அதிராம்பட்டினம் அடுத்த துவரங்குறிச்சி கிராமத்தில் கஜா புயலில் சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் தூக்கி நிமிர்த்தி, மண் அணைத்து மறு வாழ்வு கொடுக்கும் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
துவரங்குறிச்சி லயன்ஸ் சங்கத் தலைவர் லட்சுமணன் தலைமையில், திருவையாறு தென்னை விஞ்ஞானி டாக்டர் வா.செ.செல்வம் செயல் விளக்கம் செய்து காட்டினார்.
5 வயது முதல் 10 வயதுக்குள்பட்ட தென்னை மரங்களின் தலைப்பகுதியில் சுமார் 10 மட்டைகளை வெட்டி, தேங்காய், இளநீர் குலைகளை அப்புறப்படுத்தி, அதன் எடையை குறைத்து, ஒரு ஜேசிபி இயந்திரம் மூலம் தூக்கி, தாங்கிப் பிடித்து நிலைநிறுத்திக் கொடுக்க, 2-வது ஜேசிபி இயந்திரம் மூலம் மரத்தை பழைய நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி, மண் அணைத்து குச்சி கட்டப்பட்டது.
அப்போது, திருவையாறு தென்னை விஞ்ஞானி டாக்டர் வா.செ.செல்வம் கூறுகையில், அறுபடாமல் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சுமார் 50, 100 வேர்கள் மூலம் தண்ணீரையும், சத்துக்களையும் எடுத்துக் கொண்டு சாய்ந்த மரம் மீண்டும் தழைக்கத் தொடங்கும். சுமார் 90 முதல் 100 நாள்களில் தூர்ப்பகுதியில் புது வேர்கள் வளர்ந்து மரம் உயிர் பெற்று பழைய நிலைக்கு வந்து விடும் என்றார்.
முகாமில் பங்கேற்ற மதுக்கூர், பட்டுக்கோட்டை, மன்னங்காடு, பேராவூரணி, முத்துப்பேட்டை, துவரங்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள் கனகசபை, சிதம்பரம், பன்னீர்செல்வம் மற்றும் நூற்றுகணக்கான விவசாயிகள் தென்னை விஞ்ஞானி டாக்டர் வா.செ.செல்வம் நடத்திய இப்பயிற்சி முகாம் பாராட்டுக்குரியது என்றனர்.
அவர் தென்னை மரங்களுக்கு மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கும் மறுவாழ்வு தந்துள்ளார். தற்போது 10 வயதுக்குள்பட்ட விழுந்து கிடக்கும் தென்னை மரங்களும் பிழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையும் தங்களுக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர்.
லயன்ஸ் சங்க மண்டலத் தலைவர் ஸ்ரீராம் மற்றும் உறுப்பினர்களும் முகாமில் கலந்து கொண்டனர். துவரங்குறிச்சி லயன்ஸ் சங்கச் செயலர் சதீஷ்குமார் வரவேற்றார். அன்வர் நன்றி கூறினார்
நல்ல முயற்சிகள்.. வெற்றி பெற வேண்டும்.. சரியாக கவணிக்க வேண்டும்..
ReplyDeleteநல்ல தகவல் தந்த அதிரை நியூஸ் க்கு ஒரு வாழ்த்து.
ReplyDelete