.

Pages

Wednesday, August 23, 2017

சவுதியில் 61 போலி ஹஜ் சர்வீஸ் அலுவலகங்கள் மீது அதிரடி நடவடிக்கை !

அதிரை நியூஸ்: ஆக. 23
இந்த ஹஜ் சீஸனின் ஆரம்பத்தில் அனுமதியில்லாத 61 ஹஜ் ஏற்பாட்டு அலுவலகங்கள் மூடப்பட்டதாகவும், ஹஜ் ஏற்பாட்டு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 10,533 சவுதி அரேபியர்கள் மற்றும் 213,541 வெளிநாட்டவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹஜ் பாதுகாப்புப் படையின் துணை கமான்டர் மேஜர் ஜெனரல் ஜமான் அல் காம்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறு வரை தினந்தோறும் சராசரியாக 340,929 வாகனங்கள் புனித மக்காவினுள் பிரவேசித்தும் வெளியேறியும் உள்ளன. அதேவேளை சாலை எல்லைகள் வழியாக சராசரியாக 1,333 பேருந்துகள் ஹஜ்ஜூக்காக உள்ளே வந்துள்ளன.

இதுவரை எந்த சாலை விபத்துக்களும் பதிவாகாத நிலையிலும் தொடர் தீவிர கண்காணிப்பின் கீழ் சாலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்களில் காயமடைவோருக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன. புனித மக்கா மற்றும் புனித ஸ்தலங்களைச் சுற்றி சுமார் 72 பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் கூடுதலாக 32 மையங்கள் புனித ஹரம் ஷரீஃபை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

மக்கா உட்பட அனைத்து புனித ஸ்தலங்களிம் ஏராளமான ரகசிய போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜித்தா, தாயிப், லெயித், சாயில் மற்றும் மதினாவை சுற்றியும் பாதுகாப்பு படையினர் அத்துமீறி உள்நுழையும் ஊடுருவல்காரர்களை பிடிப்பதற்காக 24 மணிநேரமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புனித மக்காவின் கவர்னர் இளவரசர் காலித் அல் பைஸல் கூறும் போது, ஈரானிய ஹஜ் யாத்ரீகர்களுக்காக எத்தகைய தனிச்சிறப்பு வசதிகளோ அல்லது வாக்குறுதிகளோ தரப்படவில்லை என்றும் ஹஜ் செய்ய வந்துள்ள பிற அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு தரப்படும் அதே வசதிகள் மட்டுமே ஈரானிய ஹஜ் பயணிகளுக்கும் சம அளவில் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டிலிருந்தும் ஹஜ் யாத்ரீகர்கள் நஜ்ரான் மாகாணத்தின் சஹாரா பிரதேசத்தில் அமைந்துள்ள 'அல் வஹீதா' சாலை எல்லை வழியாக ஹஜ்ஜூக்காக வந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு மருந்துகள், மருத்துவ சிகிச்சைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு கையேடுகள் அனைத்தையும் வழங்கி வருவதுடன் சவுதி செம்பிறைச் சங்கத்தின் சார்பாக ஏமன் ஹஜ் பயணிகள் எல்லை வழியாக உள்நுழைவதிலிருந்து மக்காவை அடையும் வரை 11 முக்கிய இடங்களில் ஆம்புலன்ஸ்களும் மருத்துவ உதவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வல்லரசுகளால் ஏழையாக்கப்பட்ட நாடான ஆப்கானிற்கு 30,000 ஹஜ் கோட்ட வழங்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வரும் ஹஜ் பயணிகளில் பலர் வறுமையாலும், போராலும், பசியாலும் பாதிக்கப்பட்டவர்கள். இத்தகையவர் ஹஜ் செய்ய வரும் போது உறவினர்களுக்கு விருந்து தருவதும் ஹஜ்ஜிலிருந்து திரும்பும் போது மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொண்டு செல்வது போன்ற அனாவசிய பழக்கங்கள் நிலவுகின்றன, இந்த பழக்கங்களை ஆப்கானியர்கள் கைவிட வேண்டும் என்றும், முதன்முறையாக ஹஜ் செய்ய விரும்பும் பலருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் மீண்டும் மீண்டும் ஹஜ் செய்வதை ஆப்கானியர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் ஆப்கானிலிருந்து ஹஜ்ஜூக்கு வருகை தந்துள்ள ஹஜ் யாத்ரீகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.