திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபை, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு விமான சேவையும், சென்னைக்கு உள்நாட்டு விமான சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கடந்த 2016-2017 ஆம் ஆண்டில் 13, 59,447 பேர் திருச்சி வழியாக விமானங்களில் பயணித்துள்ளனர்.
நாட்டிலேயே அதிவேகமான வளர்ச்சியைப் பெரும் விமான நிலையங்களில் திருச்சி முக்கிய இடத்தை பிடித்துள்ளதால், இங்கிருந்து பிற நாடுகளுக்கு விமானங்களை இயக்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே, திருச்சி விமான நிலையத்தை விரிவு படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஆண்டுக்கு 3.52 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில், புதிய பயணிகள் முனையம், வான் போக்குவரத்து கட்டுப்பாடு அறை உள்ளிட்டவற்றை கொண்ட புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டம் திட்டமிடப்பட்டது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் துறைகளிடமிருந்து தடையில்லா சான்றுகள் கிடைத்துவிட்ட நிலையில், உட்கட்டமைப்பு பணிகள் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இஜிஐஎஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிறுவனம், புதிய முனையத்துக்கான கட்டிட வரைபடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான திட்ட விரிவான அறிக்கையின் முதல் பகுதியை அண்மையில் சமர்ப்பித்தது. இதற்கு இந்திய விமான நிலைய ஆணையக்குழுமத்தினர் கொள்கை ரீதியிலான ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதையொட்டி, புதிய முனையம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மண் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் கி.குணசேகரனிடம் கேட்டபோது; 'திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்துக்கான வரை படத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையக்குழுமம் கொள்கை ரீதியிலான ஒப்புதல் அளித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள விமான நிலையங்களைப் போல, திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. மண் பரிசோதனை, விரிவான திட்ட அறிக்கை உள்ளிட்ட பணிகள் முடிவடைந்த பின், ரூ.920 கோடியில் ஒருங்கிணைந்த புதிய முனையத்துக்கான கட்டுமானப் பணிகள் 2018 ஆம் ஆண்டில் தொடங்கும்' என்றார்.

உலகத்தரத்துக்கு விமனநிலையத்தை மாற்றினாலும் லஞ்சம் வாங்குவதில் மாற்றமில்லை., அதிகாரிகள் நேரடியாக பணத்தை வாங்குவதில்லை அதிகாரிகளுடைய பினாமி அக்கௌண்டில் போடசொல்லுகிறான்., நம் மக்களுக்கு அதிகமாக அரசின் விதிமுறைகள் தெரிவதில்லை அதனைப்பற்றி தெரியாததால் அவன் கேட்கும் பணத்தை கொடுக்கிறோம்., மக்களே ! எதை எவ்வளவு கொண்டுபோகலாம் என்பதை Online மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள் - தவறான தகவலை நம்பி ஏமாற வேண்டாம்
ReplyDelete