.

Pages

Friday, October 27, 2017

வெந்தனலில் விளையாடும் கந்துவட்டி!

வெந்தனல்  சாக்காட்டில் விளையாடும்
தோள் எங்கள் வெற்றித் தோள்கள்
போர்முரசு கொட்டிய
சங்கத்தமிழன்!

வடமொழி இந்தித்திணிப்பை  -65ல் 
எதிர் கொண்ட தமிழக இளைஞர்
வியட்நாமியருக்கு சளைத்தவர் இல்லை
என எடுத்துக் காட்டி

அக்கினி  ப்பிழம்பினை 
மாலையாக மார்பினில் அணைத்து
செத்து மடிந்தனர் சிவலிங்கம்
சின்னசாமி போன்றோர்

அவர்கள் தியாகம் வீண்
போகவில்லை-இந்தித்
திணிப்பு தடுத்து
நிறுத்தப் பட்டது ஓர் வரலாறு!

'கூலியுயர்வு கேட்டான் அத்தான்
குண்டடி பட்டு செத்தான் அத்தான்'-என
குரல் கொடுத்து -67ல் கோட்டையைப்
பிடித்தார் அறிஞர் அண்ணா

கூலியுயர்வு கேட்டதிற்காக
கீழ்வெண்மணி  44
விவசாயத் தொழிலாளர்கள்
வெந்தனலில் வேகவிட்டனர் -68ல்

'வேல் கொண்டு இதயம் பாய்ச்சிய'
செய்தி என்று வேதனைப் பட்டார்-அண்ணா
விடிவு- நில உச்ச வரம்பு, உழுவனுக்கே
நில உரிமைச் சட்டம் விடியலானது!

இங்கிலாந்து எழுத்தாளர் ஷேக்ஸ்பியர்
எழுதிய,'மெர்ச்சண்ட் ஆப் வெனீஸ்' -என்ற
 நாடகத்தில் ‘சைலாக்கின்’ கந்துவட்டி
 காவியம்  அறியாதோர் உண்டோ!

கந்துவட்டி  தடைச் சட்டம் பல வண்ணத்தில் வந்தாலும்
காளான் போல அத்தைக்கு மீசை
முளைத்து  துளிர் விட்டதோ-என்று
நெல்லை சம்பவம் நினைக்கத் தோன்ற வில்லையா!

வாங்கிய கடனை அடைக்க நெல்லையை விட்டு
கோவைக்கு வேலைதேடி சென்றாலும்
விடுவதாக இல்லையே  கந்துவட்டி
கலங்கினான் இசக்கிமுத்து!

கந்துவட்டியர், காவல்துறையினர் மறுபுறம்
கோர பிடியினை நெருக்கையிலே-மதுரை
 பாண்டிய மன்னர் சபையில் கண்ணகி நீதிகேட்டது போல
 நெல்லைக் கலைக்டர் அலுவலகம் வந்தான் நீதி கேட்க

ஏழைக்கு அவ்வளவு சீக்கிரத்தில் அனுமதி கிடைக்குமா
அந்தப் புற கலைக்டரை சந்திக்க காத்திருந்தான் இசக்கிமுத்து
அலறியது கைபேசி-கடும் குரல் எழுப்பிபேசியவர்
காவல் அதிகாரி கந்துவட்டிக்காரருக்கு ஆதரவாக

ஏழையின் குரல் எங்கே ஒலிக்கப் போகின்றது
போக்கற்றவனுக்கு புகலிடம் 'கிருஷ்னா' ஆயில் தான்
ரேஷன் கார்டுக்கு கிடைக்காத மண்ணெண்ணெய்
இசக்கிமுத்துவின் குடும்ப உயிரை பறிக்க உதவியது!

தீயின் கோர பிடியில் நான்கு உயிர்கள் பலர் முன்னிலையில்
கருகியபோது-கருணை உள்ளங்கள் கையில் கிடைத்ததை வைத்து
அணைக்க முற்பட்டனர்-ஆனால் கையில் கேமராவுடன்
படம் பிடித்தனர் பரபரப்பு செய்திபோட பத்திரிக்கையாளர்!

கண்டன குரல்கள் வந்தாலும் 'பத்திரிக்கை தர்மம்' என்றனர்
கல்நெஞ்சையும் கரைக்கும் சம்பவம் கருகிய நிகழ்வு
தங்கள் வீட்டில் நடந்தால் படம் பிடிப்பார்களா-என்று
கேள்விக் கணை எழுப்பாதோர் இல்லையென்றே சொல்லலாம்.

   2010ம் ஆண்டு இதே நெல்லையில் அமைச்சர் பெருமக்கள்
பவனி வர சீருடை பாதுகாப்புப் பணியில் இருந்த
உதவி ஆய்வாளர் நடு ரோட்டில் வெட்டி சாய்த்தபோது
நாவறண்டு தண்ணீர் கேட்டவனுக்கு-எட்டி நின்று

தண்ணீர் வாயிலில் ஊற்றிய மந்திரி பாதுகாவலனைக்
கண்டு வெகுண்டனர்-மக்கள்
அருகில் இருந்த மந்திரிகள், மாவட்ட ஆட்சியர்
கார்களில் காயம்பட்டவரை மருத்துவ மனைக்கு

அனுப்பாமல்-காத்திருந்தனர் ஒருமணி நேரம் அவசர ஊர்திக்காக
 கொடுங்காயம் பட்ட உயிர் காப்பாற்ற முடிந்ததா இல்லையே
அடுத்த வருடம் மந்திரி பதவியும் பறிபோனது
அதனையும் படம் பிடித்தனர் பத்திரிக்கையாளர்.

இசக்கிமுத்து குடும்ப சாவிற்கு காவல்துறையும்
கலெக்டரும் பல காரணங்கள் சொன்னாலும்
வழக்கமான சாக்குப் போக்குத் தான் என
அறியாதவர்களா மக்கள்!

வரதட்சணை சாவுகள் இருந்தாலும்
தீப்பற்றிய பெண் தனக்குத் தானே
வைத்துக் கொண்டது என்று
சொல்லாத மாமியார் இல்லையா!

அதே போன்றுதான் ஆதிக்க சக்தியின்
சப்பைக் கட்டும் -சட்டம்
இனியும் ஒரு இருட்டறையா
எனி கேட்காதோர் உண்டா!

இசக்கிமுத்துவிற்கு ஏற்பட்ட கொடுமை போன்று
இச்சமுதாயத்திற்கு ஏற்பட்டுவிடக் கூடாதென்று
1400 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணலார் நபியவர்கள் 
வட்டி இணைவைப்பதினைவிட பாவமானது என்கிறார்கள்

ஆனாலும் அந்த புரையோடிய பழக்கம் இன்னும்
நமது சமுதாயத்திலும் இருக்கின்றது என்று
2014ல் உயர் நீதிமன்றத்தில் இரு முஸ்லிம்
வியாபாரிகளிடையே நடந்தது வியப்புத் தானே!

ஒரு காலத்தில் பள்ளப்பட்டி என்றாலே
வட்டித் தொழிலுக்கு பேர் போனது என்பர்
அந்த பழிச் நீக்கி வட்டியினை ஒழித்த ஊர்
 பள்ளப்பட்டி என்று இன்று விலங்க வில்லையா !

அதேபோன்று தான் இளையான்குடி-புதூர்
வியாபார பெருமக்கள் ஒரு காலத்தின் 
வட்டித் தொழில் வழக்கத்தினை -மாற்றி
வட்டியில்லா ஊர் என்ற பதாகை காணலாம் இன்று!

கந்து வட்டித் தொழிலை சட்டங்கள் கொண்டு
ஒழிக்கும் முயற்சி ஒருவேளை தோற்றுப் போகலாம்-ஆனால்
சமுதாய மக்கள் நினைத்தால் அரவே ஒழித்து விடலாம்
என்ற எடுத்துக் காட்டு பள்ளபட்டியும்-புதூரும் எடுத்துக்காட்டு!

ஒன்று படுவோம்  வென்று காட்டுவோம்
கந்து வட்டிக் கொடுமை அறுத்தெறிவோம்
வரதட்சணைப்  பேயினை
முறம் கொண்டு விரட்டிடுவோமே! 

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  / கவிஞர்
சமூக ஆர்வலர்

1 comment:

  1. இசக்கி முத்து குடும்பம் தீக்கிரையாக்க காரணமா காவல்துறை அதிகாரிகளும் மாவட்ட கலெக்டரரும் தான் ., கந்துவட்டி சட்டமிருந்தும் அரசு அதிகாரிகள் அதில் கவனம் செலுத்தவில்லை. நாலு உயிரிகள் போனப்பிறகு அரசு துரித நடவடிக்கை எடுப்பது ஒரு கந்துடைப்பு., நாலுநாளைக்கு பேசுவார்கள் பிறகு அதனை மறந்து வேறொன்றில் கவனம் போய்விடும். பச்சிளம் குழந்தை பற்றியெரிய அதனை படம்பிடித்தவர்கள் ரோபோக்களாக மாறிவிட்டார்கள் அதோடு மனிதநேயம் செத்து விட்டது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.