.

Pages

Saturday, April 4, 2020

கரோனா: வதந்தி மற்றும் மதரீதியான செய்திகளை தவறாக பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை!

அதிரை நியூஸ்: ஏப்.04
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து சமுதாய பிரதிநிதிகளுக்கான விளக்கக் கூட்டம் 03.04.2020 அன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில அரசு மற்றும்  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக சமுதாய பிரதி நிதிகளுக்கு எடுத்து கூறினார்.  கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி மற்றும் மதரீதியான செய்திகளை தவறாக பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

பின்னர், கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் பேசியதாவது:-
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்திரவின்படி 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.  கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்ப்பதற்கு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.  தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் 8 எல்லைகளும் மூடப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கெரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவில் வருவாய் துறை, பொது சுகாதாரத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் இதர துறை அலுவலர்களை கொண்ட 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.  மேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 ( வாட்ஸ் அப்) 04362 – 271695, 1077 (கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கொரோனா தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் சந்தேகங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் குழு, புகார் கண்காணிப்பு குழு, தஞ்சாவூர் மாவட்டத்தில் தனிமைபடுத்தப் பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் குழு, அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பான குழு, மருத்துவ குழு, புள்ளி விபரங்களை சேகரிப்பு குழு, சமூக இடைவெளி குழு, உணவு வழங்கல் குழு, அமலாக்க குழு ஆகிய குழுக்கள் கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வருகின்றன.  மாவட்ட அளவிலான குழு, கோட்ட அளவிலான குழு, வட்டார அளவிலான கண்காணிப்பு குழு, நியாயவிலைகடைகள் அளவிலான கண்காணிப்பு குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு, கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1200 படுக்கைகள், அரசு மருத்துவமனைகளில் 300 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 900 படுக்கைகள் என மொத்தம் 2400 படுக்கைகள் தனிமைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

மேலும், தஞ்சாவூரில் தஞ்சாவூர் ரயில்வே மருத்துவமனையில் 28 படுக்கைகள் மருத்துவக்கல்லூரி வளாக நர்சிங் கல்லூரியில் 150 படுக்கைகள், ராசாமிராசுதார் மருத்துவமனை வளாக சி.இ.எம்.ஒ.என்.சி. கட்டித்தில் 200 படுக்கைள், கரந்தை சமுதாயக்கூடத்தில் 50 படுக்கைகள், செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரியில் 1100 படுக்கைகள், தஞ்சாவூர்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காத்திருப்பு கட்டிடத்தில் 20 படுக்கைகள் என 6 மாற்று இடங்களில் 1548 படுக்கைகளும், கும்பகோணத்தில் 3 பள்ளிக்கூடங்களில் 40 படுக்கைகள், கண் வளாகத்தில் 40 படுக்கைகள் என 4 மாற்று இடங்களில் 80 படுக்கைகள், பட்டுக்கோட்டையில் 6 சமுதாயக் கூடங்களில் 120 படுக்கைகள், என்.ஹெச்.எம்-ல் 20 படுக்கைகள் என 7 மாற்று இடங்களில் 140 படுக்கைகள் என தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 மாற்று இடங்களில் 1768 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.  அதைப்போன்று, வல்லத்தில் அமைந்துள்ள குடிசைமாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்துவதற்காக அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  இது தவிர, 155 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அதன் விடுதிகளில் 10383 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் இருபத்தி இரண்டு 108 ஆம்புலன்ஸ்கள், 2  இருசக்கர ஆம்புலன்ஸ்கள் 78, தனியார் ஆம்புலன்ஸ்கள் என மொத்தம் 102 ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வயோதிகர்களுக்கு கொரோனா தொற்று பரவுதல் தொடர்பாக ஏற்படும் மன அழுத்தங்களுக்கு தொலைபேசி வாயிலாக தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை மூலம் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதால், 044-28590804 மற்றும் 044-28599188 ஆகிய எண்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம்.
பால், காய்கறி, மருந்து, மளிகைப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கொண்டு செல்வதற்கு ஏதுவாக 479 வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 பொது இடங்கள், 8 சோதனைச் சாவடிகள், 26 அரசு அலுவலகங்கள் என மொத்தம் 59 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 39361 நபர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 6025 நபர்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 447 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பொது விநியோக திட்டத்தின்கீழ் ஏப்ரல் 2020 மாதத்திற்கு 8344  டன் அரிசி முன் நகர்வு செய்யப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து நியாய விலைக்கடைகள் மூலம் 31.03.2020 முதல் வீடு வீடாக சென்று வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு நாளொன்றுக்கு 100 அட்டைகள் வீதம் 1185 நியாவிலைக்கடைகளில் 6,52,648 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 நிவாண தொகையும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகிய அத்தியாவசிய பொருட்கள் 02.04.2020 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், கும்பகோணம் வட்டத்தில் 6 வார்டுகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000/- நிவாரண தொகையும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவை கொரோனா கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுக்கள் மூலம் அவரவர் வீட்டிற்கே வாகனங்கள் மூலம் விநியோகம் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாகனங்களில் கொரோனா நோய்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக PVC யினால் வடிவமைக்கப்பட்ட சிறப்பு குழாய் மூலம் பொருட்கள் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

மேலும், மாவட்டம் முழுவதும் அவரவர் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வீட்டிற்கே கொண்டுவந்து அளித்திடவும், அத்தியாவசிய பொருட்களை Door Delivery செய்யவும் 479 அனுமதி பாஸ்கள்  பெரிய மளிகை கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் நகராட்சி பகுதியில் உள்ள வார்டுகளில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையினால் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் வீடுகளின் அருகில் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட்களில் கொரோனா நோய்தடுப்பு பணியாக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மாவட்டத்தில் 42 தற்காலிக சில்லறை காய்கறி கடைகள் திறந்தவெளி மைதானங்களில் 01.04.2020 முதல் செயல்பட்டு வருகிறது.  இவ்விடங்களில் செயல்படும் காய்கறி கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை 1 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை கடைப்பிடிக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறயதற்காக இதுவரை 2553 நபர்கள் மீதும், அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்தியதற்காக ஒருநபர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  144 தடை உத்தரவை மீறிய காரணத்தினால், 1340 இருசக்கர வாகனங்கள் மற்றும் 49 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1389 வாகனங்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிறமாவட்டங்களுக்கு திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக மட்டும் மாவட்ட எல்லையை தாண்டி செல்ல வேண்டியவர்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வழியாக மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்.

கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்களுக்கு உதவி செய்தல் ஆகியவற்றில் ஈடுபடுத்திக்கொள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்கள் தங்களின் விபரங்களை தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை இணையதளத்திலும்,  www.thanjavur.nic.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.  பதிவு செய்யும் தன்னார்வலர்களுக்கு தேவையின் அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படும்.

144 தடை உத்தரவின் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வெளியேற இயலாத நிலையில் உள்ள 1964 வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் 24 சுற்றுலா பயணிகளுக்காக 14 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இருப்பிட வசதி, உணவு, மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஸ்வரன் அவர்கள், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர், டாக்டர். குமுதாலிங்கராஜ், சுகாதாரப்பணிகள் துறை இயக்குனர் டாக்டர். ரவீந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி, தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி. வேலுமணி, கும்பகோணம் கோட்டாட்சியர் வீராசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.