.

Pages

Friday, July 20, 2018

அதிராம்பட்டினம் ~ முத்துப்பேட்டை இடையேயான பாதையில் சரக்கு ரயில் மூலம் நிரந்தர தண்டவாளம் பொருத்தும் பணி தீவிரம் (படங்கள்)

அதிரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு ரயில்
அதிராம்பட்டினம், ஜூலை 20
காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 2 ந் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை வாரம் (திங்கட்கிழமை, வியாழக்கிழமை) இருமுறை இயக்கப்பட்டு வருகின்றன. அதன் எஞ்சிய பகுதியான, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பட்டுக்கோட்டை ~ அதிராம்பட்டினம் ~ முத்துப்பேட்டை செல்லும் பாதையில் தற்காலிக தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாதையில் கடந்த ஜூன் 23 ந் தேதி தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை பொறியாளர் காளிமுத்து டிராலியில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.

பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம் வழியாக திருத்துறைப்பூண்டி வரையிலான சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக, பள்ளிக்கொண்டான் முதல் அதிராம்பட்டினம் ரயில்
நிலையம் வரையிலான பாதையில் டெல்லியிலிருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட  260 மீட்டர் நீளமுள்ள நிரந்தரத் தண்டவாளங்களை ரயில் பாதையில் இறக்கி வைக்கும் பணிகள் கடந்த (ஜூலை 12) வியாழக்கிழமை தொடங்கியது.

இந்நிலையில், 2-வது கட்டமாக, அதிராம்பட்டினம் ரயில் நிலையம் முதல் முத்துப்பேட்டை செல்லும் சுமார் 8 கிலோ மீட்டர் பாதையில் நிரந்தரத் தண்டவாளங்கள் இறக்கி வைக்கும் பணி இன்று வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. இதில், சரக்கு ரயிலில் ஒரு வரிசையில் 12 தண்டவாளங்கள் என மொத்தம் 5 அடுக்குகளில் வைக்கப்பட்டு இருக்கும் புதிய தண்டவாளங்கள் ரயில் பாதையில் இறக்கி வைக்கப்படுகின்றன. இதற்கான பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பாதையில் ஏற்கனவே தற்காலிகமாக பொருத்தப்பட்டு உள்ள தண்டவாளங்களை அகற்றிவிட்டு, நிரந்தரத் தண்டவாளங்கள் பொருத்த இருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிரை ரயில் நிலையத்திலிருந்து...
எம்.நிஜாமுதீன் (சேக்கனா நிஜாம்)
ஏ.சாகுல் ஹமீது
 

3 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.