.

Pages

Friday, July 19, 2019

தஞ்சை விமானப்படை நிலையத்தில் ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சி (படங்கள்)

தஞ்சாவூர், ஜூலை 19
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் விமானப் படை நிலையத்தில் ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் நாள் கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சி ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்படுகிறது. இதன்படி, 20ஆம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி, தஞ்சாவூர் விமானப் படை நிலையத்தில் சாரங் ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், கோவை அருகேயுள்ள சூலூர் விமானப் படை நிலையத்திலிருந்து சாரங் (மயில்) என்கிற 4 ஹெலிகாப்டர்கள் மூலம் இந்த சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஹெலிகாப்டரிலும் தலா ஒரு பைலட், உதவி பைலட் என மொத்தம் 8 பேர் இடம்பெற்றிருந்தனர். இந்த ஹெலிகாப்டர்கள் குறுக்கிலும், நெடுக்கிலுமாக சென்றும், பல்டி அடித்தும் சாகசங்கள் நிகழ்த்தின. இதை சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கண்டுகளித்து, கரவொலி எழுப்பினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தஞ்சாவூர் விமானப் படை நிலைய அணி தளபதி பிரஜூல் சிங் தெரிவித்தது:
கார்கில் வெற்றியைக் கொண்டாடும் வகையில், இந்த சாரங் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்திய விமானப் படையில் எதிர்காலத்தில் இளைய தலைமுறையினர் அதிக அளவில் சேர முன்வருவது தொடர்பாக மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

பின்னர், சாரங் ஹெலிகாப்டரில் சாகசம் நிகழ்த்திய பைலட் கார்த்திக் கூறுகையில், இந்த சாகச நிகழ்ச்சியில் 100 அடி முதல் 500 அடி வரை உயரத்தில் பறந்தோம். இந்திய விமானப் படையில் மாணவ, மாணவிகள் சேர முன்வருவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

சிறு வயதில் இதுபோன்ற நிகழ்ச்சியைப் பார்த்துதான் எனக்கு மனதில் உந்துதல் ஏற்பட்டு, விமானப் படையில் சேர்ந்தேன் என்றார் கார்த்திக்.
இந்த விழாவில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜெ. லோகநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், மாநகராட்சி ஆணையர் பு. ஜானகி ரவீந்திரன், இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழக இயக்குநர் சி. அனந்தராமகிருஷ்ணன், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.