.

Pages

Wednesday, April 22, 2020

தஞ்சாவூர் மாவட்டத்தில் முழு வீச்சில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் (முழு விவரம்)

அதிரை நியூஸ்: ஏப்.22
கொரோனா நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய நோய்த்தொற்றாக பரவி பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர அரசு துறைகள் ஒருங்கிணைந்து 17,749 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 9345336838 (வாட்ஸ்அப்), 04362-271695, 1077 (கட்டுப்பாட்டுஅறை) ஆகிய தொலைபேசி எண்களின் மூலம்  பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தல், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டள்ளவர்களை கண்காணித்தல், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ வசதிகள் மற்றும் உணவுப் பொருட்கள் தடையின்றி  கிடைப்பதை உறுதி செய்தல், புள்ளிவிவரங்கள் சேகரித்தல், சமூக இடைவெளியை கண்காணித்தல், 144 தடை உத்தரவு அமலை கண்காணித்தல் ஆகிய பணிகள் கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற 1104 புகார்கள் மற்றும் சந்தேகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1200 படுக்கைகள், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 300 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 900 படுக்கை வசதிகள் என மொத்தம் 2400 படுக்கை வசதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதுதவிர, ராசா மிராசுதார் மருத்துவமனை வளாக சி.இ.எம்.ஒ.என்.சி கட்டிடத்தில் 200 படுக்கைகள், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் 1100 படுக்கைகள், மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 155 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவவனங்கள் மற்றும் அதன் விடுதிகளில் 10383 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் இருபத்தி இரண்டு 108 ஆம்புலன்ஸ்கள், 2 இரு சக்கர ஆம்புலன்ஸ்கள், 78 தனியார் ஆம்புலன்ஸ்கள் என மொத்தம் 102 ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் சமுக நலத்துறை மூலம் வயோதிகர்களுக்கு கொரோனா தொற்று பரவுதல் தொடர்பாக ஏற்படும் மனஅழுத்தங்களுக்கு தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனைகள் 044 - 28590804 மற்றும் 044 - 28599188 ஆகிய எண்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 8173 நபர்கள், வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 909 நபர்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து திரும்பிய 438 நபர்கள் என மொத்தம் 9520 நபர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 8173 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு காலம் முடிந்து, இவர்களுடன் சேர்த்து மீதமுள்ள நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த எட்டு நபர்கள்,  திருவையாறு பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள், திருவோணம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள், அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பத்து நபர்கள், அம்மாபேட்டையைச் சேர்ந்த நான்கு நபர்கள், தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள் உட்பட 49 நபர்களுக்கு இதுவரைக்கும், இன்று (22.04.2020) ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 3 நபர்களுக்கும், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கும், அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கும் என 5 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை உறுதி செய்யப்பட்ட 54  நபர்களில் நான்கு நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட 54 நபர்கள் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள 1,63,368 வீடுகளைச் சேர்ந்த 6,93,447 நபர்களுக்கு இதுவரை காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி குறித்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் யாருக்கும் கொரோனா நோய்த்தொற்று அறிகுறி கண்டறியப்படவில்லை.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 49 நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் 128 பேருக்கு  ஸ்வாப் பரிசோதனைக்காக  பரிசோதனை மையத்திற்கு மாதிரி அனுப்பி வைக்கப்பட்டு, இதுவரை பரிசோதனை முடிந்த 108 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லையெனவும், 20 நபர்களுக்கு பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்த 490 பேர்களில் இதுவரை பரிசோதனை முடிந்த 412 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லையெனவும், 78 நபர்களுக்கு பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும்,ராஜா மிராசுதார் மருத்துவமனையிலும், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 1659 நபர்களுக்கு ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. 1365 நபர்களுக்கு அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது. 290 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் 374 நடமாடும் வாகனங்கள், வேளாண்மைத் துறை  சார்பில் 43 நடமாடும் வாகனங்கள், தோட்டக்கலைத் துறை சார்பில் 15 நடமாடும் வாகனங்கள், கூட்டுறவுத்துறை  சார்பில் 5 நடமாடும் வாகனங்கள், வேளாண் வணிகத்துறை  சார்பில் 9 நடமாடும் வாகனங்கள் ஆகியவை மூலம்; பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் வீடுகளின் அருகில் கொண்டு சென்று விற்பனை செய்யயப்பட்டு வருகிறது.

கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 46 தற்காலிக சில்லறை காய்கறி கடைகள் திறந்தவெளி மைதானங்களில் செயல்பட்டு வருகிறது. இவ்விடங்களில் செயல்படும் காய்கறிகடைகளில் பொதுமக்கள் சமுக இடைவெளியை கடைப்பிடிக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 125 சமுதாய சமையற்கூடங்கள் மூலம்  மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட 14455 நபர்கள் தினந்தோறும் உணவருந்தி வருகின்றனர்.

பொது விநியோக திட்ட பொருட்கள் மற்றும் பால், காய்கறி, மருந்து, மளிகைப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கொண்டு செல்வதற்கு ஏதுவாக 2402 வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதிசீட்டு வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற தவிர்க்க முடியாத காரணங்களினால் மாவட்ட எல்லையை தாண்டி செல்ல வேண்டியவர்களுக்கு www.thanjavur.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 8611 பேருக்கு தஞ்சாவூர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வெளியே செல்லமுடியாத வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 4094 பேருக்கு 14 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான இருப்பிட வசதி, உணவு, மருத்துவ வசதி மற்றும் அத்தியாவசிய வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள பதிவு செய்த 6238 தன்னார்வலர்களின் விவரங்கள் பெறப்பட்டு, தேவையின் அடிப்படையில் அவர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 12386 நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, 12635 நபர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவை மீறிய காரணத்தினால் 7242 இருசக்கர வாகனங்கள் மற்றும் 173 நான்கு சக்கர வாகனங்கள்; காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திடும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளில் தங்களின் பங்களிப்பு இருக்க வேண்டுமென்று விரும்பும் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம்.

"Account Name - DISTRICT COLLECTOR , THANJAVUR, Account Number – 378401000000444,  Branch - Indian Overseas Bank , District Collectorate - Thanjavur, IFSC - IOBA0003784, MICR - 613020024 " என்ற வங்கிக்கணக்கில் விருப்பமுள்ளவர்கள் நிதியுதவி செய்யலாம்.

கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.