.

Pages

Friday, April 10, 2020

பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: பொதுமக்கள் பாராட்டு!

தஞ்சாவூர் ஏப்.10-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட  பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெரியநாயகிபுரம் ஊராட்சி, ஆவணம் குக்கிராமப் பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு காவல்துறை, மருத்துவத்துறை, வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களால் வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அனைத்து ஊராட்சிகளிலும் காலை, மாலை இரு வேளைகளிலும் கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல் போன்ற பணிகள் தினசரி நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் தூய்மைக் காவலர்கள் 157 பேரும்,
கிருமி நாசினி தெளிப்பதற்கு ஆப்பரேட்டர்கள் 310 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணிக்கு பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு மற்றும் லைசால் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர் கூறுகையில், 
"தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு முகக் கவசம், கையுறைகள், காலணிகள் ஆகியவை ஊராட்சி மன்றத்தாலும், ஊராட்சி ஒன்றியத்தாலும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.

அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவர்களால் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் அச்சிட்டு அவற்றை வீடு வீடாக வழங்குகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஒன்றிய அலுவலகத்திற்கு அளிக்கப்பட்ட 41,000 எண்ணிக்கையிலான விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் ஊரடங்கை பின்பற்றுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த  52 பிரச்சார வாகனங்களின் மூலம், அனைத்து ஊராட்சிகளிலும் தொடர்ச்சியாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் 260 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு அதன்படி பொதுவிநியோக கடைகளில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு உணவு பொருட்கள் வழங்குதலில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவோர், பொது இடங்களில் கூட்டமாக இருப்போர் மற்றும் தேவையின்றி வாகனங்களில் வருவோரை தடுத்திடும் பொருட்டு ஊராட்சி மன்றமும் காவல் துறையும் இணைந்து 55 தன்னார்வலர்களை நியமித்து அதன்படி ஊராட்சிகளை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். 20 ஊராட்சிகளில் பிரதான சாலை தவிர எஞ்சிய 58 சாலைகள் அடைக்கப்பட்டு அதன்படி போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

நகர்ப்புறத்தை சாராத உள்ளடங்கிய ஊராட்சிகளுக்கு காய்கறிகள் வழங்குவதற்கு 8 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தங்குதடையின்றி காய்கறிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து இவ்வூராட்சி பகுதியில் வருகை புரிந்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பு முழுமையாக முடிக்கப்பட்டு வருவாய்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புப்படை தன்னார்வலர்கள் மூலமாக வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பல ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

திருவோணம் ஊராட்சி ஒன்றியம் ஊரணிபுரம் பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் வாட்டாத்திக்கோட்டை ஊராட்சியில் 07.04.2020 அன்று காலை முதல் மாலை வரை வாகனத்தின் மூலம் ஒரு வாரத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் காய்கறிகள் உட்பட வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் 14.04.2020 வரை அனைத்து கடைகளும் 100 சதவீதம் அடைக்க முடிவெடுத்து அதன்படி 08.04.2020 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு பணிகளில் ஊராட்சி ஒன்றிய அனைத்து நிலை அலுவலர்கள்,  அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், அனைத்து ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறார்கள்" இவ்வாறு ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சடையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தவமணி ஆகியோர் உடனிருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.