.

Pages

Monday, April 20, 2020

பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு!

அதிரை நியூஸ்: ஏப்.20
அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அடையாள அட்டையை ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வீட்டிலிருந்து வெளியே செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி அடையாள அட்டையை ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், மீறுபவர்களின் அனுமதி அடையாள அட்டை பறிமுதல் செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் எச்சரித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்திடும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கிட வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மூன்று வண்ணங்களில் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வாரத்தில் இருநாட்கள் மட்டுமே வெளியில் வர முடியும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்கிட வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அடையாள அட்டையை, வாரத்தில் இரு தினங்களில் ஒரு நாளுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.

மேலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான அனுமதி அடையாள அட்டையை குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துபவரின் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையின் எண்களை அனுமதி அடையாள அட்டையில் பதிவிட வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு தங்களின் வீடுகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ள கடைகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

நாளை (21.04.2020) முதல் காவல்துறை மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் மூலம் அனுமதி அடையாள அட்டையை சோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற உள்ளது. ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அதிகமாக உள்ள கடைகளுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்றால், அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும், அனுமதி அடையாள அட்டையை ஆதார் அட்டை விவரங்கள் பதிவு செய்த நபரை தவிர்த்து, வேறு நபர்கள் பயன்படுத்தினால், அனுமதி அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியே வருவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும்.

கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்), 04362 - 271695, 1077 (கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.