேவைகள் குறைக்கப்பட்டதுடன் சில சேவைகள் துபை வேல்டு சென்ட்ரல் எனப்படும் மக்தூம் விமான நிலையத்திற்கும், ஒரு சில ஷார்ஜா விமான நிலையத்திற்கும் தற்காலிக திருப்பிவிடப்பட்டன.

தற்போது தென்புற ரன்வேயில் பெரும் சீரமைப்பு பணிகளை எதிர்வரும் 2019 ஏப்ரல் 16 முதல் மே 30 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு மூடப்படுவதன் காரணத்தால் வடபுற ரன்வே மட்டுமே இயங்கும் என்பதால் விமான சேவைகளை குறைக்கவும் மாற்றுத் திட்டங்களில் ஈடுபடவும் அவகாசம் கிடைத்திடும் வகையில் ஒரு வருடத்திற்கு முன்பாகவே அனைத்து ஏர்லைன்ஸூகளுக்கும் முன்னறிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த தென்புற ரன்வே புதுப்பித்தல் பணிகளுக்காக சுமார் 60,000 டன் தார் (அஸ்பால்ட்), 8,000 மெட்ரிக் டன் காங்கிரீட், 800 கி.மீ நீளத்திற்கான கேபிள்கள், 5,500 ரன்வே விளக்குகள் ஆகியவை நவீன, பொருளாதார, சுற்றுச்சூழலுக்கு ஏதுவான தொழிற்நுட்பத்தின் கீழ் இப்பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Emirates 247 / WAM
தமிழில்: நம்ம ஊரான் 

மரண அறிவிப்பு ~ சபியா அம்மாள் (வயது 78)

அதிரை நியூஸ்: பிப்.27
அதிராம்பட்டினம், காலியார்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கா. அபூபக்கர் அவர்களின் மனைவியும், சாகுல் ஹமீது, காதர் பாட்சா ஆகியோரின் தாயாரும், முகமது ராவூத்தர், ரஹ்மான்கான், முகமது சாலிகு ஆகியோரின் பாட்டியாருமாகிய கட்ட சபியா அம்மாள் (வயது 78) அவர்கள் பழஞ்செட்டித் தெரு இல்லத்தில் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (27-02-2018) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Monday, February 26, 2018

அதிராம்பட்டினத்தில் டாக்டர் ஹாஜா முகைதீன் அரசுப் பணி நிறைவு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.26
அரசு மருத்துவராக கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர் டாக்டர். எஸ். ஹாஜா முகைதீன். இவர், வரும் பிப். 28ந் தேதி அரசு மருத்துவப் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், இவரது மருத்துவச் சேவையைப் பாராட்டி, பணி நிறைவு பாராட்டு விழா அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் கே.செந்தில், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஏ. குமார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர். டி. ராணி அசோகன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் திருவாரூர் மாவட்டத் தலைவர் டாக்டர் வி.காரிமுத்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்  தஞ்சை மாவட்டச் செயலர் டாக்டர் ஏ.ராஜேந்திரன், பொருளாளர் டாக்டர் ஏ.வினோத், திருப்பூர் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் வெங்கடேஷ், திருவாரூர் அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் லெனின், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் டாக்டர் டி. சுரேஷ் பாபு, மதுரை மாவட்டச் செயலாளர் டாக்டர் செய்யது, தஞ்சை அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் கார்த்திகேயன், ஐஎம்ஏ தஞ்சை மாவட்டச் செயலளார் டாக்டர் அமிர்தகனி,  ஐஎம்ஏ பட்டுக்கோட்டை தலைவர் டாக்டர் பத்மநாபன், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன், டாக்டர். சீனிவாசன், டாக்டர் கெளசல்யா, டாக்டர் கார்த்திகேயன், டாக்டர் சுதாகர், டாக்டர் ஷெரீன், டாக்டர் ஹக்கீம், முன்னாள் தலைமை ஆசிரியர் ஏ. மகபூப் அலி, முன்னாள் துணைச் சேர்மன ஏ.பிச்சை, தொண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.சேகு நெய்னா, பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.செய்யது அலி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

விழா முடிவில் டாக்டர் எஸ். ஹாஜா முகைதீன் ஏற்புரை வழங்கினார். இதில்,  பணியின் போது, ஆதரவு, ஒத்துழைப்பும் வழங்கிய மருத்துவ அதிகாரிகளுக்கும், நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இவ்விழாவில், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள், அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் உட்பட 800 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

விழா துளிகள்:
1. டாக்டர். எஸ். ஹாஜா முகைதீன் மகள்கள் டாக்டர் எச்.இர்ஷத் நஸ்ரின், டாக்டர். எச்.ஹுமைரா சப்ரின் ஆகியோர் தனது தந்தையின் சிறந்த பண்புகள் பற்றி விழா மேடையில் நினைவு கூறியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

2. டாக்டர். எஸ். ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவி எச். ஜொஹ்ரா பேகம், தனது கணவரின் ஓய்வில்லா உழைப்பு பற்றி கூறியபோது அனைவரும் வியந்தனர்.

3. டாக்டர். எஸ். ஹாஜா முகைதீன் உறவினப் பெண்கள் கண்ணீருடன் வாழ்த்துப்பாடல் பாடினர்.

4. எம்.எல்.ஏ சி.வி சேகர் தனது வாழ்த்துரையில், அதிரை பேரூர் முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை அவர்களுக்கு ஏற்பட்ட மின்விபத்தின் போது துரிதமாக செயல்பட்டு, ஆபத்து கட்டத்திலிருந்து மீட்டதை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

5. டாக்டர். எஸ். ஹாஜா முகைதீன் அவர்கள் சார்பில், வாழ்த்துரை வழங்கிய சிறப்பு விருந்தினர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு செய்யப்பட்டது.

டாக்டர். எஸ். ஹாஜா முகைதீன் பற்றிய சிறு குறிப்பு:
கடந்த 1987 ஆம் ஆண்டு முதல்  எங்கள் ஊர் அதிராம்பட்டினத்தில் மருத்துவ சேவையை தொடங்கி இன்று வரை மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் அரசு  உதவி மருத்துவர் பணி. இக்காலக்கட்டத்தில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்களுக்கு அவசர சிகிச்சைகள் அளித்துள்ளார். இதனால், பல நோயாளிகள் தொலை தூரங்களுக்கு  செல்லாமால் உள்ளூரிலேயே சிகிச்சை பெற்று குணமடைந்து இருக்கின்றனர். மாரடைப்பு  மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி  சிகிச்சை அளித்து அவர்களை அபாய கட்டத்திலிருந்து மீட்டெடுத்துள்ளார். அவசர  சிகிச்சைகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கக்கூடியவர். குறிப்பாக இரவு நேரங்களில்  பல நோயாளிகளுக்கு  சிகிச்சை அளித்துள்ளார்.  அதேபோல், தனது நோயாளிகளின் உயர் சிகிச்சைகளுக்கு சரியான மருத்துவரை பரிந்துரைப்பது இவரது சிறப்பு அம்சம்.

இதுபோன்ற பல்வேறு சேவைகளைப் பாராட்டி, அதிராம்பட்டினம் சமூக நல அறக்கட்டளை மற்றும் அதிரை நியூஸ் இணையதள ஊடகம், கடந்த 2016  ஆம் ஆண்டு, அதிராம்பட்டினத்தில் நடந்த கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில், சிறந்த மருத்துவச் சேவைக்கான விருதினை,  தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பதிவாளார் திரு. பாலசுப்பிரமணியன் வழங்கி பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.