தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே ஆர்.கே நகர் சட்ட மன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏவின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.
இதில், அவர் கலந்துகொண்டு பேசியது;
அம்மா ஆட்சியில் இருந்த வரை, தமிழகத்தில் நாம் அனைவரும் நிம்மதியாக, தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக, மதநல்லிணக்கத்துடன் எல்லோரும் சகோதர, சகோதரிகளாக இங்கு வாழ்கின்ற சூழல் நிலவி வந்தது. தமிழகத்தின் நலனுக்காக, தமிழகத்தின் மதநல்லிணக்கத்திற்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை செய்தார்கள். தஞ்சை டெல்டா விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கெயில் திட்டம், மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, இறுதி மூச்சு உள்ள வரை இப்பகுதியில் வர தடை போட்டார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அம்மாவின் மறைவிற்கு பின்பு, இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் இது அம்மாவின் ஆட்சி, அம்மாவின் ஆட்சி என மூச்சுக்கு நூறுமுறை கூறிக்கொள்பவர்கள் மத்திய அரசின் கைக்கூலியாகவும், அவர்களின் கிளை அரசாங்கமாகவும் இங்கு நடத்திக்கொண்டிருப்பதுதான் நம்மை வேதனையடையச் செய்கிறது.
மத்தியில் ஆள்பவர்கள் நம்மையெல்லாம் பெரும்பான்மை என்றும், சிறுபான்மை என்றும் பிரித்து பார்த்து, பெருபான்மை மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக, சிறுபான்மை மக்களுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை காரணம் காட்டி, பல சட்டங்களை இங்கு கொண்டு வருகிறார்கள். முத்தலாக் தடை சட்டத்தை அவர்கள் எப்படியாவது இங்கு நிறைவேற்றி விட வேண்டும். அதன்மூலம், சிறுபான்மையின மக்களுக்கு துன்பம் தருகின்ற திட்டங்களை தீட்டுவதன் மூலம், பெரும்பான்மையின மக்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என தவறாக கணக்கு போடுகிறார்கள். உண்மையில், மத சார்பற்ற இந்திய துணைக்கண்டத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வருகிறோம். நிச்சயம் ஆட்சியாளர்கள் வருகின்ற தேர்தலில் படுதோல்வியை அடைவதன் மூலம் தாங்கள் செய்த தவறுகளை நிச்சயம் உணர்வார்கள்.
இஸ்லாமியப் பெண்களின் பாதுகாப்பு என்று சொல்லிக்கொண்டு, 'ஆடு நனைகிறது, ஓநாய் கண்ணீர் வடிக்கிறது' என்ற கதையாக மத்தியில் ஆளுகின்றவர்கள் இஸ்லாமியப் பெண்களின் நலனுக்காக முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வருவதாக நம்மிடம் கதை அளக்கிறார்கள். உண்மையில், இச்சட்டத்தின் மூலம், இஸ்லாமியப் பெருமக்களின் மதச் சுதந்திரம் பாதிப்படைகிறது. அதுமட்டுமல்லாமல், தேவையில்லாமல் கிரிமினல் சட்டம் மூலம் யாரை வேண்டுமானாலும் 3 ஆண்டுகள் சிறையில் தள்ளுகின்ற அளவிற்கு தேவையற்ற இந்த சட்டத்தை அவர்கள் மீது திணிக்கப் பார்க்கிறார்கள். நிச்சயம் சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் அரசியலையும் தாண்டி தோளோடு தோல் நின்று, சமுதாய நல்லிணக்கத்திற்காகவும், நிம்மதியாக அவர்கள் வாழ்வதற்கு என்றென்றும் நாங்கள் உறுதுணையாகப் இருப்போம் எனக்கூறிக்கொள்கிறேன்' என்றார்.
- ஏ.சாகுல் ஹமீது
- மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
Very good approaching...
ReplyDelete